Tuesday, October 28, 2008

ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் நிலைப்பாடு








அறிவு கொண்ட மனித உயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம் (பாரதி)

இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் மக்கள் உடலமைப்பு ரீதியாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்துள்ளார் என்பது உயிரியல் உண்மை. ஆனால் இந்த உயிரியல் வேறுபாடே சமூகத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. ஆண் பெண் பாகுபாடு என்பது வித்தியாசமானது. சமூகமானது ஆணை பாதுகாவலனாகவும் வலிமை பொருந்தியவனாகவும் சித்திரித்து, அவனை உயர் நிலையில் வைக்கின்றது. ஆனால் பெண்ணோ பேதை. அவளை இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் உரியவளாகக் கருதி, அவளை இழி நிலைக்குத் தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆண்வழிச் சமூகமானது ஆரம்பத்தில் பெண்களை அடக்கி ஒடுக்கியதன் மூலம் ஆணாதிக்க கலாசாரத்தினை நிலை நிறுத்தியது. உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். அதன் முதற்கட்டமாக உலகில் பெண்கள் போகப் பொருட்களாக ஆண்களால் கணிக்கப்பட்டனர். தன்னலமின்மை, தியாகம், பொறுமை போன்ற சில குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே காணப்படுவதனால், ஆண்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி தம் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினர். அந்த வகையில் பெண்ணானவள் மனைவியைக் குறிக்கும் பெயரால் மனைவியானாள். கணவனோ கணங்களின் தலைவன் என்பதில் இருந்து கணவனானான். ஆண் சமூகத்தின் தலைவன் ஆக, பெண்ணோ வீட்டின் வேலைக்காரி ஆனாள்.

பிள்ளைகளைப் பெறுதல் அவர்களை வளர்த்தல், உணவு தயாரித்தல், வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருத்தல், ஒவ்வொரு வழியிலும் கணவனுக்கு ஒத்தாசையாக இருத்தல் முதலியன திருமணமான ஒரு பெண்ணின் கடமைகளாக ஆண் சமூகத்தால் வரையறுக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மெய்யான பணி கணவனுக்கும் குழந்தைக்கும் பணி செய்தல் என்று ஆணாதிக்கம் கருதுகின்றது. பெண்களுக்கான வரையறைகளை வகுத்த ஆண் வீட்டில் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண்ணோ இழி நிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். அவளின் வாழ்வு வீட்டுக்குள்ளேயே அமுங்கி விடுகின்றது. அவளின் உரிமைகள், வளர்ச்சி என்பன திட்டமிட்டு ஆணாதிக்க சமூகத்தால் நசுக்கப்படுகின்றன.

இவ்வாறு ஆணின் அடக்கு முறைக்கு உள்ளான பெண் அவனின் உடலின்ப வேட்கைக்கு கருவியானாள். இதனால் கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிவிட்டாள். பெண்ணின் நிலையை மேலும் கீழ் இறக்குவதாக இது அமைகின்றது. பெண்களுக்கு ஒதுங்கி வாழும் நிலையையும், தங்கி வாழும் நிலையையும் உருவாக்கிய ஆணாதிக்க சமூகம் பெண்ணை ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் இயந்திரமாக பிள்ளை பெறும் கருவியாக மட்டுமின்றி ஆணுக்கும் சேவை செய்யும் அடிமையாகவும் கேவலப்படுத்தியது.

பெண்கள் மரணமடையும் வரையிலும் குழந்தைகளைப் பெறட்டும். அவள் வேறெதுவாகவும் இருப்பதற்குத் தேவையுமில்லை. அதற்கு உரிமையுமில்லை என்ற டி. மார்டின் லூதரின் கருத்தானது ஆணாதிக்க சமூகத்திற்கு துணை போவதாய் இருக்கின்றது. பெண் என்ன குழந்தைகளை உற்பத்தி செய்யும் கருவியா? அவளுக்கென்று தனிப்பட்ட உரிமைகள், உணர்வுகள் எதுவும் இருக்கக்கூடாதா? அவளும் ஆணைப் போல் இரத்தம், நரம்பு, இதயம் உடையவள் தானே. பின்னர் ஏன் பெண் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டு கொடூரமாக நடத்தப்படவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகமானது தமது அடக்கு முறைக்கு இசைவாக பல செயற்பாடுகளில் இறங்கியது. பழமொழிகளையும் பாரம்பரியக் கதைகளையும் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு பெண்ணை அடிமைப்படுத்த முயற்சித்தது. அது அவர்களுக்கு ஆரம்பத்தில் வெற்றியையே தேடிக் கொடுத்தது எனலாம். அந்த வகையில் ""கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'' என்று கூறியே பெண்ணின் அடிமைத் தனத்தை ஆண் சமுதாயம் பண்பாடாக்க முயற்சிக்கின்றது. கணவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி அவனது அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அச்சம், மடம், நாணம், பொறுமை, அடக்கம் என்பவை பெண்ணுக்கு மிக முக்கியமாக கருதவேண்டிய பண்புகள் எனக்கூறி ஆணாதிக்க சமூகத்துக்குள் பெண்ணைப் பேணி வைக்கின்றனர். பெண்ணை இவ்வாறு அடிமைப்படுத்துவதன் மூலம் ஆண் வழிச் சமூகம் வளர்ச்சிபெற்றது. பெற்று வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பெண்களை அடக்கி ஒடுக்கிய காலம் இன்று மலையேறிவிட்டது. பெண்ணின் பெருமை உலகுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. பெண் புத்தி பின் புத்தி அல்ல. பெண் புத்தி முன்புத்தி என்று புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்ணினம் எதிர்பார்த்துப் போராட முயற்சி செய்யாததனால்தான் இதுவரை காலம் பெண்ணடிமைத்தனம் தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் பெண் இன்று போராடத் தயாராகிவிட்டாள். பெண்கள் இன்று மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர்களாக மீண்டும் எழுந்துள்ளார்கள். இன்று பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு ஒப்பாக நுழைந்து, அவர்களால் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆணாதிக்கம் தகர்க்கப்பட்டு ஆண் பெண் சமத்துவம் நிலவ வேண்டுமாயின் முதலில் ஆண்களுக்கு இணையான கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் என்பன பெண்களுக்குப் பூரணமாகக் கிடைக்க வழி செய்யவேண்டும். மண வாழ்க்கையில் கடமைகள், உரிமைகள் இருபாலாருக்கும் சம நிலையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பெண் மீதான ஆணின் அத்துமீறல்களுக்கு தண்டனை அளிக்கப்படவேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டால் தான் ஆண், பெண் சமத்துவம் நிலவ முடியும்.

மேலும் பெண் சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஒரு ஆணின் உழைப்பைச் சார்ந்து பெண் இருக்கும் வரை ஆணின் பொருளாதார நலனுக்கு உட்பட்டுத்தான் பெண் சிந்திக்க முடியும். எனவே இதிலிருந்து பெண் மீண்டும் சமூக உழைப்பில் சுய ஆற்றலுடன் வாழும் போதுதான் அவளது சிந்தனை வெளிப்படும். பெண்கள் சுயமதிப்பும் பொருளாதார சுயசார்பும் பெற்றுவிட்டால் மாத்திரமே சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நினைவு மையம் (Memory Centre)

அமெரிக்காவில் உள்ள ஒரு நரம்பியல் நிறுவனத்தில் 1952-53ஆம் ஆண்டுவாக்கில் 43 வயது நிரம்பிய பெண்மணி ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் ஒருவர் அவரது தலையின் ஒரு பகுதியைத் திறந்து மூளையை ஆய்வு செய்தார். இவ்வாய்வு நடைபெறுகையில் அப்பெண்மணிக்கு முழு நினைவு இருந்ததோடு மட்டுமல்ல அவர் எவ்வித வலிக்கும் ஆளாகவில்லை. அறுவை சிகிச்சை நடைபெற்ற அப்பகுதி மட்டும் மரத்துப் போகின்றவகையில் உணர்விழப்பு மருந்து அளித்திருந்தனர். இந்த வியத்தகு அறுவை சிகிச்சையை நடத்தியவர் டாக்டர் பென்·பீல்ட் என்ற மருத்துவர். அறுவை சிகிச்சையின்போது தம் கையிலிருந்த கருவி ஒன்றிலிருந்து கம்பிகளின் வழியாக திறந்திருந்த மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் செலுத்துவதற்கு அவர் ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.

டாக்டர் பென்ஃபீல்ட் கம்பிகளின் வழியே மின்சாரத்தை மூளையின் குறிப்பிட்ட அப்பகுதியில் செலுத்தியவுடனே, அந்தப் பெண்மணி ஒரு குழந்தையைத் திட்டுவது போலப் பொருளற்ற சொற்களை உளறத் தொடங்கினார். ஆனால் மின்சாரம் செலுத்துவதை நிறுத்தியவுடனே, அப்பெண்ணும் உளறுவதை நிறுத்தி விட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பிய அப்பெண்மணியிடம் டாக்டர் பென்ஃபீல்ட் கேட்டார்: "சிகிச்சையின்போது நீங்கள் கேட்ட இப்பேச்சுகள் நினைவிற்கு வருகின்றனவா?, அவற்றைப் பேசியவர் யார் என்பது தெரிகிறதா?" சிலவற்றை நினைவுபடுத்திப் பார்த்த அப்பெண்மணி இப்பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன்; ஆனால் அவற்றை நான் பேசவில்லை எனக் குறிப்பிட்டார். மீண்டும் டாக்டர் அப்பெண்ணிடம் இப்பேச்சுகளை யாரிடமிருந்து கேட்டீர்கள் என வினவ, அவர் தன் தாய் தன்னை இப்பேச்சுகளால் திட்டியதாகப் பதில் கூறினார்.

"உங்கள் தாய் இப்போது உயிருடன் இருக்கிறாரா?" டாக்டர் வினவினார். "இல்லை. அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன" அப்பெண்மணி விடை கூறினார். வியப்படைந்த டாக்டர் மீண்டும் வினவினார் : "அப்படியானால், இந்நிகழ்ச்சிகளைக் கனவு கண்டீர்களா?" பெண்மணி கூறினார்: "இல்லை, நிகழ்ச்சிகளை நினைவு படுத்திக் கற்பனை செய்து பார்த்தேன்; சிறு பெண்ணாகவே மாறிவிட்டேன்; என் தாய் என்னை அடிக்கடி திட்டும் சொற்களால் திட்டுவதாகவே உணர்ந்தேன்."

நினைவு மையத்தின் புதிர்களைக் கண்டறிய விரும்பிய டாக்டர் பென்ஃபீல்ட் இத்தகையப் பரிசோதனைகள் பலவற்றைச் செய்தார். மூளையில் நினைவு மையத்தின் இருப்பிடத்தையும், அம்மையத்தில் நினைவுகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பதையும் தமது ஆய்வுப் பரிசோதனைகள் வாயிலாக இறுதியில் பென்ஃபீல்ட் கண்டறிந்தார். மனித மூளையின் பணிகளில் மிகவும் வியக்கத்தக்க, புதிய, நம்பமுடியாத பல தகவல்கள் அவரது பரிசோதனைகள் வாயிலாக வெளிவந்தன. தமது ஆய்வில் சிறப்புச் சோதனையாக நினைவு மையச் சோதனையை பென்ஃபீல்ட் மேற்கொண்டார்.

டாக்டர் பென்ஃபீல்ட் காக்கை வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போதே, மனித மூளையின் செயல்பாடுகளில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார். மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் என அவர் நினைத்தார். எனவே மூளையின் அப்பகுதியை அறுவை சிகிச்சை நடத்தி நீக்குவதற்கான வழி வகையைக் கண்டறிந்ததோடு, மூளையின் நினைவு மையத்தில் சோதனைகளையும் நடத்தினார்.

மூளையிலுள்ள நினைவு மையத்தின் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினால், அப்புள்ளியில் பதிவாகியுள்ள நினைவுகள் வாய் வழியே வெளிப்படும். நினைவுப் பகுதியில் இத்தகைய புள்ளிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன; அவற்றில் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு குறிப்பிட்ட வகையான நினைவு பதிவாகியிருக்கும். இந்த நினைவு மையத்தை ஒரு கிராமஃபோன் இசைத்தட்டுக்கு ஒப்பிடலாம். இசைத்தட்டின் எந்த ஒரு வரியில் கிராமஃபோன் இசைத்தட்டு ஊசியை வைத்தாலும், அவ்வரியில் பதிவாகி இருக்கும் பாடல் வரிகளின் சொற்கள் அல்லது இசை ஒலி வெளிவரும். நினைவு மையமும் இவ்வாறே செயல் புரிகிறது. நினைவு மையத்தின் எந்தப் புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினாலும் அப்புள்ளியில் பதிவாகி இருக்கும் சொற்கள் தூண்டப்பெற்று உதடுகள் வழியே வெளிவரும்.

மனித வாழ்வில் நடைபெற்ற சாதாரணமான அல்லது அசாதாரணமான எந்த ஒரு நிகழ்வும் அவனது மூளையின் நினைவு மையத்தில் இயல்பாகவே பதிவாகி விட¸¢றது. சில நேரங்களில் நம் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அவற்றின் பயன்பாடின்மை காரணமாக மறந்து விடுகிறோம். அதே நேரத்தில் வேறு சில நிகழ்வுகளை அவற்றின் முக்கியத்துவம் காரணமாக வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் எது முக்கியமற்றது, எது முக்கியமானது என்பதை நமது மூளை அறிவதில்லை. எல்லா நிகழ்வுகளையும் மூளை நினைவு மையத்தில் பதிவு செய்து அவற்றை வாழ்நாள் முழுதும் சேமித்து வைத்துக் கொள்கிறது.

நினைவு மையத்தில் சேமித்து வைக்கப்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட நினைவிற்கு இணையான சில நிகழ்வுகள் அல்லது விவாதங்கள் நடைபெறும்போது அக்குறிப்பிட்ட நினைவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இப்புத்துயிர்ப்பு, நமது மூளையின் நினைவு மையத்தில் உரிய புள்ளியை நமது உடலில் நடைபெறும் இயற்கை உணர்ச்சிகள் தூண்டுவதால் நிகழ்கிறது. இத்தூண்டல் செயலை நிறைவேற்ற டாக்டர் பென்ஃபீல்ட் மின் அலைகளைப் பயன்படுத்தினார்.

ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சிந்திக்கும்போது, நினைவு மையத்தில் அப்பொருளுக்கு உரிய நினைவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் புள்ளிகளை இயற்கை உணர்வுகள் தூண்டி விடுகின்றன; இதனால் எண்ணங்கள் துண்டிக்கப்படாமல் சிந்தனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. சில வேளைகளில் தொடர்பில்லாத, வேறு நினைவுப் புள்ளியை இயற்கை உணர்ச்சிகள் தூண்டிவிடுவதால், சிந்தனை ஓட்டம் தடைபடுவதுமுண்டு. இதனால் தொடர்பில்லாத வேறு சில சிந்தனைகளும் நமது நினைவுக்கு வரக்கூடும். பார்வை, கேட்கும் திறன், பேச்சு இவற்றிற்கான மையங்கள் மூளையின் எப்பகுதியில் அமைந்துள்ளனவோ, அங்கேயே நினைவு மையமும் அமைந்துள்ளது. இந்நினைவு மையத்துடன் நமது அன்றாட வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. நாம் சிலவற்றைக் கேட்கும்போது அல்லது உற்றுப் பார்க்கும்போது, நமது மூளையில் உயிர் வேதியியல் சமிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவாகும் சமிக்கைகள் எப்போதும் நீக்கப்பட இயலாதவை. நினைவுச் சேமிப்பகமானது நம் வாழ்நாள் நீடிப்பதற்கேற்ப விரிந்து செல்லக்கூடியது.

நாம் வாழ்வில் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போது, அதற்குத் தொடர்புள்ள பழைய நினைவுகள் வெளிப்படுகின்றன. இதனாø பழைய மற்றும் புதிய அனுபவங்கள் ஒன்றிணைந்து முற்றிலும் புதியதோர் அனுபவம் உருவாகிறது எனலாம். ஒரு சுவையான எடுத்துக்காட்டுடன் இதனை விளக்குவோம்.

சிறு குழந்தை ஒன்று மிகப் பெரியதோர் நாயை முதன்முறையாகப் பார்க்கிறது. நாய் பற்றிய அனுபவம் இதற்கு முன்பு இல்லாததால் குழந்தை எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். திடீரென்று அந்த நாய் குரைத்து குழந்தை மீது பாய்கிறது. அச்சமுடன் திகிலுற்ற அக்குழந்தை வீறிட்டு அலறுகிறது. பெற்றோர் நாயை விரட்டி விட்டு அக்குழந்தையைத் தேற்றுகின்றனர். சிறிது நேரத்தில் குழந்தை அந்நிகழ்ச்சியை மறந்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சில நாட்களுக்குப் பின்னர் குழந்தை வேறொரு நாயை மீண்டும் காண நேர்கிறது. அந்த நாய் குரைக்கவில்லை; குழந்தை மீது பாயவில்லை; வாலை ஆட்டிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. இருப்பினும் குழந்தை முன்பு போலவே வீறிட்டு அச்சத்துடன் அழத் துவங்குகிறது. முந்தைய நிகழ்வு குழந்தையின் மூளையில் பதிவாகி, அந்நினைவு இப்பொழுது வந்திருப்பதே குழந்தையின் அழுகைக்குக் காரணம் எனலாம்.

டாக்டர் பென்ஃபீல்டின் குறிப்பிடத் தகுந்த இக்கண்டுபிடிப்பே அவரது மன நல சிகிச்சையில் முக்கிய பíகு வகித்தது.ஒரு மனிதன் தனது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த அதிர்ச்சிகள், கசப்பான அனுபவங்கள் ஆகியன நினைவு மையத்தின் ஒரு மூலையில் தங்கியிருந்து எதிர் காலத்தில் மனநோய்க்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய மன நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்களது மூளையின் நினைவு மையத்தில் பதிவாகி இருக்கும் நினைவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு வகையான மன நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வெற்றியும் சிறந்த முன்னேற்றமும் உண்டாகியுள்ளன என்பதில் ஐயமில்லை.

"தாவரங்களுக்கும் உயிருண்டு"

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.
மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.

டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living" என்பதாகும்.

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

டாக்டர் போஸ் தாவரங்கள் சுருங்குவதைப் பதிவு செய்யும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார்; அதற்கு "ஒளியிழை நாடிப்பதிவி (Optical Pulse Recorder)" எனப் பெயர். இக்கருவியின் உதவியோடு தாவரங்களின் உள் செயற்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பல்லிகள், தவளைகள், ஆமைகள், பழங்கள், காய்கறிகள் தாவரங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை அவர் விளக்கிக் காட்டினார். தாவரங்கள் மின் அலைகளை உற்பத்தி செய்கின்றன என்பதையும், பிற உயிரினங்களைப் போன்று அவையும் களைப்படைந்து போகின்றன என்பதையும் கண்டறிந்தார்.

அவர் தமது ஆய்வுகளுள் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது, இறந்து போகும் தாவரம் ஒன்று வலிமை மிக்க மின்னோட்டத்தை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார். அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் மற்ற உயிரினங்களைப் போன்றே இறந்து விடுகின்றன என போஸ் நிரூபித்தார். அதே வேளையில் உயிர்வளியின் உதவியுடன் அவை பிற உயிரினங்களைப் போன்று உயிர் பெற இயலும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

டாக்டர் போஸ் அவர்களின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று என்னவெனில், போதைப் பொருள்களின் தாக்கத்தால் தாவரங்களும் மயக்க நிலையை அடைகின்றன என்பதாகும். இதற்கான சோதனையின் போது தாவரங்கள் மயக்க நிலை காரணமாக, ஆழ்துயில் கொள்வதையும், பின்னர் மெதுவாக மயக்க நிலை நீங்கி அவை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் அவரால் கவனிக்க முடிந்தது.

தாவரங்களின் செயற்பாடுகள், அவற்றின் வளர்ச்சி முறை, அவற்றுள் உள்ள திரவம் மேல் நோக்கிப் பாய்தல் போன்ற பலவும், அவை சுற்றுச் சூழலில் இருந்து பெறும் ஆற்றலின் காரணமாகவே நிகழ்கின்றன என்றும், இந்த ஆற்றலை அவை தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன என்றும் போஸ் நிறுவினார்.

போஸ் 1918ஆம் ஆண்டு "கிரெஸ்கோகிராஃப் (Crescograph)" என்னும் கருவி ஒன்றை வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாகத் தாவரங்களின் இயக்கங்களைப் பல்லாயிரம் மடங்கு உருப்பெருக்கத்தில் காண முடிந்தது. மேலும் தாவரங்களில் ஒரு நிமிடத்திற்குள் நிகழும் மாற்றங்களையும் இக்கருவி பதிவு செய்யக்கூடியதாக விளங்கியது. ஒரு சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி தடைபடுவதாகவும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டார்.

டாக்டர் போஸ் அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் பற்றிப் புகழ் மிக்க பிரெஞ்சு சிந்தனையாளர் ஹென்ரி பெர்க்சன் இவ்வாறு பாராட்டிக் கூறினார்: "டாக்டர் போஸ் செய்த சோதனைகளும், கண்டுபிடித்த கருவிகளும் ஊமைத் தாவரங்களுக்குப் பேசும் ஆற்றலை வழங்கி உள்ளன."

தாவரங்களின் விருப்பு வெறுப்புகள் என்ன, அவற்றின் துன்ப துயரங்கள் யாவை, அவை கூற விரும்புவது என்ன, அவற்றுக்கு இன்னலும், இடரும் விளைவிப்பன யாவை, அவற்றிற்கு மகிழ்ச்சி ஊட்டுவன எவை, என்பன பற்றிய விவரங்களை எல்லாம் ஜகதீஷ் சந்திர போஸின் கண்டுபிடிப்புகள் விளக்கிக் கூறின. தாவரங்களின் சுவாசிப்பையும், குரல் ஒலியையும் ஒரு கருவியால் உணரச் செய்யலாம் எனவும், தாவரங்கள் உயிர் வாழ்வன, சுவாசிப்பன எனவும் தமது கண்டுபிடிப்புகள் வாயிலாக போஸ் அவர்கள் நிரூபித்தார். மலர் ஒன்றைப் பெண் ஒருத்தியின் மீது எறிந்தால், அதிகத் துன்பம் உண்டாவது பெண்ணுக்கா அல்லது மலருக்கா என ஓர் அறிவியல் அறிஞர் போஸின் ஆய்வுகள் குறித்துப் பேசும் போது வினவினார்.

உலக இயற்பியல் மாநாடு 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்றது; அதில் போஸ் "பன்முகத்தன்மை கொண்ட இயற்கையில் அடிப்படை ஒருமைப்பாடு" என்ற தமது ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்; அதனைச் செவிமடுத்த அறிஞர்கள் போஸின் கருத்துகளைக் கேட்டு திகைத்து நின்றனர். "இயற்பியல் நிகழ்ச்சிகள் ஒரு வரம்புக்குக் கட்டுப்படாதவை; குறிப்பிட்ட எல்லைக்குள் இயற்பியல் நிகழ்வுகளை அடக்க இயலாது; உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் இடையேயான வேறுபாடுகள் நாம் நினைப்பது போல் அதிகமல்ல, ஆய்வுக்கு அப்பாற்பட்டதுமல்ல;" இவை போன்ற கருத்துகள் அவரால் விளக்கப்பட்டன.

டாக்டர் போஸின் கருத்துகள் அக்கால மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவரது கருத்துகளைப் பொருளற்றவை எனக் கூறியோரும் உண்டு. ஆனால் தமது முடிவுகளை 1902ஆம் ஆண்டு போஸ் வெளியிட்டு, செயல்முறை விளக்கம் செய்து காட்டிய போது மக்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

பிரிட்டிஷ் அரசு 1917ஆம் ஆண்டு "சர்" பட்டம் அளித்து அவரைப் பாராட்டியது. தமது 59ஆம் அகவையின் போது கலகத்தாவில் ஓர் ஆய்வு நிறுவனத்தை போஸ் நிறுவினார். போஸின் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஜெர்மன், ஆஸ்திரிய விஞ்ஞானிகள் பாராட்டிப் பேசும் போது, இந்தியா அறிவியல் துறையில் பன்மடங்கு முன்னேறியுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

இயற்கை முழுதும் உயிர்ப்பும், உணர்வும் நிரம்பி, கிளர்ச்சியுடன் துடித்துக் கொண்டு இருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ் கூறி வந்தார். இயற்கை தன்னைப் பற்றிய பல புதிர்களை வெளியிட்டு வருவதாகவும், உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொண்டால் இயற்கையுடன் உறவாடுவதும், உரையாடுவதும் கடினமல்ல என்பதும் அவரது கருத்தாகும்

Saturday, October 25, 2008

"பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிணாமங்களிலும் பெண்ணியமும் தலித்தியமும் வௌவேறு போராட்டங்கள்"67 என்று ஏழுதுகின்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.

மனு தர்மம் என்ற நூலை எதிர்த்து எப்படி பெண்ணியம் போராடும் ஐயா? பார்ப்பனியப் பெண்ணியம் அதாவது அ.மார்க்ஸ் குறிப்பிடும் "மிருதுளா சின்கா" எப்படி மனுதர்மத்தை எதிர்க்கும். அ.மார்க்ஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது என்கின்றார். நீங்கள் எந்தப் பெண்ணியத்தைச் சொல்லுகின்றீர்கள். கேலி செய்யும் பெண்ணியத்தையா? எதை?

மனுதர்மப் பெண்ணியத்தை எதிர்க்க வேண்டுமாயின் அது உண்மையான பெண்ணியமாக இருக்கவேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து சுரண்டலை, ஆணாதிக்கத்தை, மற்ற பூர்சுவா மற்றும் பார்ப்பனியப் பெண்ணியத்தை எதிர்த்தும், சாதி அமைப்பைக் கடந்தும் போராட வேண்டும். இந்தப் பெண்ணியம் தான் மனுதர்மத்தை எதிர்க்கும். இந்தப் பெண்ணியம் கம்யூனிசப் பெண்ணியமாகும்.
அடுத்து தலித்தியம் மனுதர்மத்தை எதிர்க்கும் என்கின்றார். இது முழுமையானது அல்ல. தலித்தியம் மனு தர்மத்தை எதிர்க்க வேண்டுமாயின், தனக்கு உள்ளேயுள்ள மனுதர்ம வழிவந்த சாதிப்படி நிலையை முதலில் தகர்க்க வேண்டும். இதைத் தலித் மனுதர்மம், மறுக்கின்றது. இது மறுக்கப்படும் போது மிக கீழ் மட்ட சாதிக்கு இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்று தான்.

மனுதர்மத்தை எதிர்த்துப் போராட வேண்டும் எனின் தலித்துக்குள் உள்ள மனுதர்மக் கூறுகளை எதிர்த்துப் போராடுவதில் தொடங்குகிறது. தலித்துகளுக்குள் உள்ள மனுதர்மத்தைப் பாதுகாத்த படி ஒருக்காலும் வெளியில் உள்ள மனுதர்மத்தைத் தகர்க்க முடியாது. மனுதர்மத்தை எதிர்த்த போராட்டம் எல்லாம் சாதிப்படி நிலை ஒடுக்குமுறைக்குள்ளும் தொடங்குகின்றது. இது சாதியைக் கடந்த போராட்டத்தைத் தொடங்குவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மற்ற அனைத்துக் கோரிக்கைகளிலும் கைகோர்க்கின்றது. அப்போது மட்டும் தான் மனுதர்மத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் வேரறுக்கின்றன.

சாதியைக் கடந்து கோரும் மக்கள் தான், அதாவது பாட்டாளி வர்க்கம் தான் ஒட்டு மொத்த மனுதர்மத்திற்கு எதிராகப் போராடுகின்றது. அதை வேர் அறுக்கின்றது. மற்றவை அதைத் தக்க வைக்கவும், அ.மார்க்ஸ் கோருவது போல் சலுகைகளைக் கையேந்துவதிலும் தான் நீடிக்கின்றது.

அடுத்து அரவிந் அப்பாத்துரையின் பொன் மொழியைப் பார்ப்போம். "தத்துவரீதியில் கம்ய+னிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ......மார்க்சியவாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்குத் துணை நிற்கக் கூடும். இதைத் தவிர்த்து கம்யூனிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு "பூடகம்""67 என்கின்றார்.

கம்ய+னிசம் பற்றி தனது "பூடகமான" நிலையில் நின்றும், திரித்தும் வெளியிடும் கம்யூனிச எதிர்ப்பு அறிவியல் சார்ந்ததல்ல. கம்யூனிசம் தத்துவரீதியாகச் சம உரிமை கோருகின்றதாம். இதைப் பொருளாதாரத்தில் கோருகின்றதாம். எல்லா வண்ணப் பிழைப்புவாதிகளும் கம்யூனிசத்தைப் பொருளாதாரப் போராட்டமாகச் சுருக்கி, அதில் போராடிப் பிழைத்து அம்பலப்படுகின்றனர்.

பொருளாதாரத்தில் சமத்துவம், சமஉரிமை தான் போதும் எனின் தொழிற்சங்கப் போராட்டம் போதுமானதாக இருக்கும். இன்றைய தொழிற்சங்கங்கள் கம்ய+னிசப் புரட்சியில் இருந்து விலகிச் சென்ற பாதை இதுதான்.


கம்யனிசம் வர்க்கப் போரைக் கோருகின்றது. வர்க்க ஆட்சியைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கக் கோருகின்றது. இது வர்க்க எதிரிகளை ஒழித்துக் கட்டக் கோருகின்றது. இது தனிச் சொத்துரிமையை ஒழித்துக் காட்டுகின்றது. இதன் போராட்டப் பாதையில் சம உரிமை என்பது மறுத்து விடுகின்றது. பொருளாதாரத்தில் சமத்துவத்தை அல்ல தேவையை எடுக்கக் கோருகின்றது.


பொருளாதார வாதத்துக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நிறுவ மார்க்ஸ்-லெனின் பல நிறைய தத்துவப் போராட்டங்களை நடத்தி கம்யூனிசத்தை நிறுவினர். இதைப் "பூடகம்" போல் இல்லாது படித்து கம்ய+னிசத்தைத் திரிக்காது பார்க்காதவரை எப்போதும் கம்யூனிச எதிர்ப்புதான் அகராதியாகின்றது.


பெண்ணியத்தில் சம உரிமைக்குத் துணைநிற்கும், அதற்கு வெளியில் கம்ய+னிசம் ஒரு பூடகம் என்கிறார். இது அறிவு சூனியத்தின் குருட்டுப்பார்வை தான். பெண்ணியத்திற்குச் சம உரிமை கிடைத்தபின் எப்படி ஐயா பெண்ணியக் கோரிக்கை எழும்? சம உரிமை என்பது எல்லாத் துறையிலும் நடக்க வேண்டும்.


கம்ய+னிசம் வர்க்கப் போரைப் பொருளாதாரத்தில் நடத்துவதில்லை. அது சுரண்டலுக்கு எதிராக, அதற்குக் காரணமான அனைத்துத் துறைகளுக்கும் எதிராகப் போராடுகின்றது. சுரண்டல் என்பது உருவாக்கியது தான், ஆணாதிக்கம், சாதிக் கட்டமைப்பு, பாலியல் வக்கிரங்கள் ........ என அனைத்துமாகும். இதை எதிர்க்கும் வர்க்கப் போராட்டம் சுரண்டலை ஒழிக்கும் போது அது அனைத்துத் துறையிலும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். இது மட்டும் தான் கம்ய+னிசத்தின் கோரிக்கையும் வெற்றியுமாகும்.


மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், மதம்........ என இன்றைய அனைத்தையும் மறுத்து மாறுதலைக் கம்யூனிசம் கோருகின்றது. இதைப் புரிந்து கொண்டால் பெண்ணியத்துக்காக ஒரே ஒரு போராட்ட வடிவம் கம்ய+னிசமாக இருப்பதைக் காண முடியும். இதைவிட்ட அறிவு சூனியப் "பூடகமாக" இருப்பதால் எதுவும் நடக்காது, வம்பளப்பதும் சுகிப்பதும்தான் எஞ்சும்.

மனிதனின் தோற்றம் (Origin of Man)

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன. டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார்.

இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார்.

சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்.

1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.

நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார்.

தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: "இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்" என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.

இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய "இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)" என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார்.

டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: "டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?". ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: "வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை." பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் "இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)", தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)" என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது.

இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.

அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel's Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.

பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்

Friday, October 24, 2008

தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது

தாய்ப்பாலின் மகிமை பற்றி இன்னும் சில தாய்மார் களுக்கு தெரியவில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் பெண்கள் இருக் கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிற்காலத் தில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் சுறு சுறுப்பாகவும் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார் களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும் என்பதை டாக்டர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தைக்கு 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஓரளவு குறைவாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

இதன் முலம் மார்பக புற்று நோயை உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு கணிசமாக குறைகிறது. மார்பக செல்களில் மரபணு (டி.என்.ஏ.) சேதம் அடை வதை தடுக்க முடியும் என்றும் ராச்சல் தாம்சன் என்ற பெண் டாக்டர் பல்வேறு பெண்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்

Monday, October 20, 2008

உலகெங்கும் உணவு நெருக்கடிக்கு உச்சிமாநாடுகள்; ஆனால் உண்பதற்குக் கிடைப்பது அரைவயிறு உணவே


செல்வந்த நாடுகள் துரித கதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறிய மக்கள் இரண்டு பில்லியனாக அதிகரிக்கும் நிலை உருவாகும்
உணவுக்கான உச்சிமாநாடுகளின் பின்னர் ஒன்று 1996 இல், மற்றையது 2002 இல் சர்வதேசச் சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவின்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது.

1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்திற் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் மூன்று ஐ.நா மகாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன்தரவில்லை. இரண்டு உச்சிமாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர்.

30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ள நிலையிலும் 60 க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி, தானியப் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் 150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய 3 ஆவது உலக உச்சிமாநாட்டில் வியாழனன்று தலைவர்கள் இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

யூ.என்.செயலாளர் நாயகம், பான்கி மூன் ரோமாபுரி உச்சி மகாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது "வைபீறியாவில், அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்துள்ளேன்' என்றார்.

இந்த மகாநாட்டிற் கேட்ட பேரொலி யாதெனில் சர்வதேசச் சமூகத்தின், விசேடமாக செல்வந்த நாடுகளின் அரசமைப்புக்களை இந்த நெருக்கடிக்கும் தீர்வுகாணவேண்டிய தேவையுள்ளது என்பதை அழுத்தமாக விளங்கவைக்க வேண்டும் என்பதாகும்.

"நாங்கள் துரிதகதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறியமக்கள் இரண்டு பில்லியன்களாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களது பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டித்ததனால் அரைவாசியாகக் குறைந்துள்ளது' என்கிறார் . பசி,பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் யூ.என். ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் ஜோசெற்ஷிறான்.

உலக உணவுத்திட்டம் இந்த வருடம் அது 78 நாடுகளைச் சேர்ந்த 90 மில்லியன் மக்களுக்கு 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவு உதவியைச் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. இந்த நாடுகளுள் அதிகம் பாதிக்கப்பட்டனவான ஹெயிற்றி, ஆப்கானிஸ்தான், சோமாலியா, எதியோப்பியா, கென்யா ஆகியன அடங்கும்.

உரோமாபுரியைத் தளமாகக் கொண்ட உணவு, விவசாய நிறுவனத்தின் அனுசரணையில் 3 நாட்களாக நடைபெற்ற உச்சிமகாநாடு பிரகடனப்படுத்துவதாவது; உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போஷாக்கின்மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனம். ஆனால் இறுதியில் இதில் எவ்வளவு வீதம் நடைமுறைப்படுத்தப்படும்?

இந்தப் பிரகடனத்துடன் தளம்பல் நிலையிலுள்ள எண்ணிக்கையும் வெளிவந்தது. செயலாளர் நாயகம் உச்சி மாநாட்டில் கூறியதுபோல உறுதியான புதியவளங்கள் தேவைப்படுகின்றன. அல்லது உலகளாவிய இந்த நெருக்கடியைத் தீர்க்க வருடமொன்றிற்கு 1520 பில்லியன் டொலர்களும் மேலும் ஆபிரிக்காவில் பசுமைப் புரட்சியின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வருடந்தோறும் 810 பில்லியன் டொலர்களும் தேவைப்படும்.

சான்பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஒக்லன்ட் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அனுறாதா மிற்றால் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது: முதற் பார்வையில் உச்சி மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உத்தரவாதங்கள் நம்பிக்கையூட்டுவன.

அவர் கூறுவதாவது: உணவு நெருக்கடியினாற் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக உதவிகளுக்கும், கொள்ளை சிபார்ஸுகளுக்கும் அழைப்புவிடுப்பது. மேலும் இவற்றுள் சிறுவிவசாயிகளுக்கு உதவி, சமூகப் பாதுகாப்பு வலுப்படுத்தல், உணவு சேமித்துவைத்தல், ஆபத்து வேளைகளில் உதவக்கூடிய செயன்முறைகள் ஆகியனவும் உள்ளடக்கப்படுதல் போன்றனவற்றிற்கு அழைப்பு விடுத்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிறார்.

அதேவேளையில், மத்திம,நீண்டகாலச் சிபார்ஸுகள், விவசாயத்திற்கு மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியனவும் உணவுப்பற்றாக்குறையை நீக்க உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மிற்றால் மேலும் கூறுவதாவது: "அண்மைக்கால உணவு விலை நெருக்கடியும், அதிகரிக்கும் பட்டினி நிலையும் சர்வதேசச் சந்தையில் பொருட்கள் வர்த்தகம் செய்யப்படுதல் என்பதற்குப் பதிலாக புதிய விவசாய, உணவுக்கொள்கையின் தேவையொன்றை வேண்டி நிற்கிறது. இதற்கு மூன்றாவது உலக நாடுகளுக்கு உணவு நிறைவை உறுதிப்படுத்த உறுதியான கொள்கையொன்று அவசியமாகிறது.

மேலும் மூன்றாவது உலகநாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தவறான வழிநடத்தல்களிலிருந்து விலகிக்கொள்ளும் திறமையும் அவசியமாகிறது.

சிறுவிவசாயிகளை மையமாகக் கொண்டு ஒரு விவசாய முறையை உருவாக்குவது. விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், உள்நாட்டுச் சமூகங்கள் ஆகியவர்களை அடிப்படையாகக் கொண்டு உணவு நிறைவையும், நாடுகளின், உணவுக்கான சுயதேவைப் பூர்த்தியையும் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும் ஆகும்.

சர்வதேசச் செயற்பாடு, ஏற்கனவே உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்கிறது எனப் பான் கூறினார்.

உணவு விவசாய நிறுவனம் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு விதைகள், வேறு விவசாய உதவிகளைச் செய்தற் பொருட்டு 1.7 பில்லியன் டொலர்களுக்காக அழைப்புவிடுத்துள்ளது.

இந்த வருடத்திற்கான உத்தரவாதங்களை நிறைவேற்ற உலக உணவு நிறுவனம் சவுதி அரேபியாவிடம் இருந்து 755 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது.

உணவு, விவசாய நிறுவனம் மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களைப் பாதிக்கப்பட்ட நாடுகளில் வறிய கமக்காரர்களுக்குக் கொடுக்கிறது.

மேலும் உலகவங்கி 1.2 பில்லியன் டொலர் நிதி வசதியை உருவாக்கி உணவு உற்பத்தியைப் பெருக்க உதவ முன்வந்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்கள் உலகின் மிகவறிய நாடுகளுக்கு உதவுவதற்காகும்.

ஐக்கியநாடுகள் சபையும் சி.ஈ.ஆர்.எவ். நிதியத்திலிருந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையினால் பாதிக்கப்படும் மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளுக்காக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

அவர் மேலும் கூறியதாவது, வளர்ந்துவரும் நாடுகள் தமது விவசாயப் பகுதியில் இன்னும் அதிகளவு நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும், அவை தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும், மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வலுவையும் கட்டுப்படுத்தி விடுமென்றும் கூறினார்.

தற்போதைய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலை மூன்று தசாப்தகாலமாக விவசாயத்தில் காட்டப்பட்ட சந்தை ஒழுங்கின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது.

மிற்றால் கூறுவதாவது: ஆகவே உணவு உற்பத்தியை ஸ்திரப்படுத்தவும், தகுந்த முறையில் உணவை நியாயமான விலையில் உலகளாவிய ரீதியில் விநியோகிக்கவும் நல்ல தீர்வுகளைக் காணுமாறு அழைப்புவிடுக்கிறோம்.

அதேவேளையில் 237 அரசசார்பற்ற நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புக்களும், ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளன. அவை உலக வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பஸ்கால்லாமியை வானளாவும் உணவுப் பொருட்களின் விலைக்கான விடை உணவு உற்பத்தி, வர்த்தகம் மேலும் ஒழுங்கீனம் ஆக்குவதிற் தங்கியிருக்கவில்லை என எச்சரித்துள்ளன.

அக்கடிதம் டோகா செயற்பாடுகள் உலக உணவு முறையை எதிர்நோக்கும் பாரிய சவால்களை நிர்ணயிக்கவில்லை. அது காலநிலை மாற்றத்தையும், இயற்கை வளங்கள் குறைதல், எரிபொருட்களின் விலை நாலுமடங்காதல், வர்த்தக சந்தையில் போட்டியின்மை, பயோ எரிபொருள்கள் அதிகரித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதிற் கையொப்பமிட்டவர்கள் அக்ஷன் எயிட் இன்ரர் நாஷனல், ஆபிரிக்கா வர்த்தக வலைப்பின்னல், ஏஷியன் பெசன்ற் கொயலிஷன், ஒக்ஸ்பாம், ஒக்லன்ட் மன்றம் எல்.ஏ.சி.ஆர்.எம்.தேட்வேள்ட் நெற்வேக், பூமியின் நண்பர்கள் பூட்ஸ்பான் ஆகியவையாகும்.

நிதி மூலதனம் உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது


நிதி மூலதனம் உற்பத்தியையும் உறிஞ்சுவதால், உற்பத்திக் கூறுகளே அழிகின்றது. இந்த நிதி மூலதனத்தை படைக்கும் உற்பத்தியோ உழைப்பிலானது. நிதி மூலதனம் பெருத்து வீங்குவது, அதன் இருப்புக்கான விதி. தனது ஒழுக்கக்கேடான இருப்பு சார்ந்து, உற்பத்தியையும் உழைப்பையும் உறிஞ்சிவிடுகின்றது. உற்பத்தியும், உழைப்பும் வெறும் சடலங்களாக மாறிவிடுகின்றது. அது செயலிழந்து நலிந்து போகின்றது.

இப்படி நடமாடும் இந்த பிசாசுகளின், மிக அண்மைய காலத்தைய வரலாறு என்ன? நாடுவிட்டு நாடு கடக்கும் வங்கி தொழில், 1960இல் மொத்த உலக உற்பத்தியில் 1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது 1980இல் 20 சதவிகிதமாக அதிகரித்தது. அதை பாதுகாக்க, விரிவாக்க, சூறையாட உருவாக்கப்பட்டதுதான் உலகமயமாதல்.

இப்படி எதார்த்தத்தில் நிதி மூலதனம், பெருமெடுப்பில் சூறையாடுவதற்காக உற்பத்திக்கு வெளியில் குவிந்துவிடுகின்றது. இப்படி நிதி மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுவதிலும் பார்க்க, அதிக இலாபத்தை பெறும் வக்கிரத்தால் சூல் கொண்டு நிற்பதால், போட்டி அதிகரிக்கின்றது. உற்பத்தி மீதான மூலதனத்தின் பங்கை வாங்கும் சூதாட்டத்திலும் இறங்குகின்றது. வட்டித் தொழிலும் அத்துடன் உற்பத்தி மூலதனத்தை வாங்கி அதை உறிஞ்சிய பின் துப்பிவிடுகின்றது.

பங்கு என்ற இந்தச் சூதாட்டத்தில், வீங்க வைத்து வெம்ப வைத்துதான் நிதி மூலதனம் இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்ற நிலை. பங்குகள் தலைகால் தெரியாத வேகத்தில் ஓடும் போது, நிதி மூலதனம் பெருமெடுப்பில் வந்து குதிக்கின்றது. இதுவே மிகப் பெரிய உலகச் சூதாட்டங்களில் ஒன்றாகிவிடுகின்றது.

உலகின் பங்கு பத்திரச் சந்தை 1970இல் 1,00,000 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 1980இல் 2,00,000 கோடி டொலராகியது. 1990இல் 12,00,000 கோடி டொலராகவும், 1995இல் 20,00,000 கோடி டொலராகவும், 1998இல் 25,00,000 கோடி டொலராகவும் அதிகரித்தது. 1970இல் இருந்தைவிட 25 மடங்காக பெருகியது. இந்த நிதி சூதாட்டம் மூலம் சம்பாதித்தல் என்பது, உற்பத்தியானதல்ல. இழப்பு என்பது அதன் விதி. இங்கு உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை. சேமிப்புகள், உற்பத்திகள்தான் சூறையாடப்படுகின்றது. மறைமுகமாக சுற்றுவழிகளில் மனித உழைப்பு உறிஞ்சப்படுகின்றது. இது திவால் உற்பத்தியை மட்டுமல்ல, உழைப்பையும் இல்லாதாக்குகின்றது.


மறுபக்கத்தில் நாட்டை சுற்றி வளைத்து விற்றல். அதாவது நேரடிக் கடனுக்கு பதிலாக, பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இப்படி 1996இல் உலகளாவில் விற்கப்பட்ட பத்திரங்கள் பெறுமதி 5,30,000 கோடி டொலராகும். இது நாட்டை பகுதிபகுதியாக நிபந்தனை இன்றி விற்பதற்கு வழி செய்கின்றது. பெருமளவிலான நிதி, தமக்கு இடையில் கடுமையான போட்டியுடன், ஒன்றையொன்று விழுங்கும் ஒழுக்கக்கேட்டுடன்தான் இயங்குகின்றது. தன்னை பெருக்குவது என்ற பிசாசுத்தனத்துடன், தனக்கு கீழ் அனைத்தையும் மாற்றி விடுவதற்கு முனைகின்றது.


இப்படி உலக மக்களின் சிறு சேமிப்புகளையும், உழைப்பின் மிச்சமீதங்களையும் கொள்ளையிடுவதை தவிர வேறு வழி கிடையாது. சூதாட்ட விடுதிகளில், அதிக அளவிலான கனவுகளுடன் எப்படி பணத்தைப் போட்டு இழக்கின்றனரோ, அதேபோல் பங்குப் பத்திரத்திலும் அன்றாடம் நிகழ்கின்றது. இந்தச் சூதாட்டம் என்பது, அதை இழப்பதை அடிப்படையாகக் கொண்டது. பங்குச் சந்தை என்பதே மற்றவன் பணத்தை திருடும் பகிரங்கமான சூதாட்ட மையம்.


இந்தப் பணம் ஏகாதிபத்தியங்களில் இருந்துதான் பெருமளவில்பாய்கின்றது. அங்குதான் செல்வம் குவிந்து வருகின்றது. உலகளாவிய பணத்தின் இருப்பு தான், பங்குச் சந்தையையும் ஆவியாக இறங்கி உறிஞ்சுகின்றது.


உலக அளவில் பணம் வைப்பு எந்த பணத்தில் உள்ளது என்பதைப் பார்த்தால், அதன் சூறையாடு திறனையும் இனம் காணமுடியும். (தற்போது ஈரோ)




1975- 1992 1992
டொலர் 69.1 64.4
ஜப்பான் யென் 5.6 8.3
ஜெர்மனிய மாக் 13.1 13.2
பவுன், பிராங், சுவிஸ் பிராங் 7.2 8.4
மற்றையவை 4.9 5.5


சர்வதேச நிதி என்பது, ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானது மட்டுமல்ல, அவர்களின் பணத்திலும் உள்ளது. இது நிதி மூலதனத்தைக்கொண்டு உலகைச் சூறையாட வசதியாகவும், வாய்ப்பாகவும் மாறிவிடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் கையிருப்புகள் கூட ஏகாதிபத்தியப் பணத்தில் வைத்திருப்பது என்பதே, இங்கு விசித்திரமான உண்மை.


உதாரணமாக ஆசிய மத்திய வங்கி தனது சேமிப்பின் 70 சதவிகிதத்தை அயல் நாட்டு நாணய சேமிப்பு நிலையங்களில் வைத்துள்ளது. இதன் மொத்தத் தொகை 1,70,000 கோடி டொலராகும். இந்த நிதியை அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் முதலிடுகின்றனர். அதாவது நிதியில் 80 முதல் 90 சதவிகிதத்தை இதற்காக செலவு செய்துள்ளனர். பத்திரப்பங்கான சூதாட்டத்தில் இடும் இவர்கள், கடனை அடைத்து நாட்டைப் பாதுகாக்க பயன்படுத்துவதில்லை.


டாலரின் சரிவும், கடனை மீளப் பெறத் தூண்டும் போது, கடன் பத்திரம் திவõலாகிவிடும் என்பதே உண்மை. அமெரிக்கா இந்த நிதியைத் தர முடியாது என்று அறிவிக்கும் பயங்கரமும் நிகழும், நிகழ்கின்றது. வெளிநாடுகளின் நாணய கையிருப்பில், 73 சதவிகிதம் டொலரிலேயே இருந்த அபாயம், கத்தி முனையில்தான் உலகை நடக்க வைத்தது. தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகள், தொடர்ச்சியான ஏகாதிபத்திய முரண்பாடுகள், டொலரின் சரிவு என்பன, மாற்று (ஏகாதிபத்திய) நாணயத்தில் பணத்தை வைத்திருப்பதை தூண்டியது. இருந்தபோதும் டொலர் தான், நிதியின் மொழியாக அதன் ஆன்மாவாக இன்றும் நீடிக்கின்றது.


இப்படிப்பட்ட நிதி மூலதனம் உற்பத்திக்கு வெளியில், உற்பத்தியை உறிஞ்சி சூறையாடுகின்றது. உற்பத்திக்கான சகல அடிப்படைகளும் தகர்க்கப்படுகின்றன. நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு இசைவாக, உற்பத்தி மூலதனம் ஈடுகொடுக்க முடியாது நெருக்கடிக்குள்ளாகின்றது. யார் உழைப்பில் இருந்து அதிகம் சூறையாடுவது, என்ற வெறி புதிய போக்காகியுள்ளது. உற்பத்தி மூலதனம், கடுமையான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.


நிதி மூலதனம் வீங்கி நிற்கின்றது. பெருமளவில் நிதியைத் திரட்டி வைத்துக் கொண்டு, அடங்காப் பசியுடன் அலைகின்றது. இப்படி 1995இல் நாள்தோறும் 90,000 கோடி டொலர் உற்பத்திக்கு வெளியிலான, பணப்புழக்கத்தில் ஈடுபட்டது. இது 2003இல் 3,00,000 கோடி டொலராகியது. இப்படி உற்பத்திக்கு வெளியில் நாள்தோறும் நிகழும் பணப்புழக்கத் தொகை 2,00,000 முதல் 3,00,000 (2 முதல் 3 டிரில்லியன்) கோடி டொலராக மாறியது. லண்டன் ஈரோ டாலர் சந்தையில் நாள் ஒன்றுக்கு புரளும் நிதியோ, 30,000 கோடி டொலராகியது. வருடம் இது 75,00,000 (75 டிரில்லியன்) கோடி டொலராகியது. உலகில் நாள் ஒன்றுக்கு நிதி மாற்றப்படும் தொகையோ 15,000 கோடி டொலராகவுள்ளது. வருடம் 38,00,000 (38 டிரில்லியன்) கோடி டொலராகவுள்ளது.


ஐரோப்பிய ஏகபோக வங்கிகள் கொடுக்கல் வாங்கல் மூலம் நாள் ஒன்றுக்கு 3,00,000 கோடி டொலரை, அதாவது வருடம் 7,50,00,000 கோடி டொலரை (750 டிரில்லியன்) கையாளுகின்றது. இது உலக வர்த்தகத்தைப் போல் 25 மடங்கு அதிகமாகும். இது போல் அன்னியச் செலாவணி சந்தையில் நாள் ஒன்றுக்கு 1,50,000 கோடி டொலரை கையாளுகின்றது. அதாவது வருடம் 3,50,00,000 கோடி (350 டிரில்லியன்) டொலராகும். இது உலகப் பொருள் மற்றும் சேவைத்துறை போல் 12 மடங்கு அதிகமாகும்.


நிதி மூலதனம் இப்படி உலகைச் சூறையாடுவதில் காட்டுகின்ற தீராத காதல், சமூகத்தை மலடாக்கி அது கொழுக்கின்றது. உற்பத்தி மூலதனம் உருவாக்கும் உழைப்பைச் சூறையாட, இதற்கு வெளியிலான இந்த நிதி மூலதனம் அன்றாடம் இயங்குகின்றது. இது தன்னை இந்த வழிகளில் பெருக்கிக் கொள்வதால், நிதி மூலதனத்தின் இயக்கம் என்பது உயிர்க்கொல்லியாக மாறிவிடுகின்றது.
இது போலியான வடிவில் கூட தன்னை நிலைநிறுத்தி சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றது. இப்படி போலியான நிதி மூலதனம் 25,00,000 கோடி டொலராகும். அதாவது வருடம் 62,50,00,000 கோடி (6,250 டிரில்லியன்) டாலர் போலியாக சூதாட்டத்தில் உள்ளது. ஆனால் உலக வருடாந்த வாணிபம் 1,00,00,000 கோடி (100 டிரில்லியன்) டொலர் மட்டுமேயாகும். போலியாக நிதி மூலதனம் 62 மடங்கு மேலாக இயங்கி, சூதாட்டத்தை நடத்துகின்றது. வர்த்தகம் என்பதே உண்மைப் பணமற்ற, போலியான சுழற்சிக்குள் நடத்தப்படுகின்றது. அசல் எது? போலி எது? என்பது இனம் காணமுடியாத வகையில், நிதிமூலதனமே போலியாகிவிட்டது.


மற்றொரு உண்மை, இந்த உலக அமைப்பின் இழிநிலையை தெளிவாகவே பறை சாற்றுகின்றது. அதாவது உலகில் நாள்தோறும் கைமாறும் 7 டொலரில் 1 டொலர் தான் வர்த்தகத்திற்கு பயன்படுகின்றது. அத்துடன் நாள்தோறும் 1,20,000 முதல் 1,50,000 கோடி டொலர், உற்பத்தி அல்லாத துறையில் கைமாற்றப்படுகின்றது. எப்படிப்பட்ட ஒரு உலக ஒழுங்கு?


உலகில் ஏழு டொலருக்கு ஒரு டொலர்தான் வர்த்தகத்தில் ஈடுபடும் போது, ஆறு டொலர் மனித இனத்துக்கு எதிரான வகையில் மற்றொரு தளத்தில் செயலாற்றுகின்றது. இப்படி பெரும் தொகையிலான சூறையாடல் என்பது, உலகமயமாக்கலின் உச்சக் கொப்பளிப்பாகும். இந்த நிதி மூலதனத்தின் அனைத்து விதமான செயற்பாடும், உழைப்பின் மீது தான் நடத்தப்படுகின்றது. மனித உழைப்புதான் செல்வம். அந்தச் செல்வத்தை அடைவது, எந்த வழியாகவும் இருக்கலாம். ஆனால் அதன் ஒழுக்கக்கேடு என்பது சூறையாடுவது தான்.


போலியான சூழ்ச்சியை நிதி மூலதனம் மூலம் கட்டமைக்கின்ற உலகமயமாதலின் உண்மை நிலவரமோ பயங்கரமானது. 2001இல் உலகளாவிலான உள்நாட்டு உற்பத்திகளின் மொத்தப் பெறுமதி 31,00,000 கோடி (31 டிரில்லியன்) ஈரோ மட்டும் தான். இதில் ஏற்றுமதி இறக்குமதி 13,00,000 கோடி (13 டிரில்லியன்) ஈரோக்கள் தான். ஆனால் உற்பத்தி சாராத (ஈடுபடாத) பணமாற்று மட்டும் 3,60,00,000 கோடி (360 டிரில்லியன்) டொலராக இருந்தது. நடப்பது போலியான பொய்யான சூதாட்ட மூலம் சம்பாதிப்பது. உற்பத்திக்கு வெளியில் வெறும் பேப்பர் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையான நிதி மூலதனம் இல்லாமலேயே, உண்மையான பொருட்களும் இல்லாமலேயே ஒரு போலியான வர்த்தகம் நடத்தப்படுகின்றது. இது உலக உழைப்பின் வளத்தை உறிஞ்சி, அதன் மேல் சொகுசாகவே இயங்குகின்றது. இதுவே குமிழிப் பொருளாதாரமாகி, வீங்கி வெம்பி மிதக்கின்றது.


உற்பத்தியை விட பல மடங்காக, உழைப்பை விட பற்பல மடங்காகி, இது வீங்கி வெம்பிப் போய் நிற்கின்றது. உழைப்பிலான உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் இந்த போலியான பணமாற்றுகள் இயங்குகின்றது. சூறையாடப்படுவது இதற்குள்தான். இதனால் முதலாளித்துவத்தின் உண்மை பெறுமானத்தில் கூட, நுகர்வோருக்கு பொருட்கள் மூலம் கிடைப்பதில்லை.


நிதி மூலதனம், அதனுடன் சேர்ந்து இயங்கும் போலியான நிதி மூலதனத்தின் இருப்பு என்பதும், அதன் வாழ்வு என்பதும், மனித உழைப்பின் மீதான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உழைப்பைச் சூறையாடுவதுதான். சுதந்திரம், ஜனநாயகம் என்பது இந்த அர்த்தத்தில் மட்டும்தான், ஒரு சமூக அடிப்படையாகவும் சமூக ஒழுங்கை நிர்ணயிக்கின்ற காரணியாகவும் உள்ளது

Friday, October 17, 2008

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டு. ஆனால் மன்மோகன்சிங் ஒன்றை மட்டும் சொல்கிறார்.

"பட்ஜெட் பற்றாக்குறையை - செலவை - குறைக்க வேண்டும்". எப்படி?

ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசிக்கு மானியமா? மானியத்தை வெட்டு! விலையை உயர்த்து. விவசாயிகளுக்கான உரத்துக்கு மானியமா? வெட்டு! விலையை உயர்த்து!

இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

கடைசியில் சராசரிக் கணக்கு - மொத்தக் கணக்கு போட்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அப்படியானால், செலவைக் குறைக்க, வரவை அதிகரிக்க என்னதான் செய்வது?

* நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும்.

* கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்

* அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்.

* ஏழை மக்களுக்கான மானியத்தை வெட்டுவதற்குப் பதிலாக, ராணுவம் மற்றும் இது போன்ற உற்பத்தி தொடர்பற்ற சமாச்சாரங்களுக்குக் கோடானு கோடி ரூபாய் கொட்டி அழுவதை வெட்டி சுருக்க வேண்டும்

* நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

- இவற்றைச் செய்தாலே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குத் தேவை இருக்காது. அதன் மூலம் ஏற்படும் கரன்ஸி நோட்டு அச்சடிப்பும் பணவீக்கமும் இருக்காது.

- ஜவஹர், 9.10.1992ல் ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

2012ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 7 பில்லியன்; வளப்பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம்: அமெரிக்கா

2012ஆம் ஆண்டு உலகத்தின் சனத்தொகை 7 பில்லியனை எட்டிவிடுமென்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வுகூறியுள்ளது.

உலகத்தில் தற்பொழுது 6.7 பில்லியன் மக்கள் வாழ்ந்துவருவதுடன், அமெரிக்கா 304 மில்லியன் சனத்தொகையுடன் உலகத்தில் மூன்றாவது சனத்தொகை கூடியநாடாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம், சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா இருப்பதாகக் கூறியுள்ளது.

இலங்கை 21,128,773 பேர் சனத்தொகையுடன் உலகத்தில் 53வது இடத்தில் உள்ளது.

உலகத்தின் சனத்தொகை 1999ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தாண்டியது. இதன்படி, 13 வருடங்களில் அது ஒரு பில்லியனால் அதிகரிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டு ரீதியில், 1800ஆம் ஆண்டுவரையில் உலக சனத்தொகை 1 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனக் குறிப்பிடும் சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் நிபுணர் கார்ல் ஹஊப், அடுத்த 130 வருடங்கள் வரையில் சனத்தொகை 2 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனவும் கூறினார்.

“அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தற்பொழுது சனத்தொகை அதிகரித்துச் செல்கின்றமையை இலகுவில் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்” ஹஊப் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றினால் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கலாச்சார மாற்றங்கள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்தல் மற்றும் வேலைத் தளங்களுக்குச் செல்தல் போன்றன அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார். சனத்தொகைப் பெருக்கம் அதிகமாக இருந்தாலும் அதன் வளர்ச்சிவீதம் குறைவாகக் காணப்படுவதற்கு அவை முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சனத்தொகை வருடாந்தம் 1.2 வீதத்தால் அதிகரிக்கிறது. எனினும், 2050ஆம் ஆண்டில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 0.5 ஆகக் காணப்படும் என அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அப்பொழுது உலகத்தில் சனத்தொகை கூடிய நாடாக சீனா இருக்கின்றபோதும், இந்தியா அதனை மிஞ்சிச் செல்வதற்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பொருளாதார விருத்தியால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்து அதனால் அவற்றின் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சனத்தொகைக் கணப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், பூமியில் எத்தனைபேர் வாழமுடியும் என்பது பற்றி இதுவரை கணிப்பிடப்படவில்லை என வெஷிங்டனில் செயற்பட்டுவரும் பூரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பூமியில் வாழக்கூடியவர்களின் சனத்தொகை அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில்மய நாடுகள் ஏனைய வளங்களுக்குச் சமமான அளவு எரிபொருளையும் பயன்படுத்துகின்றன. எனினும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண் சராசரியாக 6ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தின் மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளில் ஒரு பெண் 7 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளன.


ஐஎன்லங்கா இணையம்

Monday, October 13, 2008

அமெரிக்கா மீது சீறும் இலங்கை - உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான்.


அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு.
உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம்.


இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெரிக்காவின் பக்கச்சார் பற்ற அவதானிப்பு அறிக்கையே கொழும்பை கடும் சீற்றத் துக்கு ஆழ்த்தியிருக்கின்றது.


அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழில் அலுவலகப் பிரிவு உலகில் 196 நாடுக ளில் மேற்படி துறைகள் தொடர்பான தனது அவதானிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அமெரிக்க வெளி விவகார அமைச்சு வருடா வருடம் மேற்கொள்ளும் வழமை யான நடவடிக்கையே இது. கடந்த ஆண்டுக்கான அவதானிப்பு அறிக்கையே சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதி லேயே கொழும்பு அரச நிர்வாகத்தின் மோசமான மனித உரிமை மீறல் போக்கை வாங்குவாங்கெனக் கீறிக் கிழித்திருக்கின்றது அமெரிக்கா.


இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக அரச படைகளா லும், துணைப் படைக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட் டிருக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இங்கு பெரும் இனப் படுகொலையாக, மனிதப் பேரவலமாக வடி வெடுத்திருக்கின்றன. இதனை தமிழர் தரப்பு மட்டுமல்ல சுயா தீனப் பார்வையாளர்கள் அனைவரும் அறிவர்.


பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதப் பேரழிவு நடவடிக்கைகளை இனப்படுகொலை கலாசாரத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளதுடன் நிலைமை பேராபத்துக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தொடர்பான அபாய எச்சரிக்கையையும் வெளியிட்டு வருகின்றன.


இப்படி உண்மையை அம்பலப்படுத்தும் அமைப்புக்க ளின் பட்டியல் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிக்கான குழு மற்றும் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸில் உட்பட பல்வேறு ஐ.நா அமைப்புகள் என்று நீண்டு செல்கின்றது.


இவ்வாறு சர்வதேச அமைப்புகள் விசேடமாக மனித உரி மைகள் விவகாரத்தைக் குறிப்பாகவும், பிரத்தியேகமாகவும் கையாளும் அமைப்புகள் புட்டுக்காட்டிய உண்மைகளையே இப்போது அமெரிக்காவும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால்அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய விட யங்கள் இட்டுக் கட்டியவை என்று கூறுகிறது இலங்கை.


நெருப்புக் கோழி தான் நிலத்துக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று கருது மாம். அது போலவே தென்னிலங்கையும், தமிழர் தாயகத்தில் தனது படைகள் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் தான் புரியும் அராஜகங்களை தனது தென்னிலங்கை ஊடகங்கள் மூலம் சிங்கள மக்களுக்கு மூடி மறைத்து ஒழித்துக் கொண்டு அதனால் முழு உலகத்துக்குமே அது தெரியாமல் போய்விட் டது என்று எண்ணிக்கொள்கின்றது.


அப்படியல்ல, நவீன தொடர்பாடல் முறை வசதிகளின் கீழ் எல்லாமே அம்பலமாகி, சர்வதேசத்துக்கும் சகல உண்மைகளும் தெரியும் என்ற யதார்த்தம் புரியும்போது அதைக் கொழும்பி னால் சீரணிக்க முடியவில்லை; சகிக்க இயலவில்லை.


அதனால்தான் உண்மைகளை அம்பலப்படுத்தும் தரப்புக் களுக்கும் எதிராகத் துள்ளிக் குதிக்கின்றது கொழும்பு. சர்வ தேச பொலிஸ்காரனான அமெரிக்காவும் இப்படி உண்மை யைப் போட்டுடைத்திருப்பதை கொழும்பால் தாங்கிக் கொள் ளவே முடியவில்லை.


அதனாலேயே அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடு என்று கூடப் பார்க்காமல் அதன் கொழும்புக்கான தூதுவரை அழைப்பித்து தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித் திருக்கின்றது கொழும்பு.


அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களை "வெறுமனே செவி வழித் தகவல்கள்' என்றும் "ஆதாரமற்றவை' என்றும் "வேண்டுமென்றே பெரிது படுத்தப்பட்டவை' என்றும் "மழுப் பல் விவகாரங்கள்' என்றும் காரசாரமாக விமர்சித்திருக்கின்றது கொழும்பு. அதுமட்டுமல்ல "யுத்த களத்திலும் சர்வதேச மட் டத்திலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாது தடு மாறும் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவின் இந்த அறிக்கை உயிர் வாழ்வுக்கான பிராணவாயுவை அளிக்கின்றது' என்ற அளவுக்கு குறை கூறும் நிலைக்கும் கொழும்பு சென்றுள்ளது. ஆக, இந்த அறிக்கை மூலம் அமெரிக்கா புலிகளுக்கு உதவ முற்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்தும் கட்டத்துக்கு கொழும்பின் இக்கட்டு சிக்கலாகியுள்ளது.


ஆனால் கொழும்பின் இந்தக் குற்றச்சாட்டைத் தூக்கி வீசிவிட்டது அமெரிக்கா. தனது வெளிப்படுத்தல்கள் நியா மானவை, நேர்மையான நோக்கம் கொண்டவை என இரண்டு வரிகளில் குறிப்பிட்டு இலங்கையின் குற்றச்சாட்டை அடி யோடு நிராகரித்துவிட்டது அமெரிக்கா.


அமெரிக்கா தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டிய விட யங்கள் போலியான தகவல்களையும் வெறும் பத்திரிகைச் செய்திகளையும் பின்னணியாகக் கொண்டவை என இலங்கை இந்தக் கட்டத்தில் கூறியிருக்கின்ற கருத்தும் கூட இன்றைய நிலையில் கவனிக்கத்தக்கது. ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இச்சமயத்தில் அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களுக்கு பத்திரிகைகள் மீதும் பொறுப்பைப் போடும் ஆட்சித் தரப்பின் எத்தனம், புதிய நெருக்கடிகள் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றன.


தமிழர்கள் எதிர்நோக்கும் மோசமான நெருக்கடிகள் பற்றிய விடயங்களை உலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஏற்கனவே பலத்த சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.


இந்தச் சமயத்தில் இன ரீதியாகத் தமிழர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றிய நிலைமையை அமெரிக்கா அம் பலப்படுத்தியமைக்கு ஊடகங்களைப் பொறுப்பாக்கும் கொழும்பின் எத்தனம் பல செய்திகளைச் சொல்லாமல் சொல் லுகின்றது. இதனை ஊடகங்களும், ஊடகவியலாளரும் எச்ச ரிக்கை அறிவிப்பாகக் கவனத்தில் எடுப்பது முக்கியமாகும்.

Saturday, October 11, 2008

ஐக்கிய நாடுகள் சபை


அமைவு:

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.வின் தலைமச் செயலகத்தில் 191 நாடுகள் கூடி உலகப் பிரச்சனைகளை
ஆராய்ந்து அவற்றுக்கு சுமுகமான முடிவுகளை எட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மனித உரிமைகளுக்கு உலகெங்கிலும் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கும் நடுவமாக ஐ.நா. சபை பணியாற்றி வருகிறது.

பணிகள்:

இப்பணியில் 30க்கும் மேற்பட்ட இணை நிறுவனங்களினை இச் சபை கொண்டு இயங்குகின்றது. இவை எல்லாவற்றினையும் சேர்து ஐ.நா. இயங்கு முறை வடிவமைக்கப் பட்டுள்ளது. ஐ.நா.வும் அதன் குடும்பத்திலுள்ள நிறுவனங்களும் சேர்ந்து நாளும் பொழுதும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், அதனை வளர்க்கவும், சுற்றுச் சூழலினை பாதுகாப்பதிலும், நோய்களுக்கெதிராகவும் வறுமைக்கெதிராகவும் செயற்படுவதிலும் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா. அமைப்புகள் பாதுகாப்பானதும் திறனுடையதுமாகிய வான்வழி போக்குவரத்துக்களிற்கான நியமங்களினை வடிவமைத்தும் தொலைத்தொடர்புகளை மேம்படுத்துவதில் உதவிகள் புரிந்தும், நுகர்வோர் பாதுகாப்பினை உறுத்திப்படுத்தியும் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சர்வதேச போதைப்பொருட் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கெதிரான செயற்பாடுகளை முன்நின்று செயற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதிலும் ஐ.நா.வும் அதன் இணை நிறுவனங்களும் சேர்ந்து அகதிகளுக்கு உதவி புரிவதிலும், கண்ணி வெடிகளை அப்புறப்படுத்துவதிலும் ஈடுபடுவதோடல்லாது உணவுப் பொருள் உற்பத்திகளை வளர்ப்பதிலும் எய்ட்ஸ் நோய்கெதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

வரலாறு:

ஐக்கிய நாடுகள்” என்ற பதம் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1940 களில் இருந்த பிராங்லின் டி. ரூஸ்வெல்ற் என்பவரால் முதன் முறையாக இரண்டாம் உலகப் போரின் போது, யனவரி முதலாம் திகதி 1942 ஆம் ஆண்டில் “ஐக்கிய நாடுகளின் அங்குரார்ப்பணத்தில்”வைத்து 26 சேர்ந்து தீவிரவாத சக்திகளுக்கெதிராகப் போராடும் உறுதியினை எடுத்து கொண்ட போது உபயோகிக்கப்பட்டது. எனினும் அச் சமயத்தில் ஐ.நா. ஒரு போர் கால கூட்டணியாகவே இருந்தது.

1865இல் சர்வதேச தந்தி நிறுவனம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சர்வதேச தொலைத்தொடர்புகள் ஒன்றியமும், 1874 இல் உருவாக்கப்பட்ட தபால் ஒன்றியமும் தற்போது ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ நிறுவனங்களாக இருந்து வருகின்றன.

பின்னர் ஐ.நா. வானது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோ நகரில் வைத்து ஓர் அனைத்துலக நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. எனினும், 51 பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மத்திய மண்டபத்தில் கூடியது.

1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த League of Nations என்னும் நிறுவனம் இருந்து வந்தது.

ஐ.நா. அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ”சமாதான விரும்பி” நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. வருடாவருடம் ஒக்டோபர் 24ஆம் திகதியில் ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் முறைமை:

ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் உள்ளடக்கியது. அவையாவன:

* ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
* ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
* ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் செயலகம்
* அனைத்துலக நீதிமன்றம்

ஆதாரம்:
1. htttp://www.un.org
2. http://ta.wikipedia.org

Friday, October 10, 2008

இனவாதமும் சுயநிர்ணயமும்


திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது. ஜனநாயகக் கோரிக்கை உள்ளடக்கிய தேசிய போராட்டத்தை இது பின் தள்ளியது. இதை மார்க்சியவாதிகள் இலங்கை வரலாற்றில் சரியாக அடையாளம் காணவில்லை. திட்டமிட்ட இன அழிப்பிலான நிலப்பகிர்வு வர்க்க போராட்டத்துக்கு எதிராக இருப்பதை அடையாளம் காணத்தவறியது, இலங்கையில் வர்க்கப் போராட்த்தின் பின்னடைவுக்கு வழி சமைத்து.

அத்துடன் கல்வியில் இனவாத அடிப்படையிலான தரப்படுத்தல், இனவாத அடிப்படையிலான வேலைவாய்ப்பு கூட இனங்களை பிளந்து நடத்தியதன் மூலம், வர்க்கப் போராட்த்தை பின் தள்ளமுடிந்தது. வரலாற்று ரீதியாக ஆளும் வர்க்கங்கள் இனங்களைப் பிளந்ததன் மூலமும், சமூக லாபங்களை ஒரு இனம் சார்ந்து மாற்றியதன் மூலமும் வர்க்கப் போராட்த்தை இனவாத சேற்றில் மூழ்கடித்தனர். உண்மையில் இனவாதம் சார்ந்து நடத்திய வர்க்க ஆட்சியை எதிர்த்து போராட வேண்டிய மார்க்சிய கட்சிகள், இனவாத சேற்றை தமக்கு அப்பியதன் மூலம் அதன் சேற்றில் மூழ்கினர். உண்மையில் வர்க்கப் போராட்டம் இந்த இனவாத நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்டிருக்க வேண்டும்;. ஆனால் அது நடத்தப்படவேயில்லை. இதை மார்க்சியத்துக்கு அன்னியமான விடையமாக காட்டிதயன் மூலம், இனவாத்தை கொழுவேற்றவதில் துணைநின்றனர் என்றால் மிகையாகது.

மறுதளத்தில் தேசம், தேசியம் என்பதை வெறும் தமிழன் சிங்களவன் ஆட்சியாக சித்தரிப்பது நிகழ்கின்றது. இதில் இருந்து தமிழன் அல்லது சிங்களவனை எதிர்ப்பதை தேசியமாக காட்டுவது நிகழ்கின்றது. இந்த இனம் கடந்து இலங்கையின் பொதுவான இனவாதமாக உள்ளது. ஒரு தேசம் என்பது, அந்த தேசம் தனது உள்சுற்று சந்தை வடிவத்தில் நிர்மானமாகின்றது என்பதை, இனத் தேசியம் மறுக்கின்றது தனது சொந்த தேசிய பொருளாதாரத்தை அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக கட்டமைக்காத தேசியம், உண்மையில் ஒரு தேசமாகவோ தேசியமாகவோ இருப்பதில்லை. இதை இன குறுந் தேசிய வாதிகளும், தேசிய எதிர்ப்பாளர்களும் ஒரேவிதமாக மறுக்கின்றனர். ஏகாதிபத்தியம் கட்டமைக்கும் தனது பொருளாதார அமைப்புக்குள், தேசங்களையும் தேசியங்களையும் உட் செரித்து மறுகாலனியாக மாற்றும் பொதுவான தன்மைக்குள் தேசிய போராட்டங்களும் தேசிய அரசுகளும் அடிமையாகின்றன. இதையே இன்றைய தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். இதையே தேசிய எதிர்ப்பாளார்களும் செய்கின்றனர். சுயநிர்ணயம் என்பது அடிப்படையான பொருளாதார கட்டமைப்பை மறுக்கும் தேசியமாக விளக்குவது, இன்றைய நவீன தேசிய திரிபாகும். இது உலகமயமாதல் கோட்பாட்டில் தொங்குவதாகும்.

சிறீலங்காவின் வருமானத்தைவிட கடன் தொகை அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம்

சிறீலங்காவின் கடன் தொகை வருமானத்தை விட அதிகரித்துச் செல்வதாகவும் சிறீலங்கா அரசாங்கத்தால் நாளாந்த செலவீனங்களை பூர்த்திசெய்ய கூடியளவுக்கு வருமானத்தை ஈட்டமுடியாதுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் முதலீட்டு உருவாக்கம் இப்பிராந்தியத்திலேயே மிகக்குறைவாக உள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 101 வீதம் கடன் உள்ளதாகவும் கடந்த ஜந்து வருடத்தில் இப்பிரதேசத்தின் கடன்தொகை வீதத்தினை மிஞ்சியுள்ளதாகவும் நேபாளத்தில் இது 63 வீதமும், பங்களதேசில் 49 வீதமும் இந்தியாவில் 85 வீதமம் ஆக காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

2004 ம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் பின் 2006 ம் ஆண்டு சிறீலங்காவின் வளர்ச்சிவீதம் 7.4 வீதமாக காணப்பட்டதாகவும் இது 2007 ம் ஆண்டு முதல் அரையாண்டுப்பகுதியில் 6.2 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 7, 2008

வாழ்வின் அழிவுக்கு எலும்புகள் காரணமாவதை தடுப்பது எப்படி


ஒஸ்ரியோபொரோஸிஸ் ஏற்படுத்தும் பின் விளைவுகள்:

ஒஸ்ரியோபொரோஸிஸ் உள்ளவர்கள் ஒரு சிறு காயத்தின் பின்னர் ஒரு எலும்பை உடைத்துக் கொள்வது சாதாரணமானது. இடுப்பு, மணிக்கட்டு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டில் முறிவுகள் விழுவதனால் ஏற்படுகின்றன.

முள்ளந்தண்டின் எலும்புகள் பலவீனமுற்ற நிலையில் ஒன்றுடன் ஒன்று நெருக்கப்படுவதால் முறிவடையக் கூடும். துண்டங்கள் நெருக்குப்படும் போது முள்ளந்தண்டு வளைவடையும். இதனால் நோ ஏற்படுவதுடன் உயரத்தில் குறைவும் ஏற்படும். சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கலும் ஏற்படும். ஒஸ்ரியோ பொரோசசிஸ்சிற்கான சிகிச்சை சாதாரணமாக எலும்புகளின் உடைவுக்கு காரணமாயிருக்கக் கூடிய கலங்களின் செயற்பாடுகளை தடை செய்வதற்கான மருந்து வகைகள் இதற்கெனக் கொடுக்கப்படுகின்றன. இதனால் எலும்புப் பொருண்மை அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். முறிவடையும் ஆபத்துக்கள் குறைவடையும். முதல் வருடச் சிகிச்சையினுள் புதிதான முள்ளந்தண்டு முறிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் 60 70% தினால் குறைவடைகின்றது. போதியளவு கல்சியமும் விற்றமின் "டீ' யும் எடுத்தல் சிபாரிசு செய்யப்படுகிறது.

எனக்கு ஒஸரியோபொரோஸிஸ் இருப்பதாக காணப்படுமிடத்து நான் என்ன செய்தல் வேண்டும்?

பணிக்கப்பட்ட விதத்தில் சிகிச்சையை மேற்கொள்ளவும் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக சிகிச்சையை பல வருடங்களுக்குத் தொடர வேண்டியிருக்கும். உணவு:

உணவும் அதில் இருக்கக் கூடிய கல்சியத்தின் அளவும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தினமும் 1500 மி.கி. கல்சியம் அவசியமாகும். பாலுணவு வகையில் கல்சியம் நிறைவாக உள்ளது. ஏதேனுமொரு கல்சிய உணவை எடுக்கவும் வாத நோயியல் மருத்துவரை நாடவும்

வெய்யிலை பயன்படுத்தவும்

விற்றமின் "டீ' கல்சியம் குடலினால் உள்ளுறுஞ்சப்படும் வேகத்தை அதிகரிக்கும் என்பதால் முக்கியமானது தினமும் வெய்யிலில் உலõவுங்கள். அவ்வாறில்லையேல் உங்கள் உணவில் விற்றமின் "டீ' யை சேர்க்கும்படி வாத நோய் மருத்துவர் அறிவுறுத்துவார். (மீன் எண்ணெய் குளிசை)தினமும் உடற்பயிற்சி கவனத்துடன்:

முள்ளந்தண்டில் திடீர் அழுத்தங்கள் ஏற்பட்டு முறிவுகள் ஏற்பட அனுமதித்தலானது. பாரம் தூக்குதல், முன்புறமாக குனிதல் என்பனவற்றை தவிர்க்கவும்.

*படுக்கையின் போது முழங்காலில் நின்று, குந்தியிருந்து படுத்தல் வேண்டும்.

*தரையிலிருந்து எதனையாவது எடுக்கும்போது முதுகுப் பக்கம் நேராக இருக்கும்படி முழங் கால்களை மடித்து எடுக்கவும். *பாரமான பொருட்கள், சூட்கேஸ் போன்றவற்றை காவுதல் ஆகாது.*திடீரென அசைவுகளை ஏற்படுத்துதல் ஆகாது. வீழ்தலுக்கான ஏது நிலையை குறைத்தல் நாம் முதியவர்களாக ஆகும் போது நிலத்தில் வீழ்தலுக்கான ஏது நிலையும் அதிகமாகும். வீழ்தலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இனங்கண்டு அவற்றை சரியான இடத்தில் வைத்தல் வேண்டும்.*கண்பார்வையை சரி செய்தல் வேண்டும். *நடத்தல், சமனிலை பேணல் ஆகியவற்றில் பிரச்சினைகளை தவிர்த்தல். (உடம்பு பிடித்தல்/ ஊன்றுதடி)*மதுபானத்தின் அளவை எல்லைப்படுத்துதல். *இருக்கை நிலைகளை திடீரென மாற்றுதலாகாது.

*நடந்து திரியும் பகுதிகளில் தடங்கல்கள் இருத்தலாகாது.*வாயிற்படி/ கதவடி நில விரிப்புகளில் கவனம் செலுத்தவும். *மின் வெளிச்சத்தை வேண்டிய இடங்களில் வேண்டிய அளவுக்கு வைத்திருக்கவும், சுவிச்சுகளுக்கு பொருத்தமான இடங்களை முடிவு செய்யவும். *தளபாடங்களின் உயரத்தை சரி செய்யவும் (கட்டில் நாற்காலி/ மலசல கூட ஆசனம் என்பன) *புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைத்தல் ஒஸ்ரி÷õ பொரோசஸ் வாய்ப்புக்களை அதிகரிக்கும். பிந்திய நிலையிலும் முந்துவது நல்லதே!

சுறுசுறுப்பான வாழ்வை நடத்துதலும் கல்சியம் நிறைந்த உணவை உண்பதும் ஒஸ்ரியோபொரோஸஸ் பிணியை தடுக்க உதவும். சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த எவ்வளவுக்கு முந்துகிறோமோ அந்தளவுக்கு முறிவுகள் ஏற்படக்கூடிய ஏது நிலையினின்றும் எம்மைக் காத்துக் கொள்கின்றோம். (கட்டுரையாளர் ஸ்ரீ ஜயவர்த்தன வைத்தியசாலையின் வாத நோயியல் ஆலோசகராவர்)

கல்வியில் பால்நிலை

பால்நிலை என்றால் என்ன?

மனிதர்கள் தங்கள் இனப்பெருக்கத் தேவைகளின் காரணமாக ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டிருப்பதை நாம் பால் என்னும் பதத்தினால் குறிப்பிடுவோம். பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் பொருந்துவதாகும். அனேக உயிரினங்களுக்கு மத்தியிலும் ஆண் உயிரினம்; பெண் உயிரினம் எனப் பால் வேறுபாடுகளுள்ள இனங்கள் உண்டு.

ஆயின், பால்நிலை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களுமாகும். “பால் சமூகத்தில் வகிக்கின்ற நிலை” பால்நிலை என்று பொருள் கொள்ளலாம். சமூகமய மாக்கலினால் உருவாதலினால் பால்நிலை என்பது மனிதர்கள் மத்தியிலே மட்டும்தான் காணப்படுகின்றது. ஆண்கள் வீரமுள்ளவர்கள், தைரியசாலிகள், அறிவு பூர்வமானவர்கள் என்பதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் தலைவர்களாக வருவது பொருத்தமாகும் என்று தற்சமயம் நிலவும் பால்நிலைக் கோட்பாடு; கருதுகின்றது. அதே போன்று பெண்கள் மென்மையான சுபாவம் உடையவர்கள், அழகானவர்கள், நாணம் கொண்டவர்கள், இலகுவாக அச்சமடைவார்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், கற்பு உடையவர்களாக இருக்க வேண்டியவர்கள், சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்கள் என்று இக்கோட்பாடு எடுத்தியம்புகின்றது.


ஆறுதலாக இருந்து பால்நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிக்கும் குணாதிசயங்களை ஆராய்ந்து பார்த்தோமானால், அவையெல்லாமே ஆண்களுக்குக் கீழே அடங்கி வாழ்ந்து அவர்களின் வெவ்வேறு உடல் தேவைகளைத் தீர்த்து வைக்கவும் அவர்களுக்கேயுரிய வாரிசுகளைப் பெற்றுக் கொடுக்கவும் உகந்தவர்களாகப் பெண்களைஉருவாக்குவதே அதன் நோக்கம் என்பதை உணரலாம். அழகு, அடக்கம், கற்பு, வீட்டுக்குரியவள் போன்ற கருத்துக்களெல்லாம் இதனை விளக்குகின்றது.

பால் என்கின்ற உயிரியல் வேறுபாட்டிற்கும் பால்நிலைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றனவாயினும் உயிரியல் இயல்புகளுக்கு சற்றும் பொருந்தாத வகையிலும் பால்நிலை உருவாக்கப்படலாம். இதற்கு உதாரணமாக, தாய்மை என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையில் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரம் என்று பொதுவாகவே சமூகம் வலியுறுத்துவதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இது உயிரியல் ரீதியாகவும் பெண்களுக்குப் பொருந்துவதாகும். இயற்கையும் இனப்பெருக்கத்தின் முக்கிய பங்குதாரராகப் பெண்களைப் படைத்ததனால் பெண்களின் உடல் அங்கங்களையும் வாழ்க்கை வட்டத்தினையும் அதை மையப்படுத்தியே உருவாக்கியிருப்பதை நாம் காணலாம். இங்கு பால்நிலை என்பது பால் என்பதடன் பொருந்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில், கணவன் ஒருவனால்தான் பெண்ணுக்கு வாழ்வு கிட்டுகின்றது என்று பால்நிலைக் கோட்பாடானது பெண்ணின் பாத்திரத்தினை ஒரு ஆணின் மீது தங்கி நிற்கும் பாத்திரமாகச் சித்தரிக்கின்றது. ஆனால் உயிரியல் ரீதியாக, ஒரு பெண் ஆணின் மீது தங்கி நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லையாகும். இனப் பெருக்கத்தில் கருக்கட்டலில் மட்டும்தான் ஒரு ஆண் பங்கு வகிக்கின்றான். அதன் பின் குழந்தையைப் பெற்று வளர்ப்பதிலெல்லாம் இயற்கை ஒரு மனித ஆணுக்கு எந்தவிதமான பாத்திரத்தினையும் வழங்கவில்லை யென்பதே உண்மையாகும்.

இதற்கு மாறாக, தூக்கணாங்குருவி போன்ற சில பறவை இனங்களை எடுத்துக் கொண்டால், கூடு கட்டுவதிலிருந்து குஞ்சுகளைப் பராமரிக்கும் வரையில் அந்த ஆண் பறவைகள் இயற்கையாகவே பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, மனிதர்களைப் பொறுத்தவரையில் இது முற்று முழுதாக சமூகத்தினால் உருவகப்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பால்நிலை உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?

மனித சமுதாயத்தை முன்னோக்கித் தள்ளுவதற்கு இரண்டு வகையான நடவடிக்கைகள் வேண்டும். ஒன்று உற்பத்தி, மற்றது இனப்பெருக்கம் (உற்பத்தி, மீளுற்பத்தி என மார்க்சியவாதம் இதனை விளக்குகின்றது). இது இரண்டும் நடந்தால்தான் மனிதர்கள் தங்கள் உடலின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தமது இனத்தையும் தொடர்ந்து இந்தப் பூமியில் தக்கவைத்துக் கொள்ளலாம்.

இந்த இரு அம்சங்களையும் ஒழுங்குபடுத்துவதுதான் சமூகமயமாக்கலின் நோக்கமாகும். அந்த ஒழுங்கின் வழியேதான் ஒவ்வொரு விதமான சமூகங்களும் தோன்றின. தவிரவும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மனித சமுதாயத்தின் உற்பத்தி ஒழுங்குமுறையும் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறையும் மாறுபாடடைந்து வந்திருக்கின்றது. பார்க்கப்போனால், உற்பத்தி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டதோ அதற்கு ஏற்ற முறையில்தான் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டது. உற்பத்தி ஒழுங்கமைக்கப்படும் முறை பொருளாதாரக் கட்டமைப்பாக இருக்க, மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறை அக்காலத்தின் பால்நிலை உறவுகளாயின.

இதை மேலும் விளக்குவதற்கு ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலம் உற்பத்தியை ஒழுங்கமைத்த முறையையும் அதற்கேற்ற மீளுற்பத்தி தன்னை ஒழுங்கமைத்த முறையையும் நாம்உதாரணங்களினூடாகப் பாக்கலாம். ஆதியில் பொதுவுடைமை வழங்கியிருந்த காலம். கூட்டுற்பத்தி முறைகளும் அதைக் கொண்ட நடத்தத் தேவையான கூட்டுக் குடும்ப முறைகளும் பரவியிருந்தன. இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி ஒரு தார மணம் என்பது தெரியாத காலமாகவும் இருந்தது. எனவே, கற்பு போன்ற நாம் இன்று பெண்களுக்கேயுரியது என்று அறிந்திருக்கின்ற பண்புகளை மனிதகுலம் அன்று அறிந்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

இக்காலகட்டத்திற்குப் பின்னர், தனியுடைமை தோன்றியது. ஆண்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில்லாதவர்களாக நடமாடித் திரியும் சுதந்திரம் பெற்றதனாலே தனியுடைமை அமைப்பின் கீழ் அவாகள் சொத்துக்களை உழைக்கும் வசதி பெற்றவர்களாக மாறினார்கள். சமூகத்தில் அவர்கள் ஆதிக்கமும் ஓங்கியது. தாம் சேர்த்த சொத்துக்களுக்கான வாரிசுகளைத் தரும் கருவிகளாக பெண்களை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இதனால், தனியுடைமையுடன் ஒருதார மணமும் தோன்றியது. ஒரு தாரமணத்துடன் பெண்கள் சமூகத்தில் தாம் வகித்த உயரிய அந்தஸ்தினை இழந்தனர்.

ஆண்டான் - அடிமை உறவு கொண்ட சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், உலகமயமாக்கம் என உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு மாறி வந்திருக்கின்றது. இந்த ஒவ்வொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் ஏற்றது போல ஆண்களினதும் பெண்களினதும் சமூகப் பாத்திரங்கள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. எங்கு பெண்கள் பொருளாதார உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தார்களோ அங்கெல்லாம் அவர்களின் நிலை சற்று உயர்ந்த அந்தஸ்து உடையதாக இருந்ததைக் காணலாம்.

பால்நிலை உறவுகள் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன?

பால்நிலை என்பது இயற்கையால் அல்ல மனிதர்களால்உருவாக்கப்பட்டது என்பதனால் அதனைக் காலம் காலமாக தக்கவைத்துக் கொள்வதற்கு மனிதர்கள் பெரும் பிரயாசைகளை எடுக்க வேண்டியிருந்தது. ஒரு சந்ததியினருக்கு ஒரு முறை மூளைச்சலவை செய்தால் போதாதே. ஒருவருடைய வாழ்நாளில் அவர் என்றும் மாறாதிருக்க தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்பதுடன், அவ்வாறே ஒவ்வொரு சந்ததியினருக்கும் செய்து கொண்டு வரப்பட வேண்டும்.

இதற்காக மதக் கோட்பாடுகளையும் சம்பிரதாயச் சடங்குகளையும் உருவாக்கினார்கள். இவற்றின் மூலம், இந்த உலகத்தில் நிலவும் பால்நிலை உறவுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என நிலைநாட்டினர். சிறு வயது முதல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வளர்க்கும் முறைகளில் இத்தகைய உறவுகளை வலியுறுத்தினர். பெண்கள் தங்கள் நிலையை மாற்றுவதற்கான ஆற்றல்களை தம்முள் வளர்த்தெடுத்துக் கொள்ளும் சகல வாய்ப்புக்களும் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டன. உதாரணமாகக் கல்வி அவர்களுக்குப் பல காலமாக நிராகரிக்கப்பட்டு வந்தது. நடமாடும் சுதந்திரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு வெளியுலகம் தெரியாதவர்களாக வளர்க்கப்பட்டார்கள். அரசியலில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயகம் தோன்றிய நாடுகள் பலவற்றில் அங்கிருந்த அடிமைச் சமூகம் போலவே பெண்களையும் பிரஜைகள் என்றுகூட அந்த அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெண்களுக்கு மூளை என்ற அங்கம் இல்லை என்றுகூட சாதித்த விஞ்ஞான ஆய்வுகள் ஆண்களினால் செய்யப்பட்டன. யாரும் ஒரு பெண் ஒரு கொஞ்சம் வேறுபாடான நடத்தையைக் கொண்டாளாயின் ஈவிரக்கமின்றி அவள் கொலை செய்யப்பட்டாள். கல்லெறிந்து கொல்லப்படுகின்றதும் உயிருடன் கட்டி வைத்து தீ மூட்டப்படுவதும் பெண்களுக்கு இன்றுவரை இழைக்கப்படும் கொடுமைகளில் ஒரு சிலவாகும். இன்றோ, பெண்களுக்கும் ஆண்களுக்கும் மூளைச் சலவை செய்யும் இதே வேலையை வேறு உருவில் எமது ஊடகங்களும், கல்விக் கோட்பாடுகளும் செய்து வருகின்றன.

இவ்வாறு, பரம்பரை பரம்பரையாகச் செயற்படுத்திய சமூகமயமாக்கலின் விளைவாகத்தான் பெண்கள் நாம் இன்று பார்க்கும் பெண்களாக உருவாகியிருக்கின்றனர், ஆண்கள் நாம் இன்று பார்க்கும் ஆண்களாக இருக்கின்றனர். சமூக வழக்கங்கள் ஆண்களையும் பெண்களையும் உருவாக்க, அந்த ஆண்களும் பெண்களும் திரும்ப சமூக வழக்கங்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில்தான் பால்நிலை உறவுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.

நாம் இன்று காணும் முறைகளில் பால்நிலை உறவுகள் நிலவுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

பால்நிலை ஒரு சமூகத்தின் ஆண்களினதும் பெண்களினதும் பாத்திரங்களை வரையறுக்கின்றது. அவாகள் ஒரு நிலைக்கு மேலே மாறுபாடான நடத்தை கொண்டவர்களாக இருக்க முடியாதபடி குறுக்குகின்றது. இதனால் குறிப்பாக பெண்கள் தங்களது வாழ்க்கையில் பல வாய்ப்புக்களையும் வளங்களையும் இழக்கின்றனர். அவர்களுக்கு தமது சொந்த அபிலாஷைகளுக்குரியவாறு தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தெரிவு இல்லாமல் போகின்றது. திருமணம், குடும்பம் என்பதுதான் பெண்களின் பிரதான கவனமாக இருக்கவேண்டும் என்று சமூகம் தனியே பெண்களின்மீது அந்தச் சுமையை ஏற்றுவதனால் அனேகம் பெண்கள் தங்கள் வாழ்வின் இலட்சியங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டியதாக இருக்கின்றது.


இந்த உலகில் தொழிலதிபர்களாக கோடிக்கணக்கான முதலீடுகளை ஆள்பவர்களும், மதத் தலைவர்களாக ஒரு சமூகத்தின் ஆன்மீக வாழ்வைக் கட்டுப்படுத்துபவர்களும், அரசியல் உயர் தலைவர்களாக வருபவர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். பெண்கள் இன்னும் அனேகமாகத் தங்கள் உழைப்பினைக் குடும்பத்திற்கும்சமூகத்திற்கும் ஓயாமல் ஒழியாமல் வழங்கும் தொழிலாளிகளாகத்தான் தொடருகின்றனர்.

ஆண்களுக்கு பெண்களளவு கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அவர்களுக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு ஆணின் கெட்டித்தனமும் இயல்பும் எப்படியிருந்தாலும் கூட அவன் உழைப்பவனாக, உத்தியோகம் பார்ப்பவனாக, வீரமுள்ளவனாக இருக்க வேண்டுமென சமூகம் எதிர்பார்த்து அழுத்தங்களைக் கொடுக்கின்றது. இது ஒரு அநீதியாகும். அதனை மனித உரிமை மீறலாகக்கூட விவரிக்கலாம். இந்த நிலை மாறி, ஒவ்வொரு மனிதரும் தமது ஆற்றல்கள், விருப்பங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளவும், தம்மை வெளிக்காட்டவும், சுதந்திரம் இருக்கும் நாள் வரவேண்டும்.

கல்விக்கும் பால்நிலைக்கும் என்ன தொடர்பு?

கல்வி ஒரு மனிதனை உருவாக்குகின்றது என்று சொன்னால் மிகையாகாது. இளவயது முதல் செல்வாக்குச் செலுத்தி, ஒருவரின் சிந்தனா முறைகள், கண்ணோட்டங்கள், விழுமியங்கள். ஏன், பழக்க வழக்கங்களும்கூட கல்வியினால் உருவாக்கப்படலாம். பால்நிலை உறவுகளும், ஒருவரின் சிந்தனா முறையிலும்கண்ணோட்டங்களிலும் விழுமியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் உணர்வுபூர்வமாக நிலவுகின்றது என்பதை நாம் முன்னர் பார்த்தோம். இதிலிருந்து பால்நிலை உறவுகளை மாற்றுவதில் கல்வித் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதைப் புரிந்து கொள்ளலாம். சமூகமயமாக்கலைக்கூட மேவி, சுற்றுச் சூழலுக்கும் அப்பாற்பட்ட புதிய சிந்தனா முறைகளைத் தூண்டக்கூடிய கருவி கல்வியாகும்.

அது தவிர, நிலவும் பால்நிலை உறவுகளைத் தக்கவைத்து பலப்படுத்தும் கருவியாகவும் கல்வி தொழிற்பட்டு வந்திருக்கின்றது. எமது உலகம் எதை முக்கியமாகக் கருதி அதைப் பற்றிய அறிவுத் தேடலில் ஈடுபட்டிருக்கின்றது, ஆவணப்படுத்தியிருக்கின்றது, கற்றிருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே அதற்குள் உள்ள பால்நிலை ஏற்றத்தாழ்வுகள் எமக்குப் புலப்படும். வுரலாற்றை எடுத்தாலும் அது ஆண்களின் வரலாறாகத்தான் இருக்கின்றது. மதபோதனைகள் எல்லாம் ஆண்களுக்கு சார்பாகவே இருக்கின்றன. விஞ்ஞானமும் பெண்களுக்கு முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு இன்னமும் பின்னிற்கின்றது. இந்தப் பின்னணியில், கல்வித் திட்டத்தினையே அதற்கேற்ப சீரமைக்கும் பணி நம்முன் உள்ளது.

கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களைப் புகுத்தும் முறைகள் என்ன?

தம்மைச் சூழவுள்ள, தாம் அன்றாடம் பார்க்கும் சமூக உறவுகளை மாற்றி புதிய உறவுகளை நடைமுறைப்படுத்தக்கூடிய விழுமியங்களை மாணவர்கள் மனதில் தோற்றுவிப்பதே கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் நோக்கமாகும். இந்நோக்கம் இரண்டு வழிகளில் அடையப்படலாம். அவை பின்வருமாறு:

1) சமூகத்தில் தற்போது நிலவும் அசமத்துவமான பால்நிலை உறவுகள் பற்றிய விழுமியங்கள் செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பது அல்லது குறைப்பது

உபயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாடவிதானங்களிலும் பாடப் புத்தகங்களிலும் வெளிப்படையாகவோ அல்லது பூடகமாகவோ அசமத்துவமான பால்நிலை உறவுகள் காட்டப்படுமாயின், அவற்றை மாற்றுவது இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது பாடங்களின் உள்ளடக்கத்தை மாற்றுவது தொடங்கி ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைமைகள் வரை சகல விடயங்களையும் கையாளும். மாற்றவேண்டிய பாட உள்ளடக்கத்திற்கான உதாரணங்களாக, பாடங்களில் வருகின்ற கதைகளில் பெண்களினதும் ஆண்களினதும் பாத்திரங்கள் சமூக மாதிரிகளாக (Stereo Typed Roles) மட்டுமே இருப்பது, உலகப் பெரியார்களின் கதைகள் தனியே ஆண் பெரியார்களின் கதைகளாக இருப்பது, வரலாறுகள் ஆண்கள் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்படுவது, சமூகவியல் பாடங்களில் வீட்டுவேலை போன்ற பெண்களினது தொழில்கள் பெறுமதி மிக்க தொழில்களாகக் கருதப்படாமல் குறிப்பிடப்படுவது ஆகியவற்றைக் கூறலாம்.


ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைகளுக்கு உதாரணமாக அவர்கள் சமூக மாதிரிகளாக ஆண்களையும் பெண்களையும் உருவகப்படுத்தும் கதைகளை ஏற்றுக்கொண்டு எதுவித விமர்சனங்களும் இன்றி மாணவர்களுக்குக் கூறுதல், ‘பொம்பிளைப் பிள்ளை நீர் உமக்கு இந்த வேலை நன்றாக வரும், ஆம்பிளைப்பிள்ளை நீர் இதை நன்றாகச் செய்வீர்..’ என்ற வண்ணம் மாணவர்களுடன் பேசுவது, சமய நம்பிக்கைகள் போன்றவை அசமத்துவ பால்நிலை உறவுகளைச் சித்தரிக்கும்பொழுது அதைப் பற்றிய விளக்கங்களைத் தராமல் கற்பித்துக் கொண்டு போவது, ஆண் ஆசிரியர்களும் பெண் ஆசிரியர்களும் தாம் பாரம்பரிய வேலைப் பிரிவினைகளைத் தங்களுக்குள் எற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கான முன்மாதிரிகளாக இருப்பது, போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2) புதிய சமத்துவமான சமூக விழுமியங்களை மாணவர்கள் சிந்தனையில் உருவாக்குவது

இந்த நடவடிக்கையில் இதற்குரிய புதிய பாடவிதானங்கள் எழுதப்படவேண்டும். குறிப்பாக விடலைப் பருவத்தினருக்கு, பால்நிலை உறவுகள் தோன்றிய காரணங்கள், அவை தம்மை வெளிக்காட்டும் முறைகள், சமத்துவமானதொரு புதிய சமூகத்தின் அம்சங்களைச் சித்தரிக்கும் கதைகள், எமது சமூகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உதவும் ஒப்படைகள், ஆகியவற்றைப் போன்ற விடயங்கள் அவர்கடைய பாடாந்தரத்தில் உள்ளடக்கப்படவேண்டும்.

மேற்கூறிய நடவடிக்கைகள் ஒரு பாரிய பணியாகும். இவற்றைச் செவ்வனே செயற்படுத்துவதற்கு முதலில் அதனைச் செயற்படுத்தும் கல்வியியலாளர்களும் ஆசிரியர்களும் சமூகம் தங்களுக்குள் இதுவரைகாலமும் வளர்த்தெடுத்த தங்கள் கண்ணோட்டங்களிலிருந்தும் விழுமியங்களிலிருந்தும் தாம் விடுபடவேண்டும். சமூகத்தினின்று வேறுபட்டு தாங்கள் தனித்துவமாக நிற்கும் ஆற்றல் இந்த ஆசிரியச் சமூகத்தினருக்கு உண்டா என்பது ஒரு கேள்வியாகும். அவர்கள் இதற்கு விடை பகர்வார்களா?

Thursday, October 2, 2008

சமூகப் பராமரிப்பு நிறுவன நிதி (CEF)



சமூக நிறுவனங்கள் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்துகின்றன. அவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தத் கொழிலைப் பயன்படுத்துகின்றன. வசதி குறைந்தோர் சொந்தக்காலில் நிற்பதற்கு உதவுவதற்காக, சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டு அமைச்சு அதன் சமூக நிறுவன நிதியை (SEF) சமூகப் பராமரிப்பு நிறுவன நிதியாக (CEF) மாற்றியமைக்கிறது. உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கான தொடக்க நிதியை அது வழங்கும். அந்த உதவி, வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவோ, ஈட்டிய ஆதாயத்தில் அவர்களுக்கான திட்டங்களைச் செயற்படுத்துவதாகவோ அமையும்.

சாத்தியப்படும் தொழில் திட்டங்களுக்கு அந்த நிதி ஒதுக்கப்படும். சமூகப் பராமரிப்பு நிறுவன நிதிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனம் தான் செய்யவிருக்கும் தொழில் தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதையும் அது வெறும் சமூகத் திட்டம் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டும். தொழில்கள் ஈட்டும் ஆதாயம் சமூகக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காகச் செலவிடப்பட வேண்டும்.

சமூக நிறுவன நிதி, 2 மில்லியன் வெள்ளியுடன் இந்த நிதி ஆண்டைத் தொடக்கியது. காம்கேர் மேலும் 1 மில்லியன் வெள்ளியைச் சேர்த்து, சமூகப் பராமரிப்பு நிறுவன நிதியை இந்த ஆண்டுக்கு 3 மில்லியன் வெள்ளி ஆக்கியிருக்கிறது.

சமூகப் பராமரிப்பு நிறுவன நிதிக்கு, சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டு அமைச்சிடம் 2005 ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். சமூகப் பராமரிப்பு நிறுவன நிதி பற்றிய மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவேண்டிய இணைய முகவரி: comcare@mcys.gov.sg.

பெண்ணியம்


பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும்
பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.
தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது
வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்

பெண்ணியத்தின் வகைப்பாடுகள்
பெண்ணியம் சார்ந்து இயங்கும் சக்திகளின் சமூக, அரசியல், கோட்பாட்டுச் சார்பு நிலைகளைக்கொண்டு பெண்ணியம் பல வகைப்பாடுகளுள் அடக்கப்படுகிறது. விமர்சனம், ஆய்வு முயற்சிகளை இலகுபடுத்தவும், வேறு பல தேவைகளுக்குமாகச் செய்ய்ப்படும் இத்தகைய வகைப்படுத்தல் முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உலக அளவில் பெண்ணிய வகைப்பாடுகள்

தமிழ்ச் சூழலில் பெண்ணிய வகைப்பாடுகள்

மார்க்சியப் பெண்ணியம்
தலித் பெண்ணியம்
தேசியப் பெண்ணியம்
இந்து மதப் பெண்ணியம்
இஸ்லாமியப் பெண்ணியம்
மரபுசார் பெண்ணியம்
தீவிரப் பெண்ணியம்