Friday, December 12, 2008

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது


அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..!

No comments: