Friday, December 12, 2008

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது


அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..!

Wednesday, December 10, 2008

2009ம் ஆண்டு இலங்கை வறுமை நிலையை அடையலாம்: உலக வங்கி எச்சரிக்கை


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் 2009ம் வருடம் நான்கு வீதமாக குறைவடையலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள "2009 ஆம் ஆண்டுக்கான உலகின் பொருளாதார நிலை" எனும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2009 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறான ஒரு சரிவை சந்திக்கலாம், அதன் பொருளாதார வளர்ச்சி நான்கு வீதமாக குறைவடையலாம்.

இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 வீதமாகும். ஆனால் அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடி மிகுந்த ஆண்டாகவே இருக்கும்.

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளே இந்த பாதிப்புக்கான காரணங்கள். இந்த பாதிப்புக்கள் தென்னாசிய பிராந்தியத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற தமது கணிப்புக்களை அடுத்த மாதமே தெரிவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆணையாளர் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது, 2009 ஆம் ஆண்டு ஏழு வீதம் பொருளாதார வளர்ச்சிகள் எட்டப்படும் என கவர்ச்சிகரமாக விளப்பரப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, November 20, 2008

இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்

இலங்கை இறைமைக்கு வைத்த வேட்டு
இலங்கை அரசாங்கம் கிழக்கிலே யுத்தத்தை நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப் பதாகவும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து கொண்டிருப்பதாகவும் அறிவித்துக் கொண்டிருக்கையில், மின்னாமல் முழங்காமல் கடந்த மார்ச் 5ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பியோக்கும் இந்த “நசுக்கிடாமல்” நடந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பி.பி.சியின் சந்தேசிய சிங்கள சேவையில். ஓப்பந்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசின்சார்பில் அறிவித்த கெஹெலிய ரம்புக்வெல அறிவித்ததோடு சரி. இன்றுவரை எந்த விபரமும் வெளிவரவில்லை. புலிகளின் வீழ்ச்சியில் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கைக்கு மேலும் சந்தோசம் ஊட்டவென்று சொல்வதற்கு ரம்புக்வெல வுக்கு நிறையவே தகவல்கள் இருப்பதால் அவரிடம் யாரும் இது பற்றிக் கேட்கவில்லை.

ஆனால் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் இந்த ஒப்பந்தம் பற்றி இவ்வாறு தெரிவித்தது. இந்த ஒப்பந் தம் இலங்கை. அமெரிக்க அரசுகளுக்கு போக்கு வரத்துத் தொடர்பான வழங்கல்களை மாற்றிக் கொள் ளவும், வழங்கவும், உதவி மற்றும் எரிபொருள்த் தேவைகளை விருப்பத்தின் பேரிலோ அல்லது விலை க்கோ செய்யவும், சமாதான பாதுகாப்பு நடவடிக்கை களின் போதும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும் வேண்டிய கூட்டு நடவடிக்கைகளுக்கும் இது உதவுகிறது. 'புதிய கொள்வனவுகள் மற்றும் மாற்றுச் சேவைகள் ஒப்பந்தம்' (வுhந நெற யுஉஙரளைவைழைn யனெ ஊசழளள ளுநசஎiஉiபெ யுபசநநஅநவெ) என்ற பெயரில் கைச்சாத்தான இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு இன்னுமொரு இராணுவத் தளத்தை உருவாக்கு வதற்கான ஒரு ஒப்பந்தமே என்பதை காலம் விரைவில் உணர்த்தப் போகிறது.

உண்மையில் இத்தகையதொரு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான முயற்சி 2002 இலேயே நடந் தது. அப்போது இலங்கை வந்த கிறிஸ்டினா றொக்காவின் தலைமையிலான குழு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பாதுகாப் பமைச்சர் திலக் மாரப்பணவுடனும் இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 2002 யூ=லை 22 இல் கைச்சாத்திட இருந்த இது போன்ற ஒரு ஒப்பந்தம், இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை வெளிக் காட்டியமையினால் கைவிடப்பட்டது. இது பின்னர் 2004 இல் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் அமெரிக் கர்களுடனான சந்திப்பின் போது, தாம் இந்த ஒப்பந்தத்திற்கு தயார் என அறிவித்ததை அடுத்து மீள வும் இது முடுக்கி விடப்பட்டது. ஆயினும் பின்னர் அது கைச்சாத் தாகவில்லை. அந்த ஒப்பந்தம் தான் இப்பொழுது யாரும் அறியாத நேரத்தில் “நசுக்கிடாமல்" கைச்சாத் தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 90ஆவது நாடாக இலங்கை ஆகியுள்ளது. இதுவரை 89 நாடுகள் ஏற்கெனவே கைச்சாத் திட்டிருப்பதால், இந்த ஒப்பந்தத் தின் விளைவுகள் எப்படிப்பட்ட வை என்று அறிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. ஆயினும் மார்ச் 5ஆம் திகதி கைச்சாத்தான இந்த ஒப்பந்தம் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரிய வில்லை.

இந்த ACSA ஒப்பந்தத்தின் உண்மையான அர்த்தம் தான் என்ன? இந்த ஒப்பந்தத்ததைப் பற்றி மேலோட்டமாகப் பார்க்கையில் தெரிவது என்னவென்றால், அது அமெரிக்க இராணுவம் பரஸ்பர போக்குவரத்துத் தளபாட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சட்டபூர்வ கட்டமைப்பாக மட்டுமே தோன்றும். ஆனால் இதற்குப் பல ஆழமான அர்த்தங்கள் உண்டு. இந்த ஒப்பந்த மூலமாக, வெளிநாட்டு இராணுவ விற்பனைகள் மிகவும் வினைத்திற னுள்ள முறையில் செயற்படுத்தப் பட முடியும். ஆரம்பத்தில் Nயுவுழு நாடுகளுக் கிடையில் இருந்து வந்த ஒத்துழைப்புச் சட்டம் பலமுறை இருந்து வந்த பல்வேறு மூலோபாய நோக்கங்களுக்காக திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டு Nயுவுழு அல்லாத நாடுகளும் சேர்ந்து கொள்ளக் கூடிய நிலைக்கு மாற்றப் பட்டுள்ளது. இப்போது கைச்சாத் தான ஒப்பந்தமும் அப்படி மாற்ற ப்பட்ட ஒப்பந்ததமே மார்ச் 5ஆம் திகதி ஒப்பமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, அதன் ஆரம்பத் திலேயே அமெரிக்காவின் பயங்கர வாதஒழிப்பும், இறையாண்மை யைக் காத்தலும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்து கிறது. இந்த ஒப்பந்தத்தில் இதை விட பல மிக முக்கியமான விடயங் கள் கவனிக்கப்படாமலேயே விடப் பட்டுள்ளன. முக்கியமான விடயம் என்ன வென்றால், இந்த ஒப்பந்தத் திற்கு Nயுவுழு வில் இல்லாத ஒரு நாடு தெரிவு செய்யப்படுவதற்கு எந் தெந்த அடிப்படைத்தகுதிகள் அவசியம் என்பதாகும். இதை யாரும் கவனிக்கவில்லை. Nயுவுழு இல் அங்கம் வகிக்காத ஒரு நாடு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமானால் அது இத்தகைய தகுதிளை அல்லது அவற்றில் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும். அது அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் இருத்தல் வேண்டும். அல்லது அமெரிக்கப் படை வந்து தங்க அனுமதிக்க வேண்டும், அல்லது அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அங்கு வருவதை அனுமதிக்க வேண்டும், அல்லது அமெரிக்கப் படைகள் தமது நடவ டிக்கைகளை அந்த நாட்டில் செய்ய அனுமதிக்க வேண் டும்.

இந்தத் தகவல்களை அமெரிக்க அரசின் பாதுகாப்புக் கட்டளை களிற் காணலாம். இன்னும் பல இரகசியக் கட்டளைகள் வெளி யிடப்படாமல் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதை அனுமதிக்காது என்று அமெரிக்காவால் கூறப்படுகின்ற போதும், இலங்கையிலுள்ள அமெ ரிக்கத் தூதராலயம் வெளியிட்ட அறிவிப்பில் ஆயுதம் வழங்குவது தொடர்பான விபரமான குறிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்த விதமான விசாரணையும் இல்லாமல் எந்த விதமான யுத்த ஆயதங்களும் இதன் மூலம் வழங்கப்பட முடியாது என்று கொழும்பு ஊடகங்கள் அரச அறிவித்தலைத் திரும்பத் திரும்பத் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஒப்பந் தத்தின் பின்னரும் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படும் பொருட் களில் எண்ணெய், ஒயில், உதிரிப் பாகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்பட்டி யலின் இறுதியில் இவ் ஒப்பந்தத் தில் கைச்சாத்திடும் நாடுகளுக்கு அனுமதித்திருக்கும் ஆயுதங்களில் சிறியரக ஆயுதங்கள், தோட்டாக் கள், மோட்டார்கள், தானியங்கிப் பீரங்கிகள், எறிணைகள், கப்பற் துவக்குத் தோட்டாக்கள், தொகு திக்குண்டுகள் (ஊடரளவநச டீழஅடிள) நிலைக் கண்ணிகள், எறிகுண்டுகள் என்று ஒரு பெரும்பட்டியலே இருக்கிறது. இதுதான் இந்த ஒப்பந்தத்தின் உண்மை நிலைமை.

மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவில் அமெரிக்கா தனது இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத் துவதில் பிலிப்பைன்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தப் பட்டு வந்தது. பிலிப்பைன்ஸில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் ஏற்படுத்திய நிலைமை எமக்கு ஒரு நல்ல உதாரணமாகும். மின்டனோ எழுச்சியைத் தொடர்ந்து வந்த சுதந்திரப் போராட்டம் இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட அமெரிக்க இராணு வத்தை அங்கு குவிக்கக் காரண மாக மாறியது. பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட கடற்படை மற்றும் விமானப் படைத் தளங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எவ்வாறு பயன்பட்டன என்பது வரலாறு. கொரிய யுத்தம் மற்றும் விக்ரோறியன் யுத்தம் போன்ற வற்றிற்கு எவ்வாறு பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் செயற்பாட்டுத் தளமாக இருந்தது என்பது ஒன்றும் மறந்து போன கதையல்ல.

அமெரிக்காவின் இந்த புதிய வழியிலான ACSA ஒப்பந்தம் ஒன்று 1992 நவம்பரில் பிலிப்பை ன்ஸில் கைச்சாத்திடப்பட்டது. ஆமெரிக்கர்கள் இந்த ஒப்பந்த த்தை ஒரு மிகச் சிறப்பான நட்பு ரீதியான ஒரு ஒப்பந்தம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை இலங்கையிலுள்ள யாரும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தமது நீண்ட கால அமெரிக்க அடக்கு முறை அனுப வத்தின் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்கள் இந்த ஒப்பந்தத்தில் மறைந் திருக்கும் நோக்கங்களை அறிந்து கொண்டார்கள். ஒரு பலமான எதிர்ப்புப் போராட்டமொன்றை அவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தினார்கள். அவர்களது போராட்டம் இன்னமும் தொடர் கிறது.

இலங்கையில் செய்து கொள்ளப் பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக் காவின் செயற்பாடுகளை இலங்கை யில் அதிகரிப்பதற்கான ஒரு திட்ட மே. பாரசீகக் குடாப் பிராந்தியத் திலும் மத்திய ஆசியாவிலும் இன்றுள்ள உலக அதிகார அரசி யல் நிகழ்ச்சி நிரல்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை முன்னெப்போ தையையும் விட அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் இலங்கையுட னான ஒப்பந்தம் இந்த முக்கியத்து வத்தை கணக்கிலெடுத்துச் செய்யப் பட்ட ஒரு இராணுவ நோக்கிலான ஒப்பந்தமே. கிழக்கை விடுவிப் பதில் எந்த இறைமையைத் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் இன்று யுத்தத்தில் இறங்கியிருக்கிறதோ, அந்த இறை மையை அமெரிக்காவிடம் ஒரு கைச்சாத்தின் மூலம் வழங்கிவிட்டி ருக்கிறது. இந்த இறைமை இழப்புக்கு இக்கை ச்சாத்து ஒரு ஆரம்பம் மட்டுமே. விளைவுகள் இனித்தான் வெளித் தெரியப் போகின்றன

Tuesday, November 11, 2008

மன கவலைகளுக்கு பக்க விளைவற்ற அக்குபஞ்சர் சிகிச்சை


யானைப் பாகர்கள் அங்குசம் என்ற குச்சியின் முனையில் உள்ள சிறு ஊசியால் யானையின் உடலில் குத்தி, யானைகளைத் தங்களது கட்டுபாட்டில் வைத்திருப்பதை நாம் பல முறை பார்த்திருப்போம். இந்த முறையினை சற்று உற்று நோக்கினால், சீனர்கள் இந்த உலகிற்கு வழங்கிய மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை நம் கண்முன் வந்து போகும். இந்த நிலையில், இந்த மருத்துவ முறையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் குணப்படுத்தியவருமான டாக்டர் திருமதி கலா தியாகராசாவை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, இந்த மருத்துவ முறை குறித்து, எம் மக்களின் சந்தேகங்களை கேட்டோம்.

· சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம், மற்ற சிகிச்சை முறைகளிலிருந்து எப்படி வேறுபட்டு, பலனைத் தருகிறது?

அக்கு என்றால் ஊசி என்றும், பஞ்சர் என்றால் குத்துவது என்றும் பொருள். சீனர்களால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த மருத்துவமுறை. மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆங்கில மருத்துவம், ஆயுள்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல மருத்துவ முறைகளில், மருந்து, மாத்திரைகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் மருந்து, மாத்திரைகள் எதுவுமின்றி, சிறு ஊசிகளை மனித உடலில் குறிப்பிட்ட இடத்தில் குத்தி, அதன் மூலம் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசை ஆகியவற்றின் செயல்திறனை ஊக்குவிக்கும் மருத்துவமுறை தான் இந்த அக்குபஞ்சர் மருத்துவமுறை. இந்த மருத்துவ முறையை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.

நமது உடலில் பதினான்கு சக்தியளிக்கும் ஓட்டப்பாதைகள் உள்ளன. இந்த ஓட்டப் பாதைகளில் புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில், ஊசிகளைக் கொண்டு, அக்கு பஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தில் நோயினால் தாக்கப்பட்ட பகுதியில் நேரடியாக சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் அக்குபஞ்சர் முறையில்,நேர் எதிரான ஓட்டப்பாதையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தீ விபத்தால் பாதிக்கப் பட்ட உறுப்புகளுக்கு நுரையீரல் மற்றும் பெருங்குடல் தொடர்புடைய ஓட்டப்பாதையில் இருக்கும் புள்ளிகளில் சிகிச்சையளித்து குணமாக்குகிறோம். இதன் மூலம் நமது உடலில் உள்ள உறுப்புகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

· இம்முறையில் நோயினை எப்படி கண்டறிகிறீர்கள்?

மனிதனின் கைகளில் உள்ள நாடிகளை பிடித்து பார்த்து அறிந்துகொள்கிறோம். இடது மணிகட்டுக்கு கீழே ரேடியம் ரத்தக் குழாயின் மீதிருக்கும் மேலோட்டமான நாடிகளும், அதே இடத்தின் ஆழத்தில் மூன்று நாடிகளும் உள்ளன. அதேபோல் வலது மணிகட்டில் மேலோட்டமாக இருக்கும் மூன்று நாடிகளும், அதன் ஆழத்தில் மூன்று நாடிகளும் உள்ளன. இந்த நாடிகளை பிடித்து பார்ப்பதன் மூலம், மனித உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக அறிந்துக்கொள்ள முடியும்.

· இந்த சிகிச்சை முறையில், உடலில் ஊசி குத்தப்படுவதால் வலி ஏற்படுமே? அதற்காக எப்படி சிகிச்சை வழங்குவீர்கள்?

நாடியை பிடித்து, நோயை கண்டறிந்த பின், சக்தி வழங்கும் ஓட்டப்பாதையில் உள்ள அக்குபஞ்சர் புள்ளியில் சிறு சிறு ஊசிகளை குத்தி, மெதுவாக வலது புறமாக திருப்பி சுற்றி விடுவோம். சுமார் பத்து முதல் இருபது நிமிடம் வரை இந்த ஊசி உடலில் குத்தப்பட்டு இருக்கும். பின் அதனை எடுத்துவிடுவோம். இந்த ஊசிகளை நேரடியாக அக்குபஞ்சர் புள்ளியில் குத்தப்படுவதால், குத்திய இடத்திலிருந்து இரத்தம் வராது. நோயின் தன்மைக்கு ஏற்றவாறு ஊசிகளை குத்துவோம். நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால், இரு தினங்களுக்கு ஒரு முறையும், தாக்கம் குறைவாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் குத்திக்கொண்டால் நோய் குணமாகும். அதே தருணத்தில் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு குத்த வேண்டிய ஊசிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். இது மனித உடலில் உள்ள தசைகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதால், ஒரு முறை தாக்கி, குணமாக்கப்பட்ட நோய், மீண்டும் ஏற்படும் நிலை அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

· இந்த சிகிக்சையின் மூலம் குணமாக்கப்படும் நோய்கள் என்ன?

மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்கள், ஆண்மைக் குறைவு, வலிகள், நரம்பு தொடர்பான நோய்கள், நுரையீரல் தொடர்பான சைனஸ், ஆஸ்துமா, பெண்களுக்கு ஏற்படும் மகப்பேறு மற்றும் மாதவிடாய் கோளாறுகள், வயிறு, குடல் தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள், கண் நோய்கள் ஆகியவற்றை எளிதாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சை முறையில் மருந்துகள் எதுவும் உட்கொள்ளத் தேவையில்லை. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. கட்டணமும் குறைவு.

· சோரியாசிஸ் நோயினை இம்முறை மூலம் குணப்படுத்த முடியுமா?

இலங்கையின் கடலோர பகுதிகளிலும், தமிழகத்தின் எல்லா இடத்திலும் பரவலாக பரவியிருக்கும் இந்த நோய், தலையில் மண்டை ஓட்டின் மேல் பாகத்தில் பொடுகு போல் தோன்றி, பின்னர் உடலில் பல இடங்களில் வட்டமாகவும், சிறிதளவு உயர்ந்தும் காணப்படுகிறது. அதை சொரியும் போது, மீன் செதில் போல், பக்குகள் உதிரும். முழங்கை மடிப்பு, தொடை இடுக்குகளிலும், வயிறு, மூக்கு ஆகிய பாகங்களிலும் இவை அதிகமாக காணப்படும். முறையான மருத்துவத்தை மேற்கொள்ளாவிட்டால், உடல் முழுவதும் பரவி, மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கி, தாங்க இயலாத வலியினை ஏற்படுத்தும். இதனால் கை, கால்களை அசைக்க இயலாமல், ஒரே இடத்தில் முடக்கி விடும். எனவே இதனை ஆங்கில மருத்துவத்தில் 'சோரியாடிக் ஆர்த்திரைட்டீஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நோய்க்கு மற்ற சிகிச்சை முறைகளில் மருத்துவம் பார்த்தால், அவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்கும். இதற்கான நிரந்தர தீர்வை அக்குபஞ்சர் மட்டுமே வழங்குகிறது. இம்முறையில் நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் தொடர்புடைய அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை வழங்கினால், எத்தனை நாள்பட்ட 'சோரியாசிஸ்' நோயையும் குண மாக்கலாம்.

· மன அழுத்தத்திற்கு இந்த முறை மூலம் சிகிச்சை பெற்றால் பூரண பலன் கிடைக்குமா?

இன்றைய தினத்தில் அதிகமானோர் பாதிக்கப்படுவது மன அழுத்தத்தால் தான். காரணம் சொல்ல முடியாத மனக்கவலைகள், தாங்க இயலாத பணிப்பளு ஆகியவைகளைக் குறிப்பிடலாம். அதைவிட கம்பியூட்டரில் பணியாற்றும் தொண்ணூறு சதவீத இளைய சமுதாயத்தினர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்கள் மற்ற மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்தால், பக்க விளைவுகளின் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. ஆனால் அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதற்கான மூல காரணமா கிய தாறுமாறான இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றை சீராக்க முடியும். அதனுடன் உடலுக்கு தேவையான 21 தாது உப்புகளையும், அதன் குறைபாடுகளையும் கண்டறிந்து, 'பெரிகார்டியம்' மற்றும் இருதயம் ஆகிய பகுதிகளில் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால் இவற்றைக் குணப்படுத்த இயலும்.

மேலும் கை, கால்களில் நடுக்கம், மனதை ஓரிடத்தில் நிலைப்படுத்த இயலாமை, உறக்கமின்மை ஆகியவற்றிற்கு தலைப் பகுதிகளில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை அளிப்பதன் மூலம்

குணப்படுத்த முடியும்.

Tuesday, November 4, 2008

பெண்களை பாதிக்கும் இருதய நோய்கள்


நீரிழிவு நோய்

உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது.

மரபியல் காரணங்கள் குடும்பத்தில் பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு இருதய நோய் இருந்தால் அந்தப் பெண்களுக்கும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்பு அதிகம். இதில் நல்ல செய்தி என்னவெனில் இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக் கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.

ஆண்களை ஒப்பிடும்போது இல்லத்தரசிகள் பெரும்பாலும் தங்களைவிட கணவரின் உடல்நலம் பற்றித்தான் அதிகம் கவலைப்படு கிறார்கள். அதிலும் இருதய நோய் போன்ற சில நோய்கள் ஏதோ ஆண்களை மட்டுமே பாதிக்கும் என்பதைப் போல பார்க்கப்படு கிறது. இதனால் ஒரு பெண்ணாக நீங்கள் இருதய நோய்கள் பற்றி தெரிந்திருப்பதும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் மிக அவசியம். எச்சரிக்கை அறிகுறிகள் பெண்களுக்கு ஒரு வேளை சற்று மாறி இருக்கலாம் அல்லது கவனிக்கப்படாமல் இருக்கலாம். உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக் கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண் களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு ஆண்கள் அடையும் நெஞ்சுவலியைப் போல பெண் களுக்கு வராமல் இருக்கலாம். ஆக ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். பெண்களின் இருதயக் கோளாறின் அறிகுறிகள் * மார்பில் அசௌகர்யம், அழுத்துதல், இறுக்கம் அல்லது அதிக பளு போன்ற உணர்வு, நடு மார்பில் வலி, குறிப்பாக இரண்டு மார்பகங்களுக்கு இடையில் அல்லது மார்பு எலும்புக்குப் பின்பாக.

* இந்த அசௌகர்யம் உடலின் மற்ற பாகங்களான கைகளின் மேற்புறம் (ஒன்று அல்லது இரண்டு கைகளிலும்), முதுகு, கழுத்து, தாடை மற்றும் மேல் வயிற்றுக்குப் பரவுதல், மூச்சிரைத்தல், இது தனி யாகவோ அல்லது வசதியற்ற மார்பு நிலையுடன் சேர்ந்தோ இருக்கலாம். மற்ற அறிகுறிகள் விவரிக்க முடியாத சோர்வு, பதற்றம், அதிகப்படியான பதற்றம், ஜீரணமின்மை அல்லது காற்று உருவானது போன்ற வலி,சட்டென்று உருவாகும் ஈர வியர்வை, தலை லேசாகி தளர்ந்து வீழ்தல்.

இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது. மரபு வழி வரும் பிரச்சினை வயது, இனம் போன்ற மாற்ற முடியாதவை சில இருந்தாலும் வேறு சில வழிகளைப் பின்பற்றினால் இருதய நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.

இருதய நோய்களைத் தடுக்கச் செயற்படுங்கள் புகைபிடிக்காதீர்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். இப்படி சில நல்வழிகளைப் பின்பற்றுவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய இருதய நோய்களைத் தடுக்கலாம். இங்கே இருதய நோய்களைத் தடுக்கும் ஐந்து வழிகள் கூறப்பட்டிருக்கின்றன. பின்பற்றுங்கள். புகை பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களைத் தவிர்க்கவும் இருதய நோய்த் தடுப்பு என்ற நிலைக்கு வரும்போது சிறிதளவு புகை பிடித்தலும்கூட பாதுகாப்பானது அல்ல. புகைவிடாத புகையிலை, குறைந்த டார், நிகோடின் சிகரெட் என எதுவும் பாதுகாப்பானது அல்ல. மேலும் புகை பிடிப்பவர் பக்கத்தில் இருப்பதாலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தும். சிகரெட் புகையிலையில் ஏறக்குறைய 4800 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை உங்கள் இருதயத்திற்கும், இரத்தக் குழாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை. இவை இரத்தக் குழாய்களை இறுக்கி விடுகின்றன. (அத்தி ரோஸ்கெலிரோசிஸ்) இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும். இதுதவிர நிகோடின் இரத்தக் குழாய்களை குறுக்குவதால் இருதயத்தை அதிக வேலை செய்ய வைக்கிறது. இருதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் உயர்கிறது. சிகரெட் புகையில் இருக்கிற கார்பன்மோனாக்சைட் இரத்தத்தில் இருக்கிற ஒக்ஸிஜனை வெளியேற்றிவிடுகிறது. இதனால் தேவையான ஒக்ஸிஜனைப் பெற இருதயம் அதிக வேலை செய்ய வேண்டி வருகிறது.தவிர பார்களில் அல்லது நண்பர்களுடன் இருக்கும் போது மட்டும் புகைபிடிப்பது கூட பாதுகாப்பற்றது. இவையும் இருதய நோய்களை உருவாக்கக்கூடிய அபாயம் உண்டு.

புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் இருதயம் பாதிக்கிற அளவு ஒரு வருடத்தில் நம்ப முடியாத அளவிற்குக் குறைந்துவிடுகிறது. எவ்வளவு சிகரெட் பிடித்தீர்கள் என்பதைப் பற்றிய கவலையில்லை. நிறுத்தியவுடன் அதற்கான பலன் கிடைக்கத் தொடங்கி விடும். சுறுசுறுப்பாக இருங்கள்: உடல் உழைப்பு நல்லது என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஆனால் எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடை சரியாக இருப்பது. நல்ல உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் இருதயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது. தவிர இருதயத்தை பாதிக்கும் மற்ற அபாயங்களான உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல் அளவு மற்றும் நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிழும். மேலும் மன அழுத்தமும் குறையும். இதுவும் இருதயப் பிரச்சினைகளுக்கு ஒரு காரணம். ஒரு வாரத்தில் அதிக நாட்களுக்கு குறைந்தது 30, 60 நிமிடமாவது மிதவேக உடற்பயிற்சி செய்யுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேற்சொன்ன அளவில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் உங்கள் முயற்சியை விட்டுவிட வேண்டாம். குறைந்த அளவு பயிற்சியும் இருதயத்திற்குப் பலனளிக்கிறது.

தோட்டவேலை, வீட்டுவேலை, மாடிப்படி ஏறுவது, நாயுடன் நடப்பது என எல்லாமே மொத்த அளவில் சேரும் என்பதை நினைவில் வையுங்கள். கடினமாக உடற்பயிற்சி செய்தால் தான் நல்ல பலன் என்று இல்லை. பயிற்சியின் அளவை அதிகரிப்பது, நேரத்தைக் கூட்டுவது போன்றவை கூட பெரிய பலன்களைத் தரும்.

உங்கள் எடையைக் கவனிப்பது என்பது உங்கள் இருதயத்தைக் கவனிக்கிற ஒரு நல்ல வழி என்பதை மறக்காதீர்கள். 3. இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள்:

தொடர்ந்து பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன. சிலவகை கொழுப்புகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது கூட முக்கியம். இதில் சாச்சுரேடட், பாலிஅன் சாச்சுரேடட், மோனோ அன்சாச்சுரேடட் மற்றும் ட்ரான்ஸ் /பேட் போன்றவை இருதயம் சார்ந்த இரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் அளவை உயர்த்துவதன் மூலம் பாதிக்கின்றன. சாச்சுரேடட் வகை கொழுப்பு அதிகமாக இருப்பவை. வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய், பால் மற்றும் பனை எண்ணெய். இதில் டிரான்ஸ்பேட் வகை கொழுப்பு மிக மோசமானது என்பதற்கு ஆதாரங்கள் பெருகி வருகின்றன. காரணம் இது கெட்ட கொலஸ்டிராலை உயர்த்தி, நல்ல வகை கொலஸ்டிராலை குறைத்து விடுகிறது.

நன்கு வறுக்கப்பட்ட உணவுகள், பேக்கரி பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள் மற்றும் கொறிக்கப்படும் உணவு வகைகளில் டிரான்ஸ்/பேட் அதிகமாக உள்ளது. இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாவற்றையும் நிறுத்திவிடுவது அல்ல. பலருக்கு அவர்கள் உணவோடு பழங்களையும், காய்கறிகளையும் அதிகமாக சேர்க்க வேண்டி இருக்கும்.

பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். இரத்த அழுத்த அளவை சமநிலைப்படுத்தும். ஒமேகா 3 இயற்கையாக மீன்களில் அதிகம் கிடைக்கிறது.

ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது என்பதில் மிதமாக குடிப்பதும் வந்துவிடுகிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு அளவும் பெண்கள் ஒரு அளவும் ஆல்கஹால் பருகுவது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. அதிகமானால் ஆரோக்கியக்கேடு. இதனால் குடிப்பதை இருதயப் பாதுகாப்புக்கு தொடங்கக் கூடாது. ஏற்கெனவே குடிப்பழக்கத்தில் சிக்கியிருக்கிறவர்கள் இருதயத்தைப் பாதுகாக்கத்தான் இந்த வழி.

4. சரியான உடல் எடையைப் பராமரிப்பது

தொடர்ந்து உடற்பயிற்சியும், சரியான உடல் எடையில் இருப்பதும் நீண்ட நாளுக்கு இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் வழி. நடுத்தர வயதில் இருக்கும் போது எடை போடுவது என்பது உடலின் கொழுப்புத் திசுக்கள் சேருவதைக் குறிக்கிறது. இந்த அதிக எடை இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல் அளவு மற்றும் நீரிழிவு நோய் போன்றவை உருவாக வாய்ப்பு அளிக்கிறது. உங்கள் எடை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? ஆஙஐ என்கிற உயரம் மற்றும் எடையைக் கணக்கிடும் அலகின் மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஆஙஐ 25 மற்றும் அதற்கு மேல் இருப்பது அதிக இரத்தக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மூளைவாதம் போன்றவை இருதய நோய்கள் வருவதற்கான அதிக வாய்ப்பு. இந்த ஆஙஐ அளவு ஒரு நல்ல ஆனால் முழுமையற்ற கணக்கீடு. காரணம் நல்ல சதைத் திரட்சியும், மிக ஆரோக்கியமாகவும் இருக்கிற ஆண், பெண்கள் அதிக ஆஙஐ அளவில் இருக்கலாம். இவர்களுக்கு எந்த இருதய பாதிப்பிற்கான அபாயங்களும் இருக்காது. காரணம் கொழுப்பை விட தசையின் எடை அதிகம். இதனால் இடுப்புச் சுற்றளவு வயிற்றுக் கொழுப்பை அளவிட பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஒரு பயனுள்ள வழி. பொதுவாக ஆண்களுக்கு இடுப்புச்சுற்றளவு 40 இன்ச் அளவை விட அதிகம் இருந்தால் அதிக எடையில் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.

பெண்களுக்கு இடுப்புச் சுற்றளவு 35 இன்ச் தாண்டும்போது அதிக எடையில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. இது பொது விதி. குறைந்த அளவு எடை குறைப்பது கூட பயன் தருகிறது. 10 சதவிகிதம் உங்கள் எடை குறைத்தால் இரத்த அழுத்தம் குறைகிறது. அதுவே இரத்த கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

5. தொடர்ந்து உடல்நலப்பரிசோதனை செய்து கொள்வது:

உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால் அளவு, நீரிழிவு நோய் மூன்றும் அமைதியாக அழிவு கொடுப்பவை. இருதயம் உட்பட முழு இருதயம் சார்ந்த அமைப்பு மண்டலத்தை இவை பாதிக்கக்கூடும். ஆனால் பரிசோதனை செய்யாமல் இந்த நோய் இருப்பதை அறிய முடியாது. தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே இவை எந்த அளவில் இருக்கின்றன என்பதையும், சிகிச்சைகள் தேவையா என்பதையும் சொல்லும்.

ழூ இரத்த அழுத்தம் : தொடர்ந்த இரத்த அழுத்த கவனிப்பை சிறுவயதிலிருந்தே தொடங்க வேண்டும். வயது வந்தவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். அளவு சரியாக இல்லை என்றால் அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். அல்லது இருதய பாதிப்பு வரக்கூடிய காரணங்களோடு இருக்கிறவர்கள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். சரியான இரத்த அழுத்த அளவு 120/80. இது வயது வந்தவர்களுக்கு, வயது அதிகரிக்க, அதிகரிக்க அதிக இரத்த அழுத்தம் இருக்கும் என்பது தவறானது.

ழூ கொலஸ்டிரால் அளவு : வயது வந்தவர்கள் குறைந்தது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது கொலஸ்டிரால் அளவைப் பரிசோதிக்க வேண்டும். அளவு சரியாக இல்லை என்றால் அடிக்கடி பரிசோதிக்க வேண்டி வரும். மரபு வழியில் தீவிரமாக இருதயப்பாதிப்புகள் வரக்கூடிய நிலையில் இருக்கும் சில குழந்தைகள் இந்தப் பரிசோதனை தேவைப்படும் நிலையில் இருப்பார்கள். ழூ நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் தொடர்பான மரணங்களுக்கு இருதய நோய்கள்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. காரணம் அதிக சர்க்கரை அளவு இரத்தக்குழாய்களின் இறுக்கத்திற்குத் தொடர்பு உடையது. கூடவே அதிக டிரை கிளிசரைடு, குறைந்த அளவு நல்ல கொலஸ்ட்ரோல், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு என பலவற்றோடு தொடர்பு உடையது. வயது வந்தவர்களிடம் ஏற்படும் இருதய நோய் தொடர்பான மரணம் நீரிழிவு நோய் இருக்கிறவர்களுக்கு, இல்லாதவர்களைவிட 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது.

ஆரோக்கியமான இருதயத்திற்கு பத்து எளிய வழிகள்

1. உடற்பயிற்சி.

2. நிறைய தண்ணீர் குடிப்பது.

3. காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது.

4. ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது.

5. கொலஸ்டிரால் அளவை கவனித்துக் கொள்வது.

6. உப்பின் அளவைக் குறைப்பது.

7. புகைபிடிப்பதை நிறுத்துவது.

8. சரியான எடையில் இருப்பது.

9. இயல்பற்ற உடல் எச்சரிக்கை குறிப்புகளை புறக்கணிக்காதிருப்பது.

10. தொடர்ந்து இருதயத்தைப் பரிசோதிப்பது.

கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தமா?


மனித வாழ்க்கையில் எப்போதுமே சாதாரண இரத்த அழுத்தம்தான், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான முக்கிய காரணி அதே போல கர்ப்பமாக இருக்கும் போது கூட, இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால்தான் தாயின் ஆரோக்கிய மும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை யின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும்.

கர்ப்பமாவதற்கு முன்னாடியே கிட்டத்தட்ட 5 சதவீத பெண்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கிறது. இது க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் அல்லது எஸன்ஷியல் ஹைப்பர் டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. 5லிருந்து 8 சதவீத பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுகிறது. இது கெஸ்டேஷனல் ஹைப்பர் டென்ஷன் அல்லது கர்ப்பத்தினால் வரும் ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வில்லை என்றால் கர்ப்பத்தின் போது தாய்க்கும், சேய்க்கும் சீரியஸான பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தை கணக்கிடுதல் இரத்த அழுத்தம் கணக்கீடு இரண்டு எண்களாக, ஒரு சாய்வுக் கோடால் (/) பிரிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக சொல்வதென்றால் 110/80. முதலில் இருக்கும் எண் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவைக் குறிப்பிடு கிறது. இதை சிஸ்டோலிக் பிரஷர் என்று அழைப் போம். இரண்டாவதாக இருக்கும் எண், இதயம் விரியும்போது இரத்தக் குழாய் களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவைக் குறிப்பிடுகிறது. இது டயஸ்டோலிக் பிரஷர்.

கர்ப்பமாக இருக்கும்போது சாதாரணமாக பெண்களுக்கு, அவர்களுடைய இ ரத்த அழுத்தம் 120/80 அல்லது அதை விட குறைவாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்து, இரத்த அழுத்தம் டெஸ்ட் செய்து கொள்ளும் போது உங்கள் சிஸ்டோலிக் பிரஷரின் அளவு 140 அல்லது டயஸ்டோலிக் பிரஷரின் அளவு 90ஆக இரண்டு தடவைக்கு மேல் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். ஹைப்பர் டென்ஷனால் உங்கள் கர்ப்பம் எப்படி பாதிக்கப்படுகிறது?

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படு கிறதோ, அப்போது நெஞ்சில் இரத்த ஓட்டம் பாதிக்கப் படும். இதனால் கருவின் சரியான வளர்ச்சி தடைப்பட்டு, குழந்தையின் எடை குறைச்சலாகப் பிறக்கும். இந்தப் பிரச்சினை, கருத்தரித்து 32 வாரங்களுக்கு முன்பே ஹைப்பர் டென்ஷ னால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அல்லது கட்டுப்படுத்த முடியாத க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அதிகமாக ஏற்படுவதைப் பார்க்க முடியும். மேலும், ஹைப்பர் டென்ஷனால் டாக்டர் குறிப்பிட்ட பிரசவ திகதிக்கு முன்பே கூட (கருத்தரித்து 37 வாரங்களுக்கு முன்னால்) பிரசவம் ஆகி விடலாம். இதனால் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளும் பிறந்த புதிதில் நிறைய உடல் நலக்குறைவுகளை சந்திக்க நேரிடும். தவிர, சரி செய்ய முடியாத கற்றல் குறைபாடு மற்றும் மூளை வளர்ச்சி யின்மை போன்ற ஊனங்களுடன் பிறக்கலாம். கர்ப்பத்தின் போது வரும்

உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்

1. க்ரோனிக் ஹைப்பர்டென்ஷன்

உயர் இரத்த அழுத்தமான க்ரோனிக் ஹைப்பர் டென்ஷன் சில நேரங்களில் கருத்தரிப்பதற்கு முன்னாடியோ அல்லது கருத் தரித்து 20 வாரங்களுக்குள் பரிசோதனையில் தெரியலாம். இந்த வகை ஹைப்பர் டென்ஷன் பிரசவத்துக்குப் பிறகும் கூட நீடிக்கும். கர்ப்ப மாக இருக்கும் போது இந்த ஹைப்பர் டென்ஷனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப் படலாம். ஒரு சில பெண்களுக்கு இந்த டைப் பிளட் பிரஷரை கன்ட்ரோல் செய்ய அந்தப் பெண் அதுவரை எடுத்து வந்த மாத்திரை களினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க வேறு மாத்திரைகள் மாற்ற வேண்டி இருக்கும். க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப் பட்டிருக்கும் 25 சதவீத பெண்களுக்கு ப்ரீக்லாம்ப்சியா இருக்கலாம். இது கர்ப்பத்தின் போது வரும் ஒரு விதமான அதிக இரத்த அழுத்தம். இதில் பிரச்சினைகள் அதிகம்.

2. கெஸ்ட்டேஷன் ஹைப்பர் டென்ஷன் அல்லது கருத்தரிப் பினால் ஏற்படும் ஹைப்பர் டென்ஷன்

ஒரு பெண் கருத்தரித்து 20 வாரங்கள் கழித்து, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது முதல் தடவையாக கண்டுபிடிக்கப் பட்டால், அது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷன்! இந்த வகை இரத்த அழுத்தம் பொதுவாக குழந்தை பிறந்ததும் சரியாகி விடும்.

3.ப்ரீக்லாம்ப்சியா

எப்போது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷனுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கிறதோ, அந்த நிலை ஹப்ரீக்லாம்ப்சியா' என்றழைக் கப்படும்.

சிறுநீரில் புரதம் (அல்புமின்) வெளியேறுதல் தொடர்ச்சியான தலைவலி. பார்வைக் குறை பாடு. உதாரண மாக பார்வை தெளிவின்மை, பொருட்களெல்லாம் இரட்டையாகத் தெரிதல். தொடர்ச்சியான எடை அதிகரித் தல். முகம் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுதல். வலது பக்க மேல் வயிற்றில் வலி ஏற்படுதல்.

4. க்லாம்ப்சியா

எப்போது ப்ரீக்லாம்ப்சியா சிவியராகிறதோ அப்போது பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு ஏற்படும். இது தான் க்லாம்ப்சியா. இந்த நிலை கர்ப்பமாக இருக்கும் தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தான நிலையாகும். இது போன்ற ஆபத்தான நிலையில் வழமையாக செக்கப் செய்து கொள் ளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹக்லாம்ப் சியா' ஏற்படுவது மிகமிக அரிது.

சிகிச்சை

உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுதல் மற்றும் இரத்த அழுத்ததுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், குழந்தை முழு வளர்ச்சியடைந்து பிரசவமாகும் வரைக்கும் பிளட் பிரஷரை கன்ட்ரோல் செய்ய வாய்ப்பு கள் அதிகம்.

கர்ப்பத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத் திற்கு உப்புக் குறைத்த உணவு தேவையில்லை. ஆனால் க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் உள்ளவர்களுக்கு உப்புக் குறைத்த உணவு அவசியம். ப்ரீக்லாம்ப்சியாவை பொறுத்தவரை, நிறைய கேஸ்களில் டெலிவரியாவதுதான் தீர்வே. எப்போது டெலிவரி செய்ய வேண்டும் என்பது கர்ப்பத்தின் வாரங்கள் மற்றும் அவர் களின் நிலைமையைப் பொறுத்து தீர்மானிக் கப்பட வேண்டும்.

பிரசவ சமயத்தில் கருத்தரித்த பெண் களின் நிலைமை நல்லபடியாக இருந்தால் வலியை வரவழைத்து சாதாரண பிரசவம் டெலிவரி செய்தல். அதுவே, மேலே சொன்ன ஏதோ ஒரு பிரச்சினை அந்த கர்ப்பமான பெண்ணுக்கு இருந்தால் அல்லது பிரசவ வலி வரும் வரை குழந்தையால் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு சிசேரியன் செய்ய டாக்டர் முடிவெடுப்பார்

Tuesday, October 28, 2008

ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் நிலைப்பாடு








அறிவு கொண்ட மனித உயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம் (பாரதி)

இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் மக்கள் உடலமைப்பு ரீதியாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்துள்ளார் என்பது உயிரியல் உண்மை. ஆனால் இந்த உயிரியல் வேறுபாடே சமூகத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. ஆண் பெண் பாகுபாடு என்பது வித்தியாசமானது. சமூகமானது ஆணை பாதுகாவலனாகவும் வலிமை பொருந்தியவனாகவும் சித்திரித்து, அவனை உயர் நிலையில் வைக்கின்றது. ஆனால் பெண்ணோ பேதை. அவளை இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் உரியவளாகக் கருதி, அவளை இழி நிலைக்குத் தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆண்வழிச் சமூகமானது ஆரம்பத்தில் பெண்களை அடக்கி ஒடுக்கியதன் மூலம் ஆணாதிக்க கலாசாரத்தினை நிலை நிறுத்தியது. உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். அதன் முதற்கட்டமாக உலகில் பெண்கள் போகப் பொருட்களாக ஆண்களால் கணிக்கப்பட்டனர். தன்னலமின்மை, தியாகம், பொறுமை போன்ற சில குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே காணப்படுவதனால், ஆண்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி தம் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினர். அந்த வகையில் பெண்ணானவள் மனைவியைக் குறிக்கும் பெயரால் மனைவியானாள். கணவனோ கணங்களின் தலைவன் என்பதில் இருந்து கணவனானான். ஆண் சமூகத்தின் தலைவன் ஆக, பெண்ணோ வீட்டின் வேலைக்காரி ஆனாள்.

பிள்ளைகளைப் பெறுதல் அவர்களை வளர்த்தல், உணவு தயாரித்தல், வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருத்தல், ஒவ்வொரு வழியிலும் கணவனுக்கு ஒத்தாசையாக இருத்தல் முதலியன திருமணமான ஒரு பெண்ணின் கடமைகளாக ஆண் சமூகத்தால் வரையறுக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மெய்யான பணி கணவனுக்கும் குழந்தைக்கும் பணி செய்தல் என்று ஆணாதிக்கம் கருதுகின்றது. பெண்களுக்கான வரையறைகளை வகுத்த ஆண் வீட்டில் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண்ணோ இழி நிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். அவளின் வாழ்வு வீட்டுக்குள்ளேயே அமுங்கி விடுகின்றது. அவளின் உரிமைகள், வளர்ச்சி என்பன திட்டமிட்டு ஆணாதிக்க சமூகத்தால் நசுக்கப்படுகின்றன.

இவ்வாறு ஆணின் அடக்கு முறைக்கு உள்ளான பெண் அவனின் உடலின்ப வேட்கைக்கு கருவியானாள். இதனால் கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிவிட்டாள். பெண்ணின் நிலையை மேலும் கீழ் இறக்குவதாக இது அமைகின்றது. பெண்களுக்கு ஒதுங்கி வாழும் நிலையையும், தங்கி வாழும் நிலையையும் உருவாக்கிய ஆணாதிக்க சமூகம் பெண்ணை ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் இயந்திரமாக பிள்ளை பெறும் கருவியாக மட்டுமின்றி ஆணுக்கும் சேவை செய்யும் அடிமையாகவும் கேவலப்படுத்தியது.

பெண்கள் மரணமடையும் வரையிலும் குழந்தைகளைப் பெறட்டும். அவள் வேறெதுவாகவும் இருப்பதற்குத் தேவையுமில்லை. அதற்கு உரிமையுமில்லை என்ற டி. மார்டின் லூதரின் கருத்தானது ஆணாதிக்க சமூகத்திற்கு துணை போவதாய் இருக்கின்றது. பெண் என்ன குழந்தைகளை உற்பத்தி செய்யும் கருவியா? அவளுக்கென்று தனிப்பட்ட உரிமைகள், உணர்வுகள் எதுவும் இருக்கக்கூடாதா? அவளும் ஆணைப் போல் இரத்தம், நரம்பு, இதயம் உடையவள் தானே. பின்னர் ஏன் பெண் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டு கொடூரமாக நடத்தப்படவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகமானது தமது அடக்கு முறைக்கு இசைவாக பல செயற்பாடுகளில் இறங்கியது. பழமொழிகளையும் பாரம்பரியக் கதைகளையும் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு பெண்ணை அடிமைப்படுத்த முயற்சித்தது. அது அவர்களுக்கு ஆரம்பத்தில் வெற்றியையே தேடிக் கொடுத்தது எனலாம். அந்த வகையில் ""கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'' என்று கூறியே பெண்ணின் அடிமைத் தனத்தை ஆண் சமுதாயம் பண்பாடாக்க முயற்சிக்கின்றது. கணவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி அவனது அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அச்சம், மடம், நாணம், பொறுமை, அடக்கம் என்பவை பெண்ணுக்கு மிக முக்கியமாக கருதவேண்டிய பண்புகள் எனக்கூறி ஆணாதிக்க சமூகத்துக்குள் பெண்ணைப் பேணி வைக்கின்றனர். பெண்ணை இவ்வாறு அடிமைப்படுத்துவதன் மூலம் ஆண் வழிச் சமூகம் வளர்ச்சிபெற்றது. பெற்று வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பெண்களை அடக்கி ஒடுக்கிய காலம் இன்று மலையேறிவிட்டது. பெண்ணின் பெருமை உலகுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. பெண் புத்தி பின் புத்தி அல்ல. பெண் புத்தி முன்புத்தி என்று புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்ணினம் எதிர்பார்த்துப் போராட முயற்சி செய்யாததனால்தான் இதுவரை காலம் பெண்ணடிமைத்தனம் தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் பெண் இன்று போராடத் தயாராகிவிட்டாள். பெண்கள் இன்று மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர்களாக மீண்டும் எழுந்துள்ளார்கள். இன்று பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு ஒப்பாக நுழைந்து, அவர்களால் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆணாதிக்கம் தகர்க்கப்பட்டு ஆண் பெண் சமத்துவம் நிலவ வேண்டுமாயின் முதலில் ஆண்களுக்கு இணையான கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் என்பன பெண்களுக்குப் பூரணமாகக் கிடைக்க வழி செய்யவேண்டும். மண வாழ்க்கையில் கடமைகள், உரிமைகள் இருபாலாருக்கும் சம நிலையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பெண் மீதான ஆணின் அத்துமீறல்களுக்கு தண்டனை அளிக்கப்படவேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டால் தான் ஆண், பெண் சமத்துவம் நிலவ முடியும்.

மேலும் பெண் சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஒரு ஆணின் உழைப்பைச் சார்ந்து பெண் இருக்கும் வரை ஆணின் பொருளாதார நலனுக்கு உட்பட்டுத்தான் பெண் சிந்திக்க முடியும். எனவே இதிலிருந்து பெண் மீண்டும் சமூக உழைப்பில் சுய ஆற்றலுடன் வாழும் போதுதான் அவளது சிந்தனை வெளிப்படும். பெண்கள் சுயமதிப்பும் பொருளாதார சுயசார்பும் பெற்றுவிட்டால் மாத்திரமே சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நினைவு மையம் (Memory Centre)

அமெரிக்காவில் உள்ள ஒரு நரம்பியல் நிறுவனத்தில் 1952-53ஆம் ஆண்டுவாக்கில் 43 வயது நிரம்பிய பெண்மணி ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் ஒருவர் அவரது தலையின் ஒரு பகுதியைத் திறந்து மூளையை ஆய்வு செய்தார். இவ்வாய்வு நடைபெறுகையில் அப்பெண்மணிக்கு முழு நினைவு இருந்ததோடு மட்டுமல்ல அவர் எவ்வித வலிக்கும் ஆளாகவில்லை. அறுவை சிகிச்சை நடைபெற்ற அப்பகுதி மட்டும் மரத்துப் போகின்றவகையில் உணர்விழப்பு மருந்து அளித்திருந்தனர். இந்த வியத்தகு அறுவை சிகிச்சையை நடத்தியவர் டாக்டர் பென்·பீல்ட் என்ற மருத்துவர். அறுவை சிகிச்சையின்போது தம் கையிலிருந்த கருவி ஒன்றிலிருந்து கம்பிகளின் வழியாக திறந்திருந்த மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் செலுத்துவதற்கு அவர் ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.

டாக்டர் பென்ஃபீல்ட் கம்பிகளின் வழியே மின்சாரத்தை மூளையின் குறிப்பிட்ட அப்பகுதியில் செலுத்தியவுடனே, அந்தப் பெண்மணி ஒரு குழந்தையைத் திட்டுவது போலப் பொருளற்ற சொற்களை உளறத் தொடங்கினார். ஆனால் மின்சாரம் செலுத்துவதை நிறுத்தியவுடனே, அப்பெண்ணும் உளறுவதை நிறுத்தி விட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பிய அப்பெண்மணியிடம் டாக்டர் பென்ஃபீல்ட் கேட்டார்: "சிகிச்சையின்போது நீங்கள் கேட்ட இப்பேச்சுகள் நினைவிற்கு வருகின்றனவா?, அவற்றைப் பேசியவர் யார் என்பது தெரிகிறதா?" சிலவற்றை நினைவுபடுத்திப் பார்த்த அப்பெண்மணி இப்பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன்; ஆனால் அவற்றை நான் பேசவில்லை எனக் குறிப்பிட்டார். மீண்டும் டாக்டர் அப்பெண்ணிடம் இப்பேச்சுகளை யாரிடமிருந்து கேட்டீர்கள் என வினவ, அவர் தன் தாய் தன்னை இப்பேச்சுகளால் திட்டியதாகப் பதில் கூறினார்.

"உங்கள் தாய் இப்போது உயிருடன் இருக்கிறாரா?" டாக்டர் வினவினார். "இல்லை. அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன" அப்பெண்மணி விடை கூறினார். வியப்படைந்த டாக்டர் மீண்டும் வினவினார் : "அப்படியானால், இந்நிகழ்ச்சிகளைக் கனவு கண்டீர்களா?" பெண்மணி கூறினார்: "இல்லை, நிகழ்ச்சிகளை நினைவு படுத்திக் கற்பனை செய்து பார்த்தேன்; சிறு பெண்ணாகவே மாறிவிட்டேன்; என் தாய் என்னை அடிக்கடி திட்டும் சொற்களால் திட்டுவதாகவே உணர்ந்தேன்."

நினைவு மையத்தின் புதிர்களைக் கண்டறிய விரும்பிய டாக்டர் பென்ஃபீல்ட் இத்தகையப் பரிசோதனைகள் பலவற்றைச் செய்தார். மூளையில் நினைவு மையத்தின் இருப்பிடத்தையும், அம்மையத்தில் நினைவுகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பதையும் தமது ஆய்வுப் பரிசோதனைகள் வாயிலாக இறுதியில் பென்ஃபீல்ட் கண்டறிந்தார். மனித மூளையின் பணிகளில் மிகவும் வியக்கத்தக்க, புதிய, நம்பமுடியாத பல தகவல்கள் அவரது பரிசோதனைகள் வாயிலாக வெளிவந்தன. தமது ஆய்வில் சிறப்புச் சோதனையாக நினைவு மையச் சோதனையை பென்ஃபீல்ட் மேற்கொண்டார்.

டாக்டர் பென்ஃபீல்ட் காக்கை வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போதே, மனித மூளையின் செயல்பாடுகளில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார். மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் என அவர் நினைத்தார். எனவே மூளையின் அப்பகுதியை அறுவை சிகிச்சை நடத்தி நீக்குவதற்கான வழி வகையைக் கண்டறிந்ததோடு, மூளையின் நினைவு மையத்தில் சோதனைகளையும் நடத்தினார்.

மூளையிலுள்ள நினைவு மையத்தின் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினால், அப்புள்ளியில் பதிவாகியுள்ள நினைவுகள் வாய் வழியே வெளிப்படும். நினைவுப் பகுதியில் இத்தகைய புள்ளிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன; அவற்றில் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு குறிப்பிட்ட வகையான நினைவு பதிவாகியிருக்கும். இந்த நினைவு மையத்தை ஒரு கிராமஃபோன் இசைத்தட்டுக்கு ஒப்பிடலாம். இசைத்தட்டின் எந்த ஒரு வரியில் கிராமஃபோன் இசைத்தட்டு ஊசியை வைத்தாலும், அவ்வரியில் பதிவாகி இருக்கும் பாடல் வரிகளின் சொற்கள் அல்லது இசை ஒலி வெளிவரும். நினைவு மையமும் இவ்வாறே செயல் புரிகிறது. நினைவு மையத்தின் எந்தப் புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினாலும் அப்புள்ளியில் பதிவாகி இருக்கும் சொற்கள் தூண்டப்பெற்று உதடுகள் வழியே வெளிவரும்.

மனித வாழ்வில் நடைபெற்ற சாதாரணமான அல்லது அசாதாரணமான எந்த ஒரு நிகழ்வும் அவனது மூளையின் நினைவு மையத்தில் இயல்பாகவே பதிவாகி விட¸¢றது. சில நேரங்களில் நம் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அவற்றின் பயன்பாடின்மை காரணமாக மறந்து விடுகிறோம். அதே நேரத்தில் வேறு சில நிகழ்வுகளை அவற்றின் முக்கியத்துவம் காரணமாக வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் எது முக்கியமற்றது, எது முக்கியமானது என்பதை நமது மூளை அறிவதில்லை. எல்லா நிகழ்வுகளையும் மூளை நினைவு மையத்தில் பதிவு செய்து அவற்றை வாழ்நாள் முழுதும் சேமித்து வைத்துக் கொள்கிறது.

நினைவு மையத்தில் சேமித்து வைக்கப்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட நினைவிற்கு இணையான சில நிகழ்வுகள் அல்லது விவாதங்கள் நடைபெறும்போது அக்குறிப்பிட்ட நினைவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இப்புத்துயிர்ப்பு, நமது மூளையின் நினைவு மையத்தில் உரிய புள்ளியை நமது உடலில் நடைபெறும் இயற்கை உணர்ச்சிகள் தூண்டுவதால் நிகழ்கிறது. இத்தூண்டல் செயலை நிறைவேற்ற டாக்டர் பென்ஃபீல்ட் மின் அலைகளைப் பயன்படுத்தினார்.

ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சிந்திக்கும்போது, நினைவு மையத்தில் அப்பொருளுக்கு உரிய நினைவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் புள்ளிகளை இயற்கை உணர்வுகள் தூண்டி விடுகின்றன; இதனால் எண்ணங்கள் துண்டிக்கப்படாமல் சிந்தனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. சில வேளைகளில் தொடர்பில்லாத, வேறு நினைவுப் புள்ளியை இயற்கை உணர்ச்சிகள் தூண்டிவிடுவதால், சிந்தனை ஓட்டம் தடைபடுவதுமுண்டு. இதனால் தொடர்பில்லாத வேறு சில சிந்தனைகளும் நமது நினைவுக்கு வரக்கூடும். பார்வை, கேட்கும் திறன், பேச்சு இவற்றிற்கான மையங்கள் மூளையின் எப்பகுதியில் அமைந்துள்ளனவோ, அங்கேயே நினைவு மையமும் அமைந்துள்ளது. இந்நினைவு மையத்துடன் நமது அன்றாட வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. நாம் சிலவற்றைக் கேட்கும்போது அல்லது உற்றுப் பார்க்கும்போது, நமது மூளையில் உயிர் வேதியியல் சமிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவாகும் சமிக்கைகள் எப்போதும் நீக்கப்பட இயலாதவை. நினைவுச் சேமிப்பகமானது நம் வாழ்நாள் நீடிப்பதற்கேற்ப விரிந்து செல்லக்கூடியது.

நாம் வாழ்வில் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போது, அதற்குத் தொடர்புள்ள பழைய நினைவுகள் வெளிப்படுகின்றன. இதனாø பழைய மற்றும் புதிய அனுபவங்கள் ஒன்றிணைந்து முற்றிலும் புதியதோர் அனுபவம் உருவாகிறது எனலாம். ஒரு சுவையான எடுத்துக்காட்டுடன் இதனை விளக்குவோம்.

சிறு குழந்தை ஒன்று மிகப் பெரியதோர் நாயை முதன்முறையாகப் பார்க்கிறது. நாய் பற்றிய அனுபவம் இதற்கு முன்பு இல்லாததால் குழந்தை எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். திடீரென்று அந்த நாய் குரைத்து குழந்தை மீது பாய்கிறது. அச்சமுடன் திகிலுற்ற அக்குழந்தை வீறிட்டு அலறுகிறது. பெற்றோர் நாயை விரட்டி விட்டு அக்குழந்தையைத் தேற்றுகின்றனர். சிறிது நேரத்தில் குழந்தை அந்நிகழ்ச்சியை மறந்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சில நாட்களுக்குப் பின்னர் குழந்தை வேறொரு நாயை மீண்டும் காண நேர்கிறது. அந்த நாய் குரைக்கவில்லை; குழந்தை மீது பாயவில்லை; வாலை ஆட்டிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. இருப்பினும் குழந்தை முன்பு போலவே வீறிட்டு அச்சத்துடன் அழத் துவங்குகிறது. முந்தைய நிகழ்வு குழந்தையின் மூளையில் பதிவாகி, அந்நினைவு இப்பொழுது வந்திருப்பதே குழந்தையின் அழுகைக்குக் காரணம் எனலாம்.

டாக்டர் பென்ஃபீல்டின் குறிப்பிடத் தகுந்த இக்கண்டுபிடிப்பே அவரது மன நல சிகிச்சையில் முக்கிய பíகு வகித்தது.ஒரு மனிதன் தனது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த அதிர்ச்சிகள், கசப்பான அனுபவங்கள் ஆகியன நினைவு மையத்தின் ஒரு மூலையில் தங்கியிருந்து எதிர் காலத்தில் மனநோய்க்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய மன நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்களது மூளையின் நினைவு மையத்தில் பதிவாகி இருக்கும் நினைவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு வகையான மன நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வெற்றியும் சிறந்த முன்னேற்றமும் உண்டாகியுள்ளன என்பதில் ஐயமில்லை.

"தாவரங்களுக்கும் உயிருண்டு"

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.
மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.

டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living" என்பதாகும்.

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

டாக்டர் போஸ் தாவரங்கள் சுருங்குவதைப் பதிவு செய்யும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார்; அதற்கு "ஒளியிழை நாடிப்பதிவி (Optical Pulse Recorder)" எனப் பெயர். இக்கருவியின் உதவியோடு தாவரங்களின் உள் செயற்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பல்லிகள், தவளைகள், ஆமைகள், பழங்கள், காய்கறிகள் தாவரங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை அவர் விளக்கிக் காட்டினார். தாவரங்கள் மின் அலைகளை உற்பத்தி செய்கின்றன என்பதையும், பிற உயிரினங்களைப் போன்று அவையும் களைப்படைந்து போகின்றன என்பதையும் கண்டறிந்தார்.

அவர் தமது ஆய்வுகளுள் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது, இறந்து போகும் தாவரம் ஒன்று வலிமை மிக்க மின்னோட்டத்தை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார். அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் மற்ற உயிரினங்களைப் போன்றே இறந்து விடுகின்றன என போஸ் நிரூபித்தார். அதே வேளையில் உயிர்வளியின் உதவியுடன் அவை பிற உயிரினங்களைப் போன்று உயிர் பெற இயலும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

டாக்டர் போஸ் அவர்களின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று என்னவெனில், போதைப் பொருள்களின் தாக்கத்தால் தாவரங்களும் மயக்க நிலையை அடைகின்றன என்பதாகும். இதற்கான சோதனையின் போது தாவரங்கள் மயக்க நிலை காரணமாக, ஆழ்துயில் கொள்வதையும், பின்னர் மெதுவாக மயக்க நிலை நீங்கி அவை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் அவரால் கவனிக்க முடிந்தது.

தாவரங்களின் செயற்பாடுகள், அவற்றின் வளர்ச்சி முறை, அவற்றுள் உள்ள திரவம் மேல் நோக்கிப் பாய்தல் போன்ற பலவும், அவை சுற்றுச் சூழலில் இருந்து பெறும் ஆற்றலின் காரணமாகவே நிகழ்கின்றன என்றும், இந்த ஆற்றலை அவை தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன என்றும் போஸ் நிறுவினார்.

போஸ் 1918ஆம் ஆண்டு "கிரெஸ்கோகிராஃப் (Crescograph)" என்னும் கருவி ஒன்றை வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாகத் தாவரங்களின் இயக்கங்களைப் பல்லாயிரம் மடங்கு உருப்பெருக்கத்தில் காண முடிந்தது. மேலும் தாவரங்களில் ஒரு நிமிடத்திற்குள் நிகழும் மாற்றங்களையும் இக்கருவி பதிவு செய்யக்கூடியதாக விளங்கியது. ஒரு சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி தடைபடுவதாகவும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டார்.

டாக்டர் போஸ் அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் பற்றிப் புகழ் மிக்க பிரெஞ்சு சிந்தனையாளர் ஹென்ரி பெர்க்சன் இவ்வாறு பாராட்டிக் கூறினார்: "டாக்டர் போஸ் செய்த சோதனைகளும், கண்டுபிடித்த கருவிகளும் ஊமைத் தாவரங்களுக்குப் பேசும் ஆற்றலை வழங்கி உள்ளன."

தாவரங்களின் விருப்பு வெறுப்புகள் என்ன, அவற்றின் துன்ப துயரங்கள் யாவை, அவை கூற விரும்புவது என்ன, அவற்றுக்கு இன்னலும், இடரும் விளைவிப்பன யாவை, அவற்றிற்கு மகிழ்ச்சி ஊட்டுவன எவை, என்பன பற்றிய விவரங்களை எல்லாம் ஜகதீஷ் சந்திர போஸின் கண்டுபிடிப்புகள் விளக்கிக் கூறின. தாவரங்களின் சுவாசிப்பையும், குரல் ஒலியையும் ஒரு கருவியால் உணரச் செய்யலாம் எனவும், தாவரங்கள் உயிர் வாழ்வன, சுவாசிப்பன எனவும் தமது கண்டுபிடிப்புகள் வாயிலாக போஸ் அவர்கள் நிரூபித்தார். மலர் ஒன்றைப் பெண் ஒருத்தியின் மீது எறிந்தால், அதிகத் துன்பம் உண்டாவது பெண்ணுக்கா அல்லது மலருக்கா என ஓர் அறிவியல் அறிஞர் போஸின் ஆய்வுகள் குறித்துப் பேசும் போது வினவினார்.

உலக இயற்பியல் மாநாடு 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்றது; அதில் போஸ் "பன்முகத்தன்மை கொண்ட இயற்கையில் அடிப்படை ஒருமைப்பாடு" என்ற தமது ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்; அதனைச் செவிமடுத்த அறிஞர்கள் போஸின் கருத்துகளைக் கேட்டு திகைத்து நின்றனர். "இயற்பியல் நிகழ்ச்சிகள் ஒரு வரம்புக்குக் கட்டுப்படாதவை; குறிப்பிட்ட எல்லைக்குள் இயற்பியல் நிகழ்வுகளை அடக்க இயலாது; உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் இடையேயான வேறுபாடுகள் நாம் நினைப்பது போல் அதிகமல்ல, ஆய்வுக்கு அப்பாற்பட்டதுமல்ல;" இவை போன்ற கருத்துகள் அவரால் விளக்கப்பட்டன.

டாக்டர் போஸின் கருத்துகள் அக்கால மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவரது கருத்துகளைப் பொருளற்றவை எனக் கூறியோரும் உண்டு. ஆனால் தமது முடிவுகளை 1902ஆம் ஆண்டு போஸ் வெளியிட்டு, செயல்முறை விளக்கம் செய்து காட்டிய போது மக்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

பிரிட்டிஷ் அரசு 1917ஆம் ஆண்டு "சர்" பட்டம் அளித்து அவரைப் பாராட்டியது. தமது 59ஆம் அகவையின் போது கலகத்தாவில் ஓர் ஆய்வு நிறுவனத்தை போஸ் நிறுவினார். போஸின் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஜெர்மன், ஆஸ்திரிய விஞ்ஞானிகள் பாராட்டிப் பேசும் போது, இந்தியா அறிவியல் துறையில் பன்மடங்கு முன்னேறியுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

இயற்கை முழுதும் உயிர்ப்பும், உணர்வும் நிரம்பி, கிளர்ச்சியுடன் துடித்துக் கொண்டு இருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ் கூறி வந்தார். இயற்கை தன்னைப் பற்றிய பல புதிர்களை வெளியிட்டு வருவதாகவும், உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொண்டால் இயற்கையுடன் உறவாடுவதும், உரையாடுவதும் கடினமல்ல என்பதும் அவரது கருத்தாகும்

Saturday, October 25, 2008

"பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிணாமங்களிலும் பெண்ணியமும் தலித்தியமும் வௌவேறு போராட்டங்கள்"67 என்று ஏழுதுகின்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.

மனு தர்மம் என்ற நூலை எதிர்த்து எப்படி பெண்ணியம் போராடும் ஐயா? பார்ப்பனியப் பெண்ணியம் அதாவது அ.மார்க்ஸ் குறிப்பிடும் "மிருதுளா சின்கா" எப்படி மனுதர்மத்தை எதிர்க்கும். அ.மார்க்ஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது என்கின்றார். நீங்கள் எந்தப் பெண்ணியத்தைச் சொல்லுகின்றீர்கள். கேலி செய்யும் பெண்ணியத்தையா? எதை?

மனுதர்மப் பெண்ணியத்தை எதிர்க்க வேண்டுமாயின் அது உண்மையான பெண்ணியமாக இருக்கவேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து சுரண்டலை, ஆணாதிக்கத்தை, மற்ற பூர்சுவா மற்றும் பார்ப்பனியப் பெண்ணியத்தை எதிர்த்தும், சாதி அமைப்பைக் கடந்தும் போராட வேண்டும். இந்தப் பெண்ணியம் தான் மனுதர்மத்தை எதிர்க்கும். இந்தப் பெண்ணியம் கம்யூனிசப் பெண்ணியமாகும்.
அடுத்து தலித்தியம் மனுதர்மத்தை எதிர்க்கும் என்கின்றார். இது முழுமையானது அல்ல. தலித்தியம் மனு தர்மத்தை எதிர்க்க வேண்டுமாயின், தனக்கு உள்ளேயுள்ள மனுதர்ம வழிவந்த சாதிப்படி நிலையை முதலில் தகர்க்க வேண்டும். இதைத் தலித் மனுதர்மம், மறுக்கின்றது. இது மறுக்கப்படும் போது மிக கீழ் மட்ட சாதிக்கு இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்று தான்.

மனுதர்மத்தை எதிர்த்துப் போராட வேண்டும் எனின் தலித்துக்குள் உள்ள மனுதர்மக் கூறுகளை எதிர்த்துப் போராடுவதில் தொடங்குகிறது. தலித்துகளுக்குள் உள்ள மனுதர்மத்தைப் பாதுகாத்த படி ஒருக்காலும் வெளியில் உள்ள மனுதர்மத்தைத் தகர்க்க முடியாது. மனுதர்மத்தை எதிர்த்த போராட்டம் எல்லாம் சாதிப்படி நிலை ஒடுக்குமுறைக்குள்ளும் தொடங்குகின்றது. இது சாதியைக் கடந்த போராட்டத்தைத் தொடங்குவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மற்ற அனைத்துக் கோரிக்கைகளிலும் கைகோர்க்கின்றது. அப்போது மட்டும் தான் மனுதர்மத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் வேரறுக்கின்றன.

சாதியைக் கடந்து கோரும் மக்கள் தான், அதாவது பாட்டாளி வர்க்கம் தான் ஒட்டு மொத்த மனுதர்மத்திற்கு எதிராகப் போராடுகின்றது. அதை வேர் அறுக்கின்றது. மற்றவை அதைத் தக்க வைக்கவும், அ.மார்க்ஸ் கோருவது போல் சலுகைகளைக் கையேந்துவதிலும் தான் நீடிக்கின்றது.

அடுத்து அரவிந் அப்பாத்துரையின் பொன் மொழியைப் பார்ப்போம். "தத்துவரீதியில் கம்ய+னிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ......மார்க்சியவாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்குத் துணை நிற்கக் கூடும். இதைத் தவிர்த்து கம்யூனிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு "பூடகம்""67 என்கின்றார்.

கம்ய+னிசம் பற்றி தனது "பூடகமான" நிலையில் நின்றும், திரித்தும் வெளியிடும் கம்யூனிச எதிர்ப்பு அறிவியல் சார்ந்ததல்ல. கம்யூனிசம் தத்துவரீதியாகச் சம உரிமை கோருகின்றதாம். இதைப் பொருளாதாரத்தில் கோருகின்றதாம். எல்லா வண்ணப் பிழைப்புவாதிகளும் கம்யூனிசத்தைப் பொருளாதாரப் போராட்டமாகச் சுருக்கி, அதில் போராடிப் பிழைத்து அம்பலப்படுகின்றனர்.

பொருளாதாரத்தில் சமத்துவம், சமஉரிமை தான் போதும் எனின் தொழிற்சங்கப் போராட்டம் போதுமானதாக இருக்கும். இன்றைய தொழிற்சங்கங்கள் கம்ய+னிசப் புரட்சியில் இருந்து விலகிச் சென்ற பாதை இதுதான்.


கம்யனிசம் வர்க்கப் போரைக் கோருகின்றது. வர்க்க ஆட்சியைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கக் கோருகின்றது. இது வர்க்க எதிரிகளை ஒழித்துக் கட்டக் கோருகின்றது. இது தனிச் சொத்துரிமையை ஒழித்துக் காட்டுகின்றது. இதன் போராட்டப் பாதையில் சம உரிமை என்பது மறுத்து விடுகின்றது. பொருளாதாரத்தில் சமத்துவத்தை அல்ல தேவையை எடுக்கக் கோருகின்றது.


பொருளாதார வாதத்துக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நிறுவ மார்க்ஸ்-லெனின் பல நிறைய தத்துவப் போராட்டங்களை நடத்தி கம்யூனிசத்தை நிறுவினர். இதைப் "பூடகம்" போல் இல்லாது படித்து கம்ய+னிசத்தைத் திரிக்காது பார்க்காதவரை எப்போதும் கம்யூனிச எதிர்ப்புதான் அகராதியாகின்றது.


பெண்ணியத்தில் சம உரிமைக்குத் துணைநிற்கும், அதற்கு வெளியில் கம்ய+னிசம் ஒரு பூடகம் என்கிறார். இது அறிவு சூனியத்தின் குருட்டுப்பார்வை தான். பெண்ணியத்திற்குச் சம உரிமை கிடைத்தபின் எப்படி ஐயா பெண்ணியக் கோரிக்கை எழும்? சம உரிமை என்பது எல்லாத் துறையிலும் நடக்க வேண்டும்.


கம்ய+னிசம் வர்க்கப் போரைப் பொருளாதாரத்தில் நடத்துவதில்லை. அது சுரண்டலுக்கு எதிராக, அதற்குக் காரணமான அனைத்துத் துறைகளுக்கும் எதிராகப் போராடுகின்றது. சுரண்டல் என்பது உருவாக்கியது தான், ஆணாதிக்கம், சாதிக் கட்டமைப்பு, பாலியல் வக்கிரங்கள் ........ என அனைத்துமாகும். இதை எதிர்க்கும் வர்க்கப் போராட்டம் சுரண்டலை ஒழிக்கும் போது அது அனைத்துத் துறையிலும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். இது மட்டும் தான் கம்ய+னிசத்தின் கோரிக்கையும் வெற்றியுமாகும்.


மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், மதம்........ என இன்றைய அனைத்தையும் மறுத்து மாறுதலைக் கம்யூனிசம் கோருகின்றது. இதைப் புரிந்து கொண்டால் பெண்ணியத்துக்காக ஒரே ஒரு போராட்ட வடிவம் கம்ய+னிசமாக இருப்பதைக் காண முடியும். இதைவிட்ட அறிவு சூனியப் "பூடகமாக" இருப்பதால் எதுவும் நடக்காது, வம்பளப்பதும் சுகிப்பதும்தான் எஞ்சும்.

மனிதனின் தோற்றம் (Origin of Man)

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன. டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார்.

இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார்.

சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்.

1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.

நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார்.

தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: "இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்" என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.

இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய "இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)" என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார்.

டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: "டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?". ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: "வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை." பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் "இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)", தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)" என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது.

இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.

அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel's Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.

பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்

Friday, October 24, 2008

தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது

தாய்ப்பாலின் மகிமை பற்றி இன்னும் சில தாய்மார் களுக்கு தெரியவில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் பெண்கள் இருக் கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிற்காலத் தில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் சுறு சுறுப்பாகவும் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார் களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும் என்பதை டாக்டர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தைக்கு 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஓரளவு குறைவாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

இதன் முலம் மார்பக புற்று நோயை உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு கணிசமாக குறைகிறது. மார்பக செல்களில் மரபணு (டி.என்.ஏ.) சேதம் அடை வதை தடுக்க முடியும் என்றும் ராச்சல் தாம்சன் என்ற பெண் டாக்டர் பல்வேறு பெண்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்

Monday, October 20, 2008

உலகெங்கும் உணவு நெருக்கடிக்கு உச்சிமாநாடுகள்; ஆனால் உண்பதற்குக் கிடைப்பது அரைவயிறு உணவே


செல்வந்த நாடுகள் துரித கதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறிய மக்கள் இரண்டு பில்லியனாக அதிகரிக்கும் நிலை உருவாகும்
உணவுக்கான உச்சிமாநாடுகளின் பின்னர் ஒன்று 1996 இல், மற்றையது 2002 இல் சர்வதேசச் சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவின்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது.

1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்திற் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் மூன்று ஐ.நா மகாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன்தரவில்லை. இரண்டு உச்சிமாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர்.

30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ள நிலையிலும் 60 க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி, தானியப் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் 150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய 3 ஆவது உலக உச்சிமாநாட்டில் வியாழனன்று தலைவர்கள் இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

யூ.என்.செயலாளர் நாயகம், பான்கி மூன் ரோமாபுரி உச்சி மகாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது "வைபீறியாவில், அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்துள்ளேன்' என்றார்.

இந்த மகாநாட்டிற் கேட்ட பேரொலி யாதெனில் சர்வதேசச் சமூகத்தின், விசேடமாக செல்வந்த நாடுகளின் அரசமைப்புக்களை இந்த நெருக்கடிக்கும் தீர்வுகாணவேண்டிய தேவையுள்ளது என்பதை அழுத்தமாக விளங்கவைக்க வேண்டும் என்பதாகும்.

"நாங்கள் துரிதகதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறியமக்கள் இரண்டு பில்லியன்களாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களது பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டித்ததனால் அரைவாசியாகக் குறைந்துள்ளது' என்கிறார் . பசி,பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் யூ.என். ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் ஜோசெற்ஷிறான்.

உலக உணவுத்திட்டம் இந்த வருடம் அது 78 நாடுகளைச் சேர்ந்த 90 மில்லியன் மக்களுக்கு 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவு உதவியைச் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. இந்த நாடுகளுள் அதிகம் பாதிக்கப்பட்டனவான ஹெயிற்றி, ஆப்கானிஸ்தான், சோமாலியா, எதியோப்பியா, கென்யா ஆகியன அடங்கும்.

உரோமாபுரியைத் தளமாகக் கொண்ட உணவு, விவசாய நிறுவனத்தின் அனுசரணையில் 3 நாட்களாக நடைபெற்ற உச்சிமகாநாடு பிரகடனப்படுத்துவதாவது; உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போஷாக்கின்மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனம். ஆனால் இறுதியில் இதில் எவ்வளவு வீதம் நடைமுறைப்படுத்தப்படும்?

இந்தப் பிரகடனத்துடன் தளம்பல் நிலையிலுள்ள எண்ணிக்கையும் வெளிவந்தது. செயலாளர் நாயகம் உச்சி மாநாட்டில் கூறியதுபோல உறுதியான புதியவளங்கள் தேவைப்படுகின்றன. அல்லது உலகளாவிய இந்த நெருக்கடியைத் தீர்க்க வருடமொன்றிற்கு 1520 பில்லியன் டொலர்களும் மேலும் ஆபிரிக்காவில் பசுமைப் புரட்சியின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வருடந்தோறும் 810 பில்லியன் டொலர்களும் தேவைப்படும்.

சான்பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஒக்லன்ட் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அனுறாதா மிற்றால் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது: முதற் பார்வையில் உச்சி மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உத்தரவாதங்கள் நம்பிக்கையூட்டுவன.

அவர் கூறுவதாவது: உணவு நெருக்கடியினாற் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக உதவிகளுக்கும், கொள்ளை சிபார்ஸுகளுக்கும் அழைப்புவிடுப்பது. மேலும் இவற்றுள் சிறுவிவசாயிகளுக்கு உதவி, சமூகப் பாதுகாப்பு வலுப்படுத்தல், உணவு சேமித்துவைத்தல், ஆபத்து வேளைகளில் உதவக்கூடிய செயன்முறைகள் ஆகியனவும் உள்ளடக்கப்படுதல் போன்றனவற்றிற்கு அழைப்பு விடுத்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிறார்.

அதேவேளையில், மத்திம,நீண்டகாலச் சிபார்ஸுகள், விவசாயத்திற்கு மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியனவும் உணவுப்பற்றாக்குறையை நீக்க உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மிற்றால் மேலும் கூறுவதாவது: "அண்மைக்கால உணவு விலை நெருக்கடியும், அதிகரிக்கும் பட்டினி நிலையும் சர்வதேசச் சந்தையில் பொருட்கள் வர்த்தகம் செய்யப்படுதல் என்பதற்குப் பதிலாக புதிய விவசாய, உணவுக்கொள்கையின் தேவையொன்றை வேண்டி நிற்கிறது. இதற்கு மூன்றாவது உலக நாடுகளுக்கு உணவு நிறைவை உறுதிப்படுத்த உறுதியான கொள்கையொன்று அவசியமாகிறது.

மேலும் மூன்றாவது உலகநாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தவறான வழிநடத்தல்களிலிருந்து விலகிக்கொள்ளும் திறமையும் அவசியமாகிறது.

சிறுவிவசாயிகளை மையமாகக் கொண்டு ஒரு விவசாய முறையை உருவாக்குவது. விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், உள்நாட்டுச் சமூகங்கள் ஆகியவர்களை அடிப்படையாகக் கொண்டு உணவு நிறைவையும், நாடுகளின், உணவுக்கான சுயதேவைப் பூர்த்தியையும் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும் ஆகும்.

சர்வதேசச் செயற்பாடு, ஏற்கனவே உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்கிறது எனப் பான் கூறினார்.

உணவு விவசாய நிறுவனம் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு விதைகள், வேறு விவசாய உதவிகளைச் செய்தற் பொருட்டு 1.7 பில்லியன் டொலர்களுக்காக அழைப்புவிடுத்துள்ளது.

இந்த வருடத்திற்கான உத்தரவாதங்களை நிறைவேற்ற உலக உணவு நிறுவனம் சவுதி அரேபியாவிடம் இருந்து 755 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது.

உணவு, விவசாய நிறுவனம் மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களைப் பாதிக்கப்பட்ட நாடுகளில் வறிய கமக்காரர்களுக்குக் கொடுக்கிறது.

மேலும் உலகவங்கி 1.2 பில்லியன் டொலர் நிதி வசதியை உருவாக்கி உணவு உற்பத்தியைப் பெருக்க உதவ முன்வந்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்கள் உலகின் மிகவறிய நாடுகளுக்கு உதவுவதற்காகும்.

ஐக்கியநாடுகள் சபையும் சி.ஈ.ஆர்.எவ். நிதியத்திலிருந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையினால் பாதிக்கப்படும் மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளுக்காக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

அவர் மேலும் கூறியதாவது, வளர்ந்துவரும் நாடுகள் தமது விவசாயப் பகுதியில் இன்னும் அதிகளவு நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும், அவை தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும், மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வலுவையும் கட்டுப்படுத்தி விடுமென்றும் கூறினார்.

தற்போதைய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலை மூன்று தசாப்தகாலமாக விவசாயத்தில் காட்டப்பட்ட சந்தை ஒழுங்கின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது.

மிற்றால் கூறுவதாவது: ஆகவே உணவு உற்பத்தியை ஸ்திரப்படுத்தவும், தகுந்த முறையில் உணவை நியாயமான விலையில் உலகளாவிய ரீதியில் விநியோகிக்கவும் நல்ல தீர்வுகளைக் காணுமாறு அழைப்புவிடுக்கிறோம்.

அதேவேளையில் 237 அரசசார்பற்ற நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புக்களும், ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளன. அவை உலக வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பஸ்கால்லாமியை வானளாவும் உணவுப் பொருட்களின் விலைக்கான விடை உணவு உற்பத்தி, வர்த்தகம் மேலும் ஒழுங்கீனம் ஆக்குவதிற் தங்கியிருக்கவில்லை என எச்சரித்துள்ளன.

அக்கடிதம் டோகா செயற்பாடுகள் உலக உணவு முறையை எதிர்நோக்கும் பாரிய சவால்களை நிர்ணயிக்கவில்லை. அது காலநிலை மாற்றத்தையும், இயற்கை வளங்கள் குறைதல், எரிபொருட்களின் விலை நாலுமடங்காதல், வர்த்தக சந்தையில் போட்டியின்மை, பயோ எரிபொருள்கள் அதிகரித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதிற் கையொப்பமிட்டவர்கள் அக்ஷன் எயிட் இன்ரர் நாஷனல், ஆபிரிக்கா வர்த்தக வலைப்பின்னல், ஏஷியன் பெசன்ற் கொயலிஷன், ஒக்ஸ்பாம், ஒக்லன்ட் மன்றம் எல்.ஏ.சி.ஆர்.எம்.தேட்வேள்ட் நெற்வேக், பூமியின் நண்பர்கள் பூட்ஸ்பான் ஆகியவையாகும்.

நிதி மூலதனம் உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது


நிதி மூலதனம் உற்பத்தியையும் உறிஞ்சுவதால், உற்பத்திக் கூறுகளே அழிகின்றது. இந்த நிதி மூலதனத்தை படைக்கும் உற்பத்தியோ உழைப்பிலானது. நிதி மூலதனம் பெருத்து வீங்குவது, அதன் இருப்புக்கான விதி. தனது ஒழுக்கக்கேடான இருப்பு சார்ந்து, உற்பத்தியையும் உழைப்பையும் உறிஞ்சிவிடுகின்றது. உற்பத்தியும், உழைப்பும் வெறும் சடலங்களாக மாறிவிடுகின்றது. அது செயலிழந்து நலிந்து போகின்றது.

இப்படி நடமாடும் இந்த பிசாசுகளின், மிக அண்மைய காலத்தைய வரலாறு என்ன? நாடுவிட்டு நாடு கடக்கும் வங்கி தொழில், 1960இல் மொத்த உலக உற்பத்தியில் 1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது 1980இல் 20 சதவிகிதமாக அதிகரித்தது. அதை பாதுகாக்க, விரிவாக்க, சூறையாட உருவாக்கப்பட்டதுதான் உலகமயமாதல்.

இப்படி எதார்த்தத்தில் நிதி மூலதனம், பெருமெடுப்பில் சூறையாடுவதற்காக உற்பத்திக்கு வெளியில் குவிந்துவிடுகின்றது. இப்படி நிதி மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுவதிலும் பார்க்க, அதிக இலாபத்தை பெறும் வக்கிரத்தால் சூல் கொண்டு நிற்பதால், போட்டி அதிகரிக்கின்றது. உற்பத்தி மீதான மூலதனத்தின் பங்கை வாங்கும் சூதாட்டத்திலும் இறங்குகின்றது. வட்டித் தொழிலும் அத்துடன் உற்பத்தி மூலதனத்தை வாங்கி அதை உறிஞ்சிய பின் துப்பிவிடுகின்றது.

பங்கு என்ற இந்தச் சூதாட்டத்தில், வீங்க வைத்து வெம்ப வைத்துதான் நிதி மூலதனம் இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்ற நிலை. பங்குகள் தலைகால் தெரியாத வேகத்தில் ஓடும் போது, நிதி மூலதனம் பெருமெடுப்பில் வந்து குதிக்கின்றது. இதுவே மிகப் பெரிய உலகச் சூதாட்டங்களில் ஒன்றாகிவிடுகின்றது.

உலகின் பங்கு பத்திரச் சந்தை 1970இல் 1,00,000 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 1980இல் 2,00,000 கோடி டொலராகியது. 1990இல் 12,00,000 கோடி டொலராகவும், 1995இல் 20,00,000 கோடி டொலராகவும், 1998இல் 25,00,000 கோடி டொலராகவும் அதிகரித்தது. 1970இல் இருந்தைவிட 25 மடங்காக பெருகியது. இந்த நிதி சூதாட்டம் மூலம் சம்பாதித்தல் என்பது, உற்பத்தியானதல்ல. இழப்பு என்பது அதன் விதி. இங்கு உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை. சேமிப்புகள், உற்பத்திகள்தான் சூறையாடப்படுகின்றது. மறைமுகமாக சுற்றுவழிகளில் மனித உழைப்பு உறிஞ்சப்படுகின்றது. இது திவால் உற்பத்தியை மட்டுமல்ல, உழைப்பையும் இல்லாதாக்குகின்றது.


மறுபக்கத்தில் நாட்டை சுற்றி வளைத்து விற்றல். அதாவது நேரடிக் கடனுக்கு பதிலாக, பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இப்படி 1996இல் உலகளாவில் விற்கப்பட்ட பத்திரங்கள் பெறுமதி 5,30,000 கோடி டொலராகும். இது நாட்டை பகுதிபகுதியாக நிபந்தனை இன்றி விற்பதற்கு வழி செய்கின்றது. பெருமளவிலான நிதி, தமக்கு இடையில் கடுமையான போட்டியுடன், ஒன்றையொன்று விழுங்கும் ஒழுக்கக்கேட்டுடன்தான் இயங்குகின்றது. தன்னை பெருக்குவது என்ற பிசாசுத்தனத்துடன், தனக்கு கீழ் அனைத்தையும் மாற்றி விடுவதற்கு முனைகின்றது.


இப்படி உலக மக்களின் சிறு சேமிப்புகளையும், உழைப்பின் மிச்சமீதங்களையும் கொள்ளையிடுவதை தவிர வேறு வழி கிடையாது. சூதாட்ட விடுதிகளில், அதிக அளவிலான கனவுகளுடன் எப்படி பணத்தைப் போட்டு இழக்கின்றனரோ, அதேபோல் பங்குப் பத்திரத்திலும் அன்றாடம் நிகழ்கின்றது. இந்தச் சூதாட்டம் என்பது, அதை இழப்பதை அடிப்படையாகக் கொண்டது. பங்குச் சந்தை என்பதே மற்றவன் பணத்தை திருடும் பகிரங்கமான சூதாட்ட மையம்.


இந்தப் பணம் ஏகாதிபத்தியங்களில் இருந்துதான் பெருமளவில்பாய்கின்றது. அங்குதான் செல்வம் குவிந்து வருகின்றது. உலகளாவிய பணத்தின் இருப்பு தான், பங்குச் சந்தையையும் ஆவியாக இறங்கி உறிஞ்சுகின்றது.


உலக அளவில் பணம் வைப்பு எந்த பணத்தில் உள்ளது என்பதைப் பார்த்தால், அதன் சூறையாடு திறனையும் இனம் காணமுடியும். (தற்போது ஈரோ)




1975- 1992 1992
டொலர் 69.1 64.4
ஜப்பான் யென் 5.6 8.3
ஜெர்மனிய மாக் 13.1 13.2
பவுன், பிராங், சுவிஸ் பிராங் 7.2 8.4
மற்றையவை 4.9 5.5


சர்வதேச நிதி என்பது, ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானது மட்டுமல்ல, அவர்களின் பணத்திலும் உள்ளது. இது நிதி மூலதனத்தைக்கொண்டு உலகைச் சூறையாட வசதியாகவும், வாய்ப்பாகவும் மாறிவிடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் கையிருப்புகள் கூட ஏகாதிபத்தியப் பணத்தில் வைத்திருப்பது என்பதே, இங்கு விசித்திரமான உண்மை.


உதாரணமாக ஆசிய மத்திய வங்கி தனது சேமிப்பின் 70 சதவிகிதத்தை அயல் நாட்டு நாணய சேமிப்பு நிலையங்களில் வைத்துள்ளது. இதன் மொத்தத் தொகை 1,70,000 கோடி டொலராகும். இந்த நிதியை அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் முதலிடுகின்றனர். அதாவது நிதியில் 80 முதல் 90 சதவிகிதத்தை இதற்காக செலவு செய்துள்ளனர். பத்திரப்பங்கான சூதாட்டத்தில் இடும் இவர்கள், கடனை அடைத்து நாட்டைப் பாதுகாக்க பயன்படுத்துவதில்லை.


டாலரின் சரிவும், கடனை மீளப் பெறத் தூண்டும் போது, கடன் பத்திரம் திவõலாகிவிடும் என்பதே உண்மை. அமெரிக்கா இந்த நிதியைத் தர முடியாது என்று அறிவிக்கும் பயங்கரமும் நிகழும், நிகழ்கின்றது. வெளிநாடுகளின் நாணய கையிருப்பில், 73 சதவிகிதம் டொலரிலேயே இருந்த அபாயம், கத்தி முனையில்தான் உலகை நடக்க வைத்தது. தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகள், தொடர்ச்சியான ஏகாதிபத்திய முரண்பாடுகள், டொலரின் சரிவு என்பன, மாற்று (ஏகாதிபத்திய) நாணயத்தில் பணத்தை வைத்திருப்பதை தூண்டியது. இருந்தபோதும் டொலர் தான், நிதியின் மொழியாக அதன் ஆன்மாவாக இன்றும் நீடிக்கின்றது.


இப்படிப்பட்ட நிதி மூலதனம் உற்பத்திக்கு வெளியில், உற்பத்தியை உறிஞ்சி சூறையாடுகின்றது. உற்பத்திக்கான சகல அடிப்படைகளும் தகர்க்கப்படுகின்றன. நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு இசைவாக, உற்பத்தி மூலதனம் ஈடுகொடுக்க முடியாது நெருக்கடிக்குள்ளாகின்றது. யார் உழைப்பில் இருந்து அதிகம் சூறையாடுவது, என்ற வெறி புதிய போக்காகியுள்ளது. உற்பத்தி மூலதனம், கடுமையான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.


நிதி மூலதனம் வீங்கி நிற்கின்றது. பெருமளவில் நிதியைத் திரட்டி வைத்துக் கொண்டு, அடங்காப் பசியுடன் அலைகின்றது. இப்படி 1995இல் நாள்தோறும் 90,000 கோடி டொலர் உற்பத்திக்கு வெளியிலான, பணப்புழக்கத்தில் ஈடுபட்டது. இது 2003இல் 3,00,000 கோடி டொலராகியது. இப்படி உற்பத்திக்கு வெளியில் நாள்தோறும் நிகழும் பணப்புழக்கத் தொகை 2,00,000 முதல் 3,00,000 (2 முதல் 3 டிரில்லியன்) கோடி டொலராக மாறியது. லண்டன் ஈரோ டாலர் சந்தையில் நாள் ஒன்றுக்கு புரளும் நிதியோ, 30,000 கோடி டொலராகியது. வருடம் இது 75,00,000 (75 டிரில்லியன்) கோடி டொலராகியது. உலகில் நாள் ஒன்றுக்கு நிதி மாற்றப்படும் தொகையோ 15,000 கோடி டொலராகவுள்ளது. வருடம் 38,00,000 (38 டிரில்லியன்) கோடி டொலராகவுள்ளது.


ஐரோப்பிய ஏகபோக வங்கிகள் கொடுக்கல் வாங்கல் மூலம் நாள் ஒன்றுக்கு 3,00,000 கோடி டொலரை, அதாவது வருடம் 7,50,00,000 கோடி டொலரை (750 டிரில்லியன்) கையாளுகின்றது. இது உலக வர்த்தகத்தைப் போல் 25 மடங்கு அதிகமாகும். இது போல் அன்னியச் செலாவணி சந்தையில் நாள் ஒன்றுக்கு 1,50,000 கோடி டொலரை கையாளுகின்றது. அதாவது வருடம் 3,50,00,000 கோடி (350 டிரில்லியன்) டொலராகும். இது உலகப் பொருள் மற்றும் சேவைத்துறை போல் 12 மடங்கு அதிகமாகும்.


நிதி மூலதனம் இப்படி உலகைச் சூறையாடுவதில் காட்டுகின்ற தீராத காதல், சமூகத்தை மலடாக்கி அது கொழுக்கின்றது. உற்பத்தி மூலதனம் உருவாக்கும் உழைப்பைச் சூறையாட, இதற்கு வெளியிலான இந்த நிதி மூலதனம் அன்றாடம் இயங்குகின்றது. இது தன்னை இந்த வழிகளில் பெருக்கிக் கொள்வதால், நிதி மூலதனத்தின் இயக்கம் என்பது உயிர்க்கொல்லியாக மாறிவிடுகின்றது.
இது போலியான வடிவில் கூட தன்னை நிலைநிறுத்தி சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றது. இப்படி போலியான நிதி மூலதனம் 25,00,000 கோடி டொலராகும். அதாவது வருடம் 62,50,00,000 கோடி (6,250 டிரில்லியன்) டாலர் போலியாக சூதாட்டத்தில் உள்ளது. ஆனால் உலக வருடாந்த வாணிபம் 1,00,00,000 கோடி (100 டிரில்லியன்) டொலர் மட்டுமேயாகும். போலியாக நிதி மூலதனம் 62 மடங்கு மேலாக இயங்கி, சூதாட்டத்தை நடத்துகின்றது. வர்த்தகம் என்பதே உண்மைப் பணமற்ற, போலியான சுழற்சிக்குள் நடத்தப்படுகின்றது. அசல் எது? போலி எது? என்பது இனம் காணமுடியாத வகையில், நிதிமூலதனமே போலியாகிவிட்டது.


மற்றொரு உண்மை, இந்த உலக அமைப்பின் இழிநிலையை தெளிவாகவே பறை சாற்றுகின்றது. அதாவது உலகில் நாள்தோறும் கைமாறும் 7 டொலரில் 1 டொலர் தான் வர்த்தகத்திற்கு பயன்படுகின்றது. அத்துடன் நாள்தோறும் 1,20,000 முதல் 1,50,000 கோடி டொலர், உற்பத்தி அல்லாத துறையில் கைமாற்றப்படுகின்றது. எப்படிப்பட்ட ஒரு உலக ஒழுங்கு?


உலகில் ஏழு டொலருக்கு ஒரு டொலர்தான் வர்த்தகத்தில் ஈடுபடும் போது, ஆறு டொலர் மனித இனத்துக்கு எதிரான வகையில் மற்றொரு தளத்தில் செயலாற்றுகின்றது. இப்படி பெரும் தொகையிலான சூறையாடல் என்பது, உலகமயமாக்கலின் உச்சக் கொப்பளிப்பாகும். இந்த நிதி மூலதனத்தின் அனைத்து விதமான செயற்பாடும், உழைப்பின் மீது தான் நடத்தப்படுகின்றது. மனித உழைப்புதான் செல்வம். அந்தச் செல்வத்தை அடைவது, எந்த வழியாகவும் இருக்கலாம். ஆனால் அதன் ஒழுக்கக்கேடு என்பது சூறையாடுவது தான்.


போலியான சூழ்ச்சியை நிதி மூலதனம் மூலம் கட்டமைக்கின்ற உலகமயமாதலின் உண்மை நிலவரமோ பயங்கரமானது. 2001இல் உலகளாவிலான உள்நாட்டு உற்பத்திகளின் மொத்தப் பெறுமதி 31,00,000 கோடி (31 டிரில்லியன்) ஈரோ மட்டும் தான். இதில் ஏற்றுமதி இறக்குமதி 13,00,000 கோடி (13 டிரில்லியன்) ஈரோக்கள் தான். ஆனால் உற்பத்தி சாராத (ஈடுபடாத) பணமாற்று மட்டும் 3,60,00,000 கோடி (360 டிரில்லியன்) டொலராக இருந்தது. நடப்பது போலியான பொய்யான சூதாட்ட மூலம் சம்பாதிப்பது. உற்பத்திக்கு வெளியில் வெறும் பேப்பர் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையான நிதி மூலதனம் இல்லாமலேயே, உண்மையான பொருட்களும் இல்லாமலேயே ஒரு போலியான வர்த்தகம் நடத்தப்படுகின்றது. இது உலக உழைப்பின் வளத்தை உறிஞ்சி, அதன் மேல் சொகுசாகவே இயங்குகின்றது. இதுவே குமிழிப் பொருளாதாரமாகி, வீங்கி வெம்பி மிதக்கின்றது.


உற்பத்தியை விட பல மடங்காக, உழைப்பை விட பற்பல மடங்காகி, இது வீங்கி வெம்பிப் போய் நிற்கின்றது. உழைப்பிலான உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் இந்த போலியான பணமாற்றுகள் இயங்குகின்றது. சூறையாடப்படுவது இதற்குள்தான். இதனால் முதலாளித்துவத்தின் உண்மை பெறுமானத்தில் கூட, நுகர்வோருக்கு பொருட்கள் மூலம் கிடைப்பதில்லை.


நிதி மூலதனம், அதனுடன் சேர்ந்து இயங்கும் போலியான நிதி மூலதனத்தின் இருப்பு என்பதும், அதன் வாழ்வு என்பதும், மனித உழைப்பின் மீதான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உழைப்பைச் சூறையாடுவதுதான். சுதந்திரம், ஜனநாயகம் என்பது இந்த அர்த்தத்தில் மட்டும்தான், ஒரு சமூக அடிப்படையாகவும் சமூக ஒழுங்கை நிர்ணயிக்கின்ற காரணியாகவும் உள்ளது

Friday, October 17, 2008

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டு. ஆனால் மன்மோகன்சிங் ஒன்றை மட்டும் சொல்கிறார்.

"பட்ஜெட் பற்றாக்குறையை - செலவை - குறைக்க வேண்டும்". எப்படி?

ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசிக்கு மானியமா? மானியத்தை வெட்டு! விலையை உயர்த்து. விவசாயிகளுக்கான உரத்துக்கு மானியமா? வெட்டு! விலையை உயர்த்து!

இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

கடைசியில் சராசரிக் கணக்கு - மொத்தக் கணக்கு போட்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அப்படியானால், செலவைக் குறைக்க, வரவை அதிகரிக்க என்னதான் செய்வது?

* நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும்.

* கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்

* அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்.

* ஏழை மக்களுக்கான மானியத்தை வெட்டுவதற்குப் பதிலாக, ராணுவம் மற்றும் இது போன்ற உற்பத்தி தொடர்பற்ற சமாச்சாரங்களுக்குக் கோடானு கோடி ரூபாய் கொட்டி அழுவதை வெட்டி சுருக்க வேண்டும்

* நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

- இவற்றைச் செய்தாலே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குத் தேவை இருக்காது. அதன் மூலம் ஏற்படும் கரன்ஸி நோட்டு அச்சடிப்பும் பணவீக்கமும் இருக்காது.

- ஜவஹர், 9.10.1992ல் ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

2012ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 7 பில்லியன்; வளப்பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம்: அமெரிக்கா

2012ஆம் ஆண்டு உலகத்தின் சனத்தொகை 7 பில்லியனை எட்டிவிடுமென்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வுகூறியுள்ளது.

உலகத்தில் தற்பொழுது 6.7 பில்லியன் மக்கள் வாழ்ந்துவருவதுடன், அமெரிக்கா 304 மில்லியன் சனத்தொகையுடன் உலகத்தில் மூன்றாவது சனத்தொகை கூடியநாடாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம், சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா இருப்பதாகக் கூறியுள்ளது.

இலங்கை 21,128,773 பேர் சனத்தொகையுடன் உலகத்தில் 53வது இடத்தில் உள்ளது.

உலகத்தின் சனத்தொகை 1999ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தாண்டியது. இதன்படி, 13 வருடங்களில் அது ஒரு பில்லியனால் அதிகரிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டு ரீதியில், 1800ஆம் ஆண்டுவரையில் உலக சனத்தொகை 1 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனக் குறிப்பிடும் சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் நிபுணர் கார்ல் ஹஊப், அடுத்த 130 வருடங்கள் வரையில் சனத்தொகை 2 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனவும் கூறினார்.

“அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தற்பொழுது சனத்தொகை அதிகரித்துச் செல்கின்றமையை இலகுவில் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்” ஹஊப் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றினால் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கலாச்சார மாற்றங்கள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்தல் மற்றும் வேலைத் தளங்களுக்குச் செல்தல் போன்றன அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார். சனத்தொகைப் பெருக்கம் அதிகமாக இருந்தாலும் அதன் வளர்ச்சிவீதம் குறைவாகக் காணப்படுவதற்கு அவை முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சனத்தொகை வருடாந்தம் 1.2 வீதத்தால் அதிகரிக்கிறது. எனினும், 2050ஆம் ஆண்டில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 0.5 ஆகக் காணப்படும் என அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அப்பொழுது உலகத்தில் சனத்தொகை கூடிய நாடாக சீனா இருக்கின்றபோதும், இந்தியா அதனை மிஞ்சிச் செல்வதற்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பொருளாதார விருத்தியால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்து அதனால் அவற்றின் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சனத்தொகைக் கணப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், பூமியில் எத்தனைபேர் வாழமுடியும் என்பது பற்றி இதுவரை கணிப்பிடப்படவில்லை என வெஷிங்டனில் செயற்பட்டுவரும் பூரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பூமியில் வாழக்கூடியவர்களின் சனத்தொகை அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில்மய நாடுகள் ஏனைய வளங்களுக்குச் சமமான அளவு எரிபொருளையும் பயன்படுத்துகின்றன. எனினும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண் சராசரியாக 6ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தின் மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளில் ஒரு பெண் 7 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளன.


ஐஎன்லங்கா இணையம்

Monday, October 13, 2008

அமெரிக்கா மீது சீறும் இலங்கை - உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான்.


அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு.
உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம்.


இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெரிக்காவின் பக்கச்சார் பற்ற அவதானிப்பு அறிக்கையே கொழும்பை கடும் சீற்றத் துக்கு ஆழ்த்தியிருக்கின்றது.


அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழில் அலுவலகப் பிரிவு உலகில் 196 நாடுக ளில் மேற்படி துறைகள் தொடர்பான தனது அவதானிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அமெரிக்க வெளி விவகார அமைச்சு வருடா வருடம் மேற்கொள்ளும் வழமை யான நடவடிக்கையே இது. கடந்த ஆண்டுக்கான அவதானிப்பு அறிக்கையே சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதி லேயே கொழும்பு அரச நிர்வாகத்தின் மோசமான மனித உரிமை மீறல் போக்கை வாங்குவாங்கெனக் கீறிக் கிழித்திருக்கின்றது அமெரிக்கா.


இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக அரச படைகளா லும், துணைப் படைக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட் டிருக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இங்கு பெரும் இனப் படுகொலையாக, மனிதப் பேரவலமாக வடி வெடுத்திருக்கின்றன. இதனை தமிழர் தரப்பு மட்டுமல்ல சுயா தீனப் பார்வையாளர்கள் அனைவரும் அறிவர்.


பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதப் பேரழிவு நடவடிக்கைகளை இனப்படுகொலை கலாசாரத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளதுடன் நிலைமை பேராபத்துக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தொடர்பான அபாய எச்சரிக்கையையும் வெளியிட்டு வருகின்றன.


இப்படி உண்மையை அம்பலப்படுத்தும் அமைப்புக்க ளின் பட்டியல் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிக்கான குழு மற்றும் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸில் உட்பட பல்வேறு ஐ.நா அமைப்புகள் என்று நீண்டு செல்கின்றது.


இவ்வாறு சர்வதேச அமைப்புகள் விசேடமாக மனித உரி மைகள் விவகாரத்தைக் குறிப்பாகவும், பிரத்தியேகமாகவும் கையாளும் அமைப்புகள் புட்டுக்காட்டிய உண்மைகளையே இப்போது அமெரிக்காவும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால்அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய விட யங்கள் இட்டுக் கட்டியவை என்று கூறுகிறது இலங்கை.


நெருப்புக் கோழி தான் நிலத்துக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று கருது மாம். அது போலவே தென்னிலங்கையும், தமிழர் தாயகத்தில் தனது படைகள் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் தான் புரியும் அராஜகங்களை தனது தென்னிலங்கை ஊடகங்கள் மூலம் சிங்கள மக்களுக்கு மூடி மறைத்து ஒழித்துக் கொண்டு அதனால் முழு உலகத்துக்குமே அது தெரியாமல் போய்விட் டது என்று எண்ணிக்கொள்கின்றது.


அப்படியல்ல, நவீன தொடர்பாடல் முறை வசதிகளின் கீழ் எல்லாமே அம்பலமாகி, சர்வதேசத்துக்கும் சகல உண்மைகளும் தெரியும் என்ற யதார்த்தம் புரியும்போது அதைக் கொழும்பி னால் சீரணிக்க முடியவில்லை; சகிக்க இயலவில்லை.


அதனால்தான் உண்மைகளை அம்பலப்படுத்தும் தரப்புக் களுக்கும் எதிராகத் துள்ளிக் குதிக்கின்றது கொழும்பு. சர்வ தேச பொலிஸ்காரனான அமெரிக்காவும் இப்படி உண்மை யைப் போட்டுடைத்திருப்பதை கொழும்பால் தாங்கிக் கொள் ளவே முடியவில்லை.


அதனாலேயே அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடு என்று கூடப் பார்க்காமல் அதன் கொழும்புக்கான தூதுவரை அழைப்பித்து தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித் திருக்கின்றது கொழும்பு.


அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களை "வெறுமனே செவி வழித் தகவல்கள்' என்றும் "ஆதாரமற்றவை' என்றும் "வேண்டுமென்றே பெரிது படுத்தப்பட்டவை' என்றும் "மழுப் பல் விவகாரங்கள்' என்றும் காரசாரமாக விமர்சித்திருக்கின்றது கொழும்பு. அதுமட்டுமல்ல "யுத்த களத்திலும் சர்வதேச மட் டத்திலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாது தடு மாறும் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவின் இந்த அறிக்கை உயிர் வாழ்வுக்கான பிராணவாயுவை அளிக்கின்றது' என்ற அளவுக்கு குறை கூறும் நிலைக்கும் கொழும்பு சென்றுள்ளது. ஆக, இந்த அறிக்கை மூலம் அமெரிக்கா புலிகளுக்கு உதவ முற்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்தும் கட்டத்துக்கு கொழும்பின் இக்கட்டு சிக்கலாகியுள்ளது.


ஆனால் கொழும்பின் இந்தக் குற்றச்சாட்டைத் தூக்கி வீசிவிட்டது அமெரிக்கா. தனது வெளிப்படுத்தல்கள் நியா மானவை, நேர்மையான நோக்கம் கொண்டவை என இரண்டு வரிகளில் குறிப்பிட்டு இலங்கையின் குற்றச்சாட்டை அடி யோடு நிராகரித்துவிட்டது அமெரிக்கா.


அமெரிக்கா தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டிய விட யங்கள் போலியான தகவல்களையும் வெறும் பத்திரிகைச் செய்திகளையும் பின்னணியாகக் கொண்டவை என இலங்கை இந்தக் கட்டத்தில் கூறியிருக்கின்ற கருத்தும் கூட இன்றைய நிலையில் கவனிக்கத்தக்கது. ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இச்சமயத்தில் அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களுக்கு பத்திரிகைகள் மீதும் பொறுப்பைப் போடும் ஆட்சித் தரப்பின் எத்தனம், புதிய நெருக்கடிகள் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றன.


தமிழர்கள் எதிர்நோக்கும் மோசமான நெருக்கடிகள் பற்றிய விடயங்களை உலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஏற்கனவே பலத்த சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.


இந்தச் சமயத்தில் இன ரீதியாகத் தமிழர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றிய நிலைமையை அமெரிக்கா அம் பலப்படுத்தியமைக்கு ஊடகங்களைப் பொறுப்பாக்கும் கொழும்பின் எத்தனம் பல செய்திகளைச் சொல்லாமல் சொல் லுகின்றது. இதனை ஊடகங்களும், ஊடகவியலாளரும் எச்ச ரிக்கை அறிவிப்பாகக் கவனத்தில் எடுப்பது முக்கியமாகும்.